ஞானகுரு பதில்கள்
கேள்வி : இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வது எப்படி..?
ஞானகுரு :
வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. மூன்றே மூன்று இடங்களுக்கு சென்று வந்தால் வாழ்க்கை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
- அரசு மருத்துவமனை – ஒரே ஒரு நாள் அரசு மருத்துவமனையில் உட்பிரிவு நோயாளிகள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று வாருங்கள்
- சிறைச்சாலை – இங்கு செல்வதற்கு கெடுபிடிகள் இருக்கும். எனவே, சிறையில் இருந்து வெளியே வந்த நபர்களிடம் உள்ளே என்னவெல்லாம் நடக்கிறது என்பதைக் கேட்டறியுங்கள்.
- சுடுகாடு – ஒரே ஒரு நாள் இடுகாட்டிற்கு எப்படிப்பட்ட உடல்கள் எல்லாம் எரிப்பதற்கு வருகின்றன என்று வேடிக்கை பாருங்கள்.
இந்த மூன்று இடங்களில் கிடைத்த அனுபவங்களை உங்கள் வாழ்க்கைக்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் சிறப்பான வாழ்க்கையில் இருப்பதை உணர்வீர்கள். இதுவே, மகிழ்ச்சி.
கேள்வி ; உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் வெற்றி தருமா, தோல்வி தருமா..?
- பி.சங்கரபாண்டியன், மல்லிகைத் தெரு.
ஞானகுரு ;
மகிழ்ச்சியில் வாக்கு தரக்கூடாது. கோபத்தில் முடிவு எடுக்கவும் கூடாது. ஏனென்றால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் நபர்களால் உண்மையைக் காண முடியாது. கோபத்தில் இருப்பவர்களுக்கு தன்னைத் தவிர அத்தனை பேரும் சுயநலவாதிகளாகத் தெரிவார்கள். நெருக்கடியான காலகட்டம் என்றாலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியான தருணத்தில் முடிவு எடுப்பதே வெற்றி தரும்.