• Home
  • யாக்கை
  • என் பேர் எனக்கு மறந்து போச்சுங்க..!

என் பேர் எனக்கு மறந்து போச்சுங்க..!

Image

மறதி எனும் கொடூர நோய்

ஞாபகசக்தி கிடைப்பது வரம் என்றால் ஞாபக மறதியும் ஒரு கொடை. ஆம், துன்பங்களையும் துயரங்களையும் மறக்க முடிவதாலே மனிதர்களால் ஆனந்தமாக வாழ முடிகிறது. அதேநேரம், ஞாபக மறதி அதிகரிப்பதிலும் எத்தனை சிக்கல்கள்…

மளமளவென ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்குறளை ஒப்பிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். எத்தனை முறை படித்தாலும் ஒரே ஒரு திருக்குறளை மிகச்சரியாக ஒப்பிக்க முடியாமல் தடுமாறும் மாணவர்களும் இருக்கிறார்கள். நாம் இப்போது ஞாபகசக்தியின் சிறப்பைப் பார்க்கப் போவதில்லை, ஞாபக மறதியின் குரூரத்தை பார்க்கப் போகிறோம்.

ஞாபக மறதி மனித வாழ்க்கைக்கு நிறைய நிறைய நன்மைகள் செய்கிறது என்றாலும், ஞாபக மறதிக்கும் ஓர் எல்லை உண்டு. அது, சற்று தீவிரமடைந்து மறதி நோயாக (டிமென்சியா) மாறும்போது, அது மிகப்பெரும் சுமையாகிறது. இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று மேலோட்டமாகத் தெரியலாம். ஆனால், ஞாபகமறதி நோயாளியை பராமரிப்பதும், பாதுகாப்பதும் அத்தனை எளிதல்ல.   

ஏதேனும் ஒரு பொருளை வைத்த இடம் தெரியாமல் தேடுவது எல்லோர் வாழ்விலும் நடக்கும் சாதாரண செயல். சாவி என்பது குறிப்பிட்ட இடத்தில் மாட்டப்பட்டிருக்கும் என்பதையே மறந்து, எல்லா இடங்களிலும் தேடுவது மறதி நோய். மறதி நோயை டிமென்சியா எனும் அல்சைமர் என்கிறார்கள்.

முன்பு 65 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. ஆனால், இப்போது நடுத்தர வயதினரும் அதிக அளவுக்கு இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். மூளையில் அதிகப்படியான புரதம் படிவது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த பிரச்னை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

முடிவுகள் எடுப்பதில் குழப்பம் நேர்வது ஆரம்ப கட்டம் என்று சொல்லலாம். அதாவது இப்படி செய்தால் தவறு ஏற்படும் என்பதை மறந்து, ஒரு முறை செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வார்கள்.

பொதுவாக தங்களுக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது என்பதை அறிந்து, அதனை ஒப்புக்கொள்பவர்களும், அதிலிருந்து மீள்வதற்கு முயற்சிப்பவர்களும் மிக எளிதாக  இந்த நோயிலிருந்து தப்பிவிடுகிறார்கள். ஆனால், நிறைய பேர் தங்கள் ஞாபகசக்தி குறைவதை நம்புவதில்லை. தனக்கு ஞாபக சக்தி நன்றாகத்தான் இருக்கிறது, சில குழப்பங்கள் மட்டுமே நேர்கிறது என்று அசட்டையாக இருக்கிறார்கள். இவர்களே கொஞ்சம் கொஞ்சமாக மறதி நோய்க்குள் விழுந்து தீவிர பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இந்த நோயின் தீவிரத்தன்மை எப்படி இருக்குமென்றால், ஒருவர் அன்றாடம் செய்யும் சாதாரண வேலைகள் கூட மறந்துவிடும். சாப்பிடுவதற்கு, குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு மறந்துவிடலாம். கொஞ்சம் முற்றிய நிலையில், தான் யார், தன் பெயர் என்ன, எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதையும் மறந்துவிடுவார்கள்.

எளிமையாகச் சொல்வது என்றால் நடக்கப்பழகும் குழந்தையைப் போன்று எந்த சிந்தனையுமின்றி, எதைப் பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாதவராக மலங்கமலங்க விழிப்பார்கள். கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, நண்பர்கள், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் தவிப்பார்கள்.  

ஹிப்போகேம்பஸ்’ எனப்படும் மூளையின் ஒரு பகுதிதான், அல்சைமர் நோயின்போது பாதிக்கப்படுகிறது. எனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிலர் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வார்கள். என்ன பேசத் தொடங்கினோம் என்பது தெரியாமல் தடுமாறுவார்கள். ஒருபொருள் இருக்கும் தூரத்தை, உயரத்தை, ஆழத்தை சரியாகக் கணிக்க முடியாது. அதனால் படிக்கட்டுகளில் மிகச்சரியாக காலை வைக்கத் தெரியாமல் கீழே விழுவார்கள்.

இவர்களுக்கு வாழ்வில் சந்திக்கும் சிரமங்கள், கஷ்டங்கள், பிரச்னைகளின் வீரியம் புரியாது. இந்த நிலை ஒரு சில நாட்களில் முடிவதில்லை. பல வருடங்களாக தொடர்ந்து நீடித்துக்கொண்டே போகும். மேலும் மறதி அதிகரித்துக்கொண்டே செல்லும்.

இந்த மறதி நோயைக் குணப்படுத்துவது அத்தனை சுலபமல்ல, அதற்கு மிகவும் அன்பான சப்போர்ட்டிங் சிஸ்டம் தேவைப்படும். அதாவது, அவருடன் ஒரு நபர் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இரவு, பகல் என்று நேரம் காலம் பாராமல் ஒரு மனவளர்ச்சி குன்றிய பெரிய குழந்தையை பார்ப்பது போல் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான குடும்பத்தில் இதற்கு வாய்ப்பு இருப்பதில்லை. அதனால் ஞாபக மறதிக்கு ஆட்படும் நபர்களை அறைக்குள் மூடி வைப்பது, கட்டிப் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அல்சைமர் நோய்க்கு சிகிச்சை என்று எதுவும் இல்லை. எனவே ஆரம்ப கட்டத்தில் கண்டறியும்போது, முறைப்படி பயிற்சி கொடுத்து மூளையை சுறுசுறுப்பாக்கிவிட முடியும். வெண்டைக்காய், வல்லாரை கீரை, பாதாம் பருப்பு, புதினா, தேன், நெல்லிக்காய் போன்றவை எடுத்து வருபவர்கள் ஞாபக சக்தி குறைபாடு அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

மறதி வரும்போதே உஷாராகிவிடுங்கள், நிச்சயம் தப்பிவிடலாம்.

Leave a Comment