அச்சம் தவிர்
ஒருவருடைய வெற்றி நம் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, அவருடைய தோல்விகள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வெற்றிக்கு முன்பு எத்தனை தோல்விகளை அடைந்திருப்பார் என்று சிந்திப்பதே இல்லை.

உண்மையில், தோல்விதான் வெற்றியின் முதல்படி. தவிர, வெற்றிக்கு வழிகாட்டும் ஆசானும்கூட. ஆகையால், தோல்வி நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை. ‘தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன்’ என்று எவராவது சொன்னால், அது உலகின் மிகப்பெரிய பொய்.
தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழு வெற்றிபெற வேண்டுமானால், தோல்வியை தைரியமாக சந்தித்தே தீர வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் நமது பயணத்தை நல்ல கவனத்துடனும் நிதானத்துடனும் தொடர்வதற்கு வழிவகுக்கும். அடக்கம், கவனம், நிதானம், பொறுமை, மன தைரியம் போன்ற எல்லாவற்றையும் தோல்விதான் கற்றுத்தருகிறது.
தோல்வி அடிக்கடி வரும் என்றாலும் நிலையானது அல்ல. தோல்வியை சந்திக்கப் பயப்படுபவர்கள், வெற்றிக்குத் தகுதியற்றவர்கள். இருட்டுக்குப் பயந்தால் அடுத்துவரும் விடியலை அனுபவிக்க முடியாமல் போய்விடும். தோல்விகளைக் கண்டு பயந்து ஓடுபவர்களை, தொடர்ந்து துரத்திச்சென்று அழிக்கக்கூடியது தோல்வி. அதனால், தோல்வியை எதிர்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் பழகிட வேண்டும். பெரும் தலைவர்கள் சந்திக்காத தோல்விகளையும், அவமானங்களையுமா நாம் சந்தித்துவிட்டோம்?
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன், தோல்விகளை மட்டுமே எதிர்கொண்டவர். மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதற்காக ஆயிரம் முறை தோல்வியுற்றார், தாமஸ் ஆல்வா எடிசன். இவர்கள் மட்டுமல்ல… இன்றைய வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தோல்வி மூலம் பாடம் கற்றவர்களே! தோல்வியின் பாடங்கள் கடினமானவை என்றாலும் அது புரியவைக்கும் செய்தி ஆழமானது.
குறிப்பாக, வெற்றியடையும்போது கற்றுக்கொள்வதைவிட, தோல்வியடையும்போதுதான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். தோல்வியின்போதுதான், மதிப்புடைய நண்பர்களையும், உறவினர்களையும் அடையாளம் காண முடியும். ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணக்கூடாது, தோல்விகளைத் தாங்கும் வகையில் உங்களை தயார் படுத்திய பிறகே வெற்றி கிடைக்கும்.
வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்புங்கள்; திட்டமிடுங்கள்; உழையுங்கள். ஆனால், அதையும் மீறி தோல்வி ஏற்படுகிறதென்றால், இடிந்து போகாதீர்கள். தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். அதுதான் வெற்றிக்கான வழி.
வெற்றி கிடைத்தால் பெற்றுக்கொள்ளுங்கள்.
தோல்வி கிடைத்தால் கற்றுக்கொள்ளுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்