நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்குமா?

Image

கர்மா  எனும் பிம்பம்

நல்லது செய்தால், நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் நடக்கும் என்பதையே கர்மா என்று பலரும் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த உலகில் அப்படித்தான் நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினால், அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள். அதாவது, இந்த பிறவியில் இல்லை என்றாலும், அடுத்த பிறவியில், நிச்சயமாக கர்மா எதிரொலிக்கும் என்பார்கள். ஆனால், இதனை நம்புவதுதான் கடினம்.

ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் சுயஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே, காலகாலமாய் கர்மாவை வேதங்களும், இதிகாசங்களும் தூக்கிப்பிடிக்கின்றன.

அப்படி என்றால், நாம் நன்மைதான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லையா..? தீமை செய்தாலும் துன்பம் இன்றி வாழ முடியுமா?

இதன் அர்த்தம் அதுவல்ல. கர்மாவை என்பதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நியூட்டனின் மூன்றாவது விதியான, ‘ஒவ்வொரு செயலுக்கும், அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்பதை ஏற்கத்தான் வேண்டும். ஏனென்றால், இதனை பரிசோதனை செய்தே ஒவ்வொருவரும் உண்மையை அறிந்துகொள்ள முடியும்.

இது அறிவியலுக்கு மட்டுமின்றி, வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. சாலையைக் கடக்க ஒருவருக்கு உதவி செய்துவிட்டு வீட்டுக்கு வந்தால், மனம் சந்தோஷமாக இருக்கும். அதுவே, சாலையில் செல்லும் ஒருவரை இடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டுக்கு தப்பியோடி வந்தால், மனம் நிம்மதியை தொலைத்துவிடும்.

எனவே, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏதேனும் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என்பதை உணர்ந்து, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான பொறுப்பை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் செய்யும் செயலினால் ஒரு தீமை நடந்தாலும் அதனை ஏற்கவே செய்ய வேண்டும்.  

உங்களால் இடித்து கீழே தள்ளப்பட்டவர் ஒருசில நபர்களுடன் வந்து அடித்தால், அதனையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். இப்படி தங்கள் செயலுக்கான பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொள்பவர்கள், கர்மாவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இந்த பிரபஞ்சத்தில் இயற்கை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. மழை, வெயில், காற்று போன்றவை எல்லோருக்கும் சமமாகவே கிடைக்கிறது. ஏழை வீட்டில் பிறந்தவனும் கோடீஸ்வரனாக முடியும், ஊனத்துடன் பிறந்தவர்களும் உயர் நிலைக்கு செல்ல முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.

ஆகவே, இயற்கையை, பெற்றோரை, கர்மாவை உங்கள் வாழ்க்கையின் தடைக்கல்லாக பார்க்காதீர்கள். உங்கள் செயலே, உங்களுடைய வெற்றி, தோல்வி, நன்மை, தீமையை நிர்ணயிக்கிறது என்பதை உறுதியாக நம்புங்கள்.

Leave a Comment