• Home
  • சட்டம்
  • சொத்து நிஜ உரிமையாளரை எப்படி அறிவது..?

சொத்து நிஜ உரிமையாளரை எப்படி அறிவது..?

Image

சட்டம் தெரிஞ்சுக்கோங்க


இன்றையச் சூழலில் வீடோ, சொத்தோ வாங்குவது எளிது, அதில் வில்லங்கம் எதுவும் இல்லாமல் வாங்குவதுதான் முக்கியம். எத்தனை தூரம் விழிப்போடு வாங்குவதற்கு முயன்றாலும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும், , ரியல் எஸ்டேட்  இடைத்தரகர்களால் எளிதாக ஏமாற்றப்படுவதுண்டு. காசுக்கு ஆசைப்பட்டு, அவர்கள் செய்யும் மோசடி வேலைகளால் பெருத்த துன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். அதனால், உரிமையாளரின் சட்டப்பூர்வ தகுதியைப் பார்த்து வீடு வாங்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் நிலா.  


ரியல் எஸ்டேட்டில் நிலவும் சிக்கல் குறித்துப் பேசும் வழக்கறிஞர் நிலா,  “புதிதாக வீடு, மனை  வாங்குவோர் அதன் உரிமையாளர் நிலையில் மோசடி எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய சில வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன விற்பனைக்கு வரும் சொத்தின் உரிமையாளர் பெயர்தான், பத்திரத்தில் உரிமையாளர் நிலையில் இருக்கிறதா என்று தெளிவாகப் பார்க்க வேண்டும்.


பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பெயருக்கு உரியவர் அதே நபர்தானா என்பதை அடையாள ஆவணங்கள் வாயிலாக உறுதிசெய்ய வேண்டும். அடுத்து, அந்தச் சொத்து, அவரது பெயரில் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பொதுவாக, பரம்பரை சொத்தைப் பாகப்பிரிவினை வாயிலாக பெற்றவர், 40 ஆண்டுகளாக வைத்திருக்கிறார் என்றால், அது தொடர்பான வேறு பரிமாற்றங்கள் இருக்காது. இத்தகைய சொத்துக்களுக்கு வில்லங்கம் பார்ப்பதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழும்.

உதாரணமாக சொத்துப் பதிவுக்கு 30 ஆண்டுகால வில்லங்கச் சான்று போதுமானதாகக் கூறப்படுகிறது. இதன்படி, 30 ஆண்டுகளாக பரிமாற்றம் நடக்காத சொத்துக்களை வாங்குவோர் கூடுதலாக, 20 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று வாங்கிப் பார்ப்பது நல்லது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்த சொத்து, எவ்விதத்திலும் பரிமாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் எதுவும் உள்ளதா என்பதையும்  விசாரித்து அறிய வேண்டும். தற்போது விற்பனைக்கு வரும் சொத்தின் விற்பனையாளருக்கு, சட்டரீதியாக அதில் உள்ள அதிகாரங்கள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சில சமயங்களில் பரம்பரை சொத்துக்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், உண்மையை மறைத்து விற்பனை செய்துவிடுகின்றனர்.

இதில் பாதிக்கப்படும் வாரிசுகள் வழக்கு தொடர்ந்தால், அதனால் ஏற்படும் சட்டச் சிக்கல்களைச் சொத்து வாங்குவோரும் சந்திக்க வேண்டி வரும். எனவே, அதிக பரிமாற்றங்கள் நடக்காத சொத்தை  வாங்குவதாக இருதாலும் விழிப்புடன் இருக்க வேண்டும். சட்ட வல்லுநர்கள் ஆய்வு மட்டும் போதாது. உரிமையாளர் குடும்ப நிலவரம் உள்ளிட்ட விஷயங்களையும் விசாரித்தே முடிவு செய்ய வேண்டும்” என்கிறார்.


வாழ்நாள் முழுவதும் வாழவேண்டிய இடம் என்பதால் ஒரு வழக்கறிஞர் ஆலோசனை பெற்று வாங்குவதே நல்லது.

எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

சென்னை & மதுரை

Leave a Comment