- சீமான் சீரியஸ் கற்பனை பேட்டி
எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று தான் அத்தனை அரசியல் கட்சிகளும் திட்டம் போட்டு காய் நகர்த்திவருகின்றன. இதையே அரசியல் சாணக்கியத்தனம் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆனால், கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எந்த கட்சியுடனும் கூட்டு வைக்க மாட்டேன் என்ற கொள்கையில் அன்று முதல் இன்று வரையிலும் பிடிவாதம் காட்டி வருகிறார் சீமான். 2024 மக்களவைத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டுள்ள சீமானை கற்பனையில் சந்தித்துப் பேசினோம்.
தேர்தல் முடிவுகள் குறித்து கொஞ்சமும் அச்சமில்லாத மனநிலையில் நம்முடன் ஆர்வமாக உரையாடினார் நாம் தமிழர் சீமான்.
கேள்வி : 2024 தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது..?
சீமான் : ஏழெட்டு தொகுதிகளில் தி.மு.க.வினர் அராஜகமாக அயோக்கியத்தனம் காட்டியிருக்கிறார்கள். நிறைய பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் உறுதியாக எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனவே, இந்த முறை நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி அடைவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி : நிஜமாகவே தி.மு.க., அ.தி.மு.க.வைத் தாண்டி நாம் தமிழர் வேட்பாளர்கள் வென்றுவிடுவார்கள் என்று நம்புகிறீர்களா..?
சீமான் : நியாயமாக தேர்தல் நடந்திருந்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த தில்லுமுல்லுவும் நடக்கவில்லை என்றால் நிச்சயம் நாங்கள் ஜெயிக்கவே வாய்ப்பு அதிகம். நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி அடைவது உறுதின்னு தெரிஞ்சு போச்சு. அதனால தான் இப்போ எங்களுடன் ஒரு தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்குது.
கேள்வி : கூட்டணியில் சேர்வதற்கு உங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் பணம் தருவதாகச் சொன்ன கட்சி தான், இப்போதும் பேச்சுவார்த்தை நடத்துகிறதா..?
சீமான் : அரசியலில் நாகரிகம், அறம், பண்பாட்டை கடைப்பிடிக்க நினைக்கிறவன் நான். அதனால, எந்த கட்சின்னு வெளிப்படையா இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனா, பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்குது. இந்த தேர்தல்ல யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காதுன்னு உளவுத்துறை தகவல் சொல்லிடுச்சு. அதனால தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் ஜெயிச்சுட்டா பிரதமர் பதவியில் நீங்களே அமர்ந்துக்கோங்க, மத்த விஷயங்களை நாங்க பார்த்துக்கிடுறோம்னு கூட்டணி ஆட்சிக்கு பேசிக்கிட்டு இருக்காங்க….
கேள்வி : இந்த டீலுக்கு ஏதாச்சும் தொகை பேசுனாங்களா..?
சீமான் : இந்த நாட்டையே என் கையில எடுத்துத் தர்றேன்னு சொல்றான், நீங்க ரேட் பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாதுங்கிறதை முதல்ல புரிஞ்சுக்கோங்க. ஆனா, ஐயாயிரம் கோடி தர்றேன், 40 எம்.பி.க்களையும் கொடுத்துடுங்கன்னு கேட்டாங்க… அதெல்லாம் நடக்கவே நடக்காதுன்னு சொல்லிட்டேன்.
கேள்வி : நீங்க பிரதமர் ஆயிட்டீங்கன்னா உங்க அமைச்சரவையில யாருக்கெல்லாம் பொறுப்பு கிடைக்கும்..?
சீமான் : நான் இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்கலை. அதேநேரம், என்னோட நலனுக்காகவும் என் புள்ளைக்காகவும் தன்னோட வாழ்க்கையை ஒட்டுமொத்தமா தொலைச்சிட்டு நிற்கிறா என் பொண்டாட்டி. அவளுக்கு மந்திரி பதவி கொடுக்கலைன்னா அது வரலாற்றுப் பிழை ஆயிடும். அதனால, அவங்களுக்கு மட்டும் உறுதியளிச்சிருக்கேன். ஆனா, இதை இன்னமும் அவங்ககிட்டே நான் சொல்லலை… (சிரிக்கிறார்)
கேள்வி : உங்க மனைவிக்கு பதவி குடுத்தா வாரிசு அரசியல்ன்னு கிண்டல் செய்வாங்களே..?
