கடவுள் என்றால் அது கடவுள் அல்ல.

Image

தத்துவ விளக்கம்

‘தண்ணீர்’ என்னும் சொல் உண்மையான தண்ணீர் ஆகாது. அதேபோல், ‘கடவுள்’ என்னும் வார்த்தை கடவுள் அல்ல. ஏனெனில், வெற்று வார்த்தை என்பது உண்மைப் பொருள் ஆகாது. ‘கடவுள்’ என்னும் வார்த்தை பாரம்பரியம், நம்பிக்கை, பரம்பொருளை அடையவிரும்பும் ஆசை, தவங்கள், மதக்கொள்கைகள் முதலியவற்றைக் குறிக்கிறது; இவற்றையெல்லாம் உள்ளடக்கிய சிந்தனையைக் குறிக்கிறது; இந்தச் சிந்தனையை இயக்குகின்ற மனத்தைக் குறிக்கிறது. அதனால், அச்சொல் உண்மையான எந்த ஒன்றையும் குறிப்பதாக நாம் கொள்ளக் கூடாது.

இவ்வாறு ‘கடவுள்’ என்னும் சொல் குறிப்பிட்ட எந்த ஒரு நிஜப்பொருளையும் குறிக்காததால், ஒவ்வொரு மனிதனும் தான் நினைத்தபடி அச்சொல்லுக்கு ஏற்றதாக ஒரு உருவத்தை உண்டாக்குகிறான். இறையியலாளர்கள் ஒருமாதிரியும், சிந்தனையாளர்கள் வேறு ஒரு மாதிரியாகவும், நம்புபவர்கள், நம்பிக்கையற்றவர்கள் வெவ்வேறு வழிகளிலும் அந்தப் பிம்பத்தைத் தோற்றுவிக்கின்றனர். அதனால் உண்மைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பொய் மயக்கம் தோன்றுகிறது. எனவே, ‘கடவுள்’ என்னும் சொல் இந்தப் பொய் மயக்கிற்கே மனிதனை இட்டுச் சென்றுள்ளது; உண்மையான கடவுளிடம் அல்ல.

அதனால், இந்த மாயத் தோற்றத்தையும் அதை விளைவிக்கும் வார்த்தையையும் விட்டு விட்டால், எஞ்சியதாக ‘எது இருக்கிறதோ’ அதுவே புனிதம் ஆகும். மாயை மறைய வெளிப்படும் அப்புனிதத்தை நீங்கள் ‘கடவுள்’ என்றோ வேறு சொற்களாலோ குறிப்பிடலாம். அதனால், ‘கடவுள்’, அல்லது வேறு எந்தப் பெயரால் அதை அழைக்கிறீர்களோ அது, எப்போது இருக்கிறது என்றால் மாயை இல்லாத போதுதான். சிந்தனைகள் இல்லாத போது தான் மாயை மறையும்.

‘நான்’ என்பது இல்லாத போது தான் சிந்தனைகள் ஒழியும். எனவே, ‘நான்’ என்பது இருக்கும்போது கடவுள் என்று ஒன்று அங்கே இருக்காது. ‘நான்’ இல்லாத போது, கடவுள் அல்லது அன்பு வெளிப்படும்.

  • ஜே. கிருஷ்ணமூர்த்தி

Leave a Comment