பிறருக்காக நிம்மதி இழக்காதீர்கள்
ஆசிரியராக வேலை பார்க்கும் ராகவனுக்கு கை நிறைய சம்பளம். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா, மாதம் ஒரு முறை ஷாப்பிங், வாரம் ஒரு முறை ஹோட்டல் என்று சந்தோஷமாக வாழ்ந்துவந்தான். இவற்றை எல்லாம் தாண்டி, மாதம் ஒரு தொகையை சேமித்தும் வந்தான்.
ராகவனை நன்கு அறிந்த அவனுடைய உறவினர் ஒருவர் திடீரென வந்து கதவைத் தட்டி மருத்துவச் செலவுக்காக அவசரமாக 10 லட்சம் ரூபாய் கேட்டார். ஒரே மாதத்தில் அந்த பணத்தை திருப்பித் தருவதாக உறுதி கொடுத்தார். அதற்காக வீட்டு பத்திரம் ஒன்றை அடமானமாகக் கொடுத்தார். ராகவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. எனவே, வேறு வழியின்றி சேமிப்பில் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் கொடுத்ததுடன் நில்லாமல், தெரிந்தவர்களிடம் கொஞ்சம் பணமும் கடனாக வாங்கிக் கொடுத்தான்.
பின்னர்தான், அந்த உறவினர் பொய் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த பத்திரமும் பொய். அவர் எக்கச்சக்க கடனில் சிக்கியிருக்கிறார் என்பதும், அவரால் பணத்தை திருப்பித்தர வாய்ப்பே இல்லை என்பதும் புரியவர, அதிர்ந்துபோனான் ராகவன். எளிதாக கடன் கொடுத்து ஏமாந்ததை நினைத்து நினைத்து, தன்னுடைய சந்தோஷத்தை இழந்துவிட்டான்.
அவர் ஒன்றும் அத்தனை முக்கிய உறவினர் இல்லைதான். கொஞ்சம் யோசித்து, சில உறவினர்களிடம் விசாரித்து, ‘இல்லை’ என்று சொல்லியிருந்தால், ராகவனுக்கு இந்த பிரச்னை வந்திருக்காது. ஆனால், பலருக்கு இல்லை என்று சொல்வதற்கு மனம் வருவதில்லை. இதுபோன்ற நேரங்களில் நல்லவராக, உண்மை மட்டுமே பேசுபவராக இருப்பதும் சிக்கல்தான். இப்படிப்பட்ட நேரங்களில் மனதை இரும்பாக மாற்றிக்கொண்டு, இல்லை என்று சொல்லவேண்டியதுதான், நிம்மதிக்கான வழி.
ராணிக்கு வந்த சிக்கலும் அப்படித்தான். ராணியை விரட்டி விரட்டி காதலித்தான் பரதன். அவனை ஏனோ, ஆரம்பத்திலிருந்தே ராணிக்குப் பிடிக்கவில்லை. ஆனால், ராணியின் தோழிகள் அனைவருமே, பரதன் உண்மையாக காதலிப்பதாகச் சொல்லிச்சொல்லி அவள் மனதைக் கரைத்தார்கள். அதை உண்மை என்று நிரூபிப்பதைப் போன்று ராணிக்காக எதையும் செய்ய தயாராக இருந்தான். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் காத்திருந்தான். ராணியின் குடும்பத்தாரிடமும் வந்து பேசி அன்பை சம்பாதித்தான்.
ஒரு கட்டத்தில், திருமணம் செய்துகொள்ளலாம் என்று மீண்டும் மீண்டும் கேட்டான். முழு உடன்பாடு இல்லை என்றாலும் இத்தனை தூரம் கெஞ்சுகிறானே என்பதற்காக யோசித்தாள். அத்தனை தோழர்களும் உறவுகளும் பரதனுக்கு ஆதரவாக நின்றனர். எனவே, முடியாது என்று சொல்லத் தெரியாமல் திருமணத்துக்கு சம்மதித்தாள்.