சீமான் : எனக்கு அப்புறம் என் மனைவிக்குக் குடுத்தா அது வாரிசு அரசியல். இது, என்னை பாதுகாக்கிற ஒருத்தங்களுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக்கடன். யாராவது ஏதாவது சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாங்க. அதையெல்லாம் நாம கண்டுக்கத் தேவையில்லை. நாம இலக்கை நோக்கி பயணிக்கும்போது இந்த மாதிரி விமர்சனங்களை எல்லாம் தள்ளிவைச்சிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான். .
கேள்வி : இலக்குன்னா தமிழ் ஈழம் வாங்கிக் குடுப்பீங்களா..?
சீமான் : தமிழ் ஈழம் எங்க கனவு, லட்சியம். ஆனா, என்னை நம்பி ஓட்டுப் போட்ட கோடிக்கணக்கான தமிழனுக்கும் இந்தியனுக்கும் முதல்ல நான் என்னால முடிஞ்ச சேவையை செய்யணும். அதுக்கப்புறம் இலங்கைத் தமிழர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்வேன். அது என்னன்னு இப்போ சொல்ல முடியாது. ராஜ ரகசியம் மாதிரி அது. அப்புறம் ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் பத்திர முறைகேடுகளை தடுக்கணும். எல்லாத்தையும் திரள்நிதியா மாத்துற திட்டம் இருக்குது. ஜெர்மனி அரசுடன் இணைஞ்சு வீட்டுக்கு ஒரு மாடு தரலாம்னு ஒரு மெகா திட்டம் இருக்கு.
கேள்வி : வீடு இல்லாதவங்களுக்கு எப்படி மாடு குடுப்பீங்க..? மாடி வீட்டுல வாழ்றவங்க எப்படி மாடு வளர்ப்பாங்க..?
சீமான் : இப்படியெல்லாம் யாரும் குறுக்குத்தனமா கேள்வி கேட்கக்கூடாதுன்னு தான் எனக்கு ஓட்டு போடுறான். இத்தனை காலமா காங்கிரஸ் கட்சி செய்ய முடியாததை நான் செஞ்சு காட்டுவேன். மீன் கொடுக்காதே, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுன்னு எங்க முப்பாட்டன் சொல்லியிருக்கான். முதல்ல அவனுக்கு மாட்டைக் கொடுப்போம், அதுல வர்ற வருமானத்தை வைச்சு அவனே வீடு கட்டிக்குவான். ஒரு மாடு ஒரு நாளைக்கு நூறு லிட்டர் பால் தரும், அதுல பத்து லிட்டரை அவன் குடிச்சுட்டு 90 லிட்டரை வித்தாக்கூட ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பாதிப்பான். ஒரே வருஷத்தில் லட்சாதிபதி ஆயிடுவான்..
கேள்வி : அதை விட்ரலாம். தமிழ் நாட்டுல உங்க மகன் படிக்கிறதுக்கு தமிழ் பள்ளி இல்லைன்னு வருத்தப்பட்டீங்க. அதனால நாடு முழுக்க தமிழ் பள்ளி திறக்கப் போறீங்களா..?
சீமான் : அவனவனுக்கு என்ன வேணுமோ அதை படிச்சுட்டுப் போகட்டும். எல்லோரையும் தமிழ் படிங்கன்னு சர்வாதிகாரி மாதிரி கட்டாயப்படுத்த மாட்டேன். அதுக்காக தமிழை விட்ற மாட்டேன். லண்டன்ல ஒரு தமிழ் பள்ளி ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்.
கேள்வி : லண்டன்ல தமிழ் பள்ளியா..?
சீமான் : ஆமாம்… என் மகன் பிரபாகரனை லண்டன்ல படிக்க வைக்கலாம்னு ஒரு யோசனை இருக்குது. இப்ப நாம் அங்கே போய் ஒரு தமிழ் பள்ளி திறந்தா என் மகனும் படிச்ச மாதிரி இருக்கும், வெள்ளைக்காரனுக்கும் சொல்லிகொடுத்த மாதிரி இருக்கும். வெள்ளைக்காரன் நமக்கு ஆங்கிலம் கத்துக்கொடுத்தான். இப்ப நாம அவனுக்கு பதிலுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்போம். என்ன நான் சொல்றது..?
