• Home
  • ஞானகுரு
  • எதிர்காலம் பற்றிய அச்சத்தை வெல்வது எப்படி..?

எதிர்காலம் பற்றிய அச்சத்தை வெல்வது எப்படி..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : இன்றைய வாழ்வுக்கு அவசியம் எது, அவசியமற்றது எது..?

  • எஸ்.பூங்கோதை, ஆர்.ஐ. நகர்.

ஞானகுரு ;

நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற கவலை அவசியமற்றது. நம் உடல் மட்டுமே நமக்குச் சொந்தம் என்ற புரிதல் அவசியமானது.

கேள்வி : கவலை இல்லாமல் வாழ அல்லது கவலையை மறந்து வாழ வழி சொல்லுங்கள் ஞானகுருவே..?

  • எம்.சுமன்ராஜ், சூலக்கரை மேடு.

ஞானகுரு :

பெரும்பாலான கவலைகள் மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்வது தான். ஒவ்வொரு நபரும், அவரவருக்கு ஏற்ப கவலைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். புதுச்செருப்பு வாங்க வேண்டும் என்று ஒருவர் கவலைப்படுவதும், புது மாடல் கார் வாங்க வேண்டும் என்று ஒருவர் கவலைப்படுவதும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்குத் துன்பம் தருகிறது. கவலைக்குக் காரணம் இல்லை என்றாலும், ஏன் கவலை இல்லை என்றும் கவலைப்படும் அளவுக்கு மனிதர்கள் கவலையுடன் வாழ்ந்து பழகிவிட்டார்கள். கவலையைக் கண்டு அஞ்சாமல் அதன் உண்மையான காரணத்தைத் தேடுங்கள், மறப்பதற்கு வழி கிடைத்துவிடும்.

கேள்வி : எதிர்காலம் பற்றிய சிந்தனை பயமுறுத்துகிறது, என்ன செய்வது..?

  • வி.பாக்கியலட்சுமி, முத்தால்நகர்.

ஞானகுரு :

நாளை கன மழை வரப்போகிறது என்று வானிலை அறிக்கை வந்தவுடன் காரை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்யலாம். குடை எடுத்து வைக்கலாம். மின்சாரம் போய்விட்டால் பயன்படுத்துவதற்கு மெழுகுவர்த்தி வாங்கி வைக்கலாம். இதேபோல் இன்னும் சில சின்னச்சின்ன ஏற்பாடுகள் செய்யலாம். ஆனால், மழை எத்தனை பெரிதாக வரும், எந்த நேரத்தில் வரும், எவ்வளவு நேரம் பெய்யும் என்பதெல்லாம் நமது கட்டுப்பாட்டுக்குள் கிடையாது. மழை வரலாம், வராமலும் போகலாம். 

வாழ்க்கையும் அப்படித்தான் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, என்ன முடிகிறதோ அதை மட்டும் செய்யுங்கள் போதும். எதிர்காலம் சுலபமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். எது நடந்தாலும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

Leave a Comment