திருமணத்திற்குப் பிறகு ராணி நினைத்ததுதான் நடந்தது. ஆம், தான் நினைத்ததை அடையவேண்டும் என்ற பிடிவாதம் மட்டுமே பரதனிடம் இருந்ததே தவிர, நல்ல கணவனாக அவன் இல்லை. அதன்பிறகு ராணியை அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவன் இஷ்டத்துக்கு சுயநலமாக வாழ்ந்துகொண்டிருந்தான். ’முடியாது’ என்பதை உறுதியாக சொல்லத்தெரியாமல், தன்னுடைய வாழ்க்கை தெரிந்தே வீணாகிவிட்டதாக வருந்திக்கொண்டு இருக்கிறாள் ராணி.
இதுபோன்ற சிக்கல்கள் ராகவன், ராணிக்கு மட்டுமல்ல, ஏராளமான நபர்களுக்கு வருகிறது. அதற்கு காரணம் சரியான தருணத்தில் இல்லை, முடியாது என்று சொல்லத் தெரியாததுதான். நோ, ஸாரி என்று சொல்வதற்கும் பழகத்தான் வேண்டும்.
வாழ்க்கையில் இந்த வார்த்தைகளை சொல்லத் தெரியாமல்தான், பலரும் கடுமையான மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் மீண்டும் மீண்டும் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். அதனால், வெளியே சொல்ல முடியாமல் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால், உடல் ரீதியிலும் பிரச்னைகள் ஏற்படுகிறது.
எந்த நேரத்திலும் உடல் சோர்வாகவே இருக்கும். போதிய அளவுக்கு தூக்கம் வருவதில்லை அல்லது எவ்வளவு தூங்கினாலும் போதுமானதாக இருப்பதில்லை. அதிகம் சாப்பிடத் தோன்றும் அல்லது பசி இருக்காது. அடிக்கடி செரிமானப் பிரச்னைகளும் உருவாகும். எந்த பிரச்னையும் இல்லாமலே உடலின் வெவ்வேறு பகுதிகளில் வலி தோன்றும். நல்ல சினிமாவைக்கூட ரசித்துப் பார்க்கப் பிடிக்காமல் போய்விடும்.
ஸ்ட்ரஸ் எனப்படும் மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால், உங்களால் அந்த பிரச்னைகளில் இருந்து வெளியே வந்துவிட முடியும் என்று முழுமையாக நம்புங்கள். நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நடை பயிற்சி செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த ஏதேனும் இடத்துக்குப் போய் வாருங்கள்.
மன அழுத்தத்தில் இருக்கும்போது யாரேனும் ஏதேனும் செய்யுமாறு கட்டாயப்படுத்தினால்,முடியாது என்று உறுதியுடன் சொல்லிப் பழகுங்கள் தேவையில்லாமல் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
மன அழுத்தம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து குறுகிய கால பிரச்சனையாக அல்லது நீண்ட கால பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் சரியாகிவிடும் என்று நம்புங்கள். உங்களால் மீளமுடியாது என தெரிந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுகுங்கள்.
அதேநேரம், இல்லை என்றும் முடியாது என்பதை மந்திரம் போன்று இனியாவது சொல்லிப் பழகுங்கள். இப்படி சொல்வதன் மூலம் சில நேரங்களில் உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மனம் வேதனைப்படலாம். ஆனால், அது உங்களுடைய பிரச்னை அல்ல. நாம் இந்த நேரத்தில் உதவவில்லை என்றால், அவர் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கவேண்டி இருக்கும் என்று, நீங்கள் சிந்திக்கவும் தேவையில்லை. ஏனென்றால், அவரது வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க வேண்டிய கடமையும் அவசியமும் உங்களுக்கு இல்லை. அவர் வாழ்க்கைக்கு அவரே பொறுப்பு.
மேலும், உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. அதனால், எதிர்காலத்திலும் நிம்மதியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியது நீங்கள் மட்டும்தான். பிறரது அழுத்தமோ, வேண்டுகோள்களோ இல்லை, இல்லை, இல்லை.