கேள்வி : மாவீரன் பிரபாகரனுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க..?
சீமான் : அதான், லண்டன்ல தமிழ் பள்ளிக்கூடம் அமைக்கப் போறோமே…
கேள்வி : இல்லீங்க. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்…
சீமான் : அண்ணன்னு சொல்லுங்க. மெரினா பீச்சுல கலைஞருக்கு பேனா சிலை வைக்கப்போறாங்களே, அதுக்குப் பக்கத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் இல்லாம ஏகே 47 துப்பாக்கி சிலை வைக்கப்போறேன். அதுக்குள்ள நிஜ குண்டு இருக்கும். எதிரி நாட்டுக்காரன் வந்தான்னா டுமீல் டுமீல் தான். ஆனா, இதை கண்டிப்பா அரசு பணத்தில் செய்ய மாட்டேன். இதுக்கு என்னோட தமிழ் உறவுகள் திரள் நிதி கொடுக்கணும்… கொடுத்துத்தான் ஆகணும்.
கேள்வி : உங்க இலங்கை பயணத்துல நடந்த ஏதாவது ஒரு சிறப்பு சம்பவத்தை எங்க வாசகருக்குச் சொல்லுங்களேன்…
சீமான் : அது நிறைய இருக்கு தம்பி. திடீர்னு அண்ணன் என்கிட்ட ஒரு துப்பாக்கியைக் குடுத்தார். அப்பத்தான் நான் முதன்முதலா இந்த பிகே 37 துப்பாக்கியை பார்க்கிறேன். ஆப்கானிஸ்தான்ல தயாரிக்கிற ஏகே 47 மாதிரி இது பாகிஸ்தான்ல தயாரிக்கிற பிகே 37. மரத்துல நின்ன ஒரு அணிலை கரெக்டா குறி வைச்சு சுடுன்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப தயக்கமா இருந்திச்சு. நீ சுடலைன்னா நான் உன்னை சுடுவேன்னு அவர் துப்பாக்கியை எடுத்து மிரட்ட ஆரம்பிச்சுட்டாரு. வேற எண்ண செய்றது..? குறி பார்த்தேன்… ஒரே அடி… அந்த அணில் கீழே விழுந்திடுச்சு. அதை எடுத்து சூப் போட்டுக் குடுத்தாங்க… அதை குடிச்சா நரம்பெல்லாம் அப்படி சூடேறுது.
கேள்வி : அதுவும் இருக்கட்டும். நீங்க பிரதமராயிட்டா பெட்ரோல், கேஸ் விலையை குறைப்பீங்களா..?
சீமான் : நான் என்ன மோடியா… எண்ணெய் கம்பெனி, ஏலக்காய் கம்பெனின்னு சொல்லி யாரும் என்னை ஏமாத்த முடியாது. பதவிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பெட்ரோல் லிட்டர் 10 ரூபாய், கேஸ் சிலிண்டர் 100 ரூபாய். இந்த ரேட்டை கூட்டவே கூடாதுன்னு எண்ணெய் கம்பெனிக்கு நோட்டீஸ் குடுத்துடுவேன். இதுக்கு மேல விலையை ஏத்துனே, மகனே நீ செத்தே… யாருகிட்டே… அதேநேரம், பெட்ரோல் விலை குறையா இருக்குன்னு எல்லோரும் வண்டியும் காரும் எடுத்துட்டு சுத்தவும் முடியாது. சனி, ஞாயிறு மட்டும் வண்டியை எடு, மத்த நாள்ல எல்லோரும் பஸ், டிரெயின்ல போய்க்கோன்னு சட்டம் போட்டுருவேன். வீட்ல பகல்ல மட்டும் தான் கேஸ்ல சமையல் செய்யணும். மத்த நேரம் வேணும்னா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கோ. எவனாவது மீறுனா அவன் மாட்டை பறிச்சிடுவோம்…
தமிழ் லீடர் : அண்ணே… காதுக்குள்ளே கிர்ர்ன்னு சத்தம் கேட்குது, லேசா மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. மீதி பேட்டியை பிறகு வைச்சுக்குவோம் என்று தப்பித்து வந்தோம்.
- எஸ்.பாண்டியராஜன்