ஏழைகள் எப்படி வாய்விட்டு சிரிக்கிறார்கள்?

Image
  •  வாழ்க்கை ரகசியம்

கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் குடிசையிலும், நடைபாதையிலும் வாழும் ஏழைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது, பூ விற்பனை செய்யும் ஒரு பெண், பால் வாங்கிக்கொண்டு செல்லும் ஒரு பெண்ணை பார்த்து ஏதோ சொல்லி, வாய் விட்டு சிரிக்கிறாள். அவள் வைத்திருக்கும் அத்தனை பூக்களும் இரவுக்குள் விற்பனையாகுமா அல்லது மீந்து போகுமா என்று எனக்கு இருக்கும் கவலை கூட அந்த பெண்ணுக்கு இல்லை… 200 ரூபாய் வருமானத்திற்கே வழி இல்லாத அந்த பெண்ணுக்கு சிரிப்பு எப்படி சாத்தியமாகிறது..?” சந்தேகம் கேட்டார் மகேந்திரன்.

‘’மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை ஏழைகளுக்கு இல்லை. ஏனென்றால், எல்லா ஏழைகளும் வெளிப்படையாக வாழ்கிறார்கள். பூ விற்பனை செய்யும் பெண்ணின் கடை என்பது ஒரு சிறிய பலகை மட்டுமே. அதை அவள் யாருக்கும் மறைக்கத் தேவை இல்லை. அந்த ரோட்டுக்கு அவளே சொந்தக்காரி போன்று உட்கார்ந்து வியாபாரம் செய்கிறாள். விற்பனை செய்தது போதும் என்று தோன்றிவிட்டால், மீதமிருப்பதை குப்பையில் வீசிவிட்டு போய்க்கொண்டே இருப்பாள்.

நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரரும் பிறருக்காகவே வாழ்கிறார்கள். ரோட்டில் வைத்து சிரித்தால் அவமானம் என்று நினைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நடுரோட்டில் நின்ரு பேசுவதையே அவமானம் என்று நினைப்பவர்கள் உண்டு. அவர்கள் சிரிப்பதற்கு ஒரு நிகழ்ச்சி அல்லது தனி அறை தேவைப்படுகிறது. அதனால், ரோட்டில் தெரிந்தவர்களை பார்க்க நேர்ந்தாலும், ஒரு மில்லிமீட்டருக்கு மேல் புன்னகைக்க மாட்டார்கள். அதுவே, நாகரிகம் என்று மனதை பூட்டிக் கொள்கிறார்கள். இப்படி யோசனை செய்துதான் சிரிக்க வேண்டும் என்று நினைப்பதால், ஒரு கட்டத்தில் சிரிப்பு என்பதை மறந்தே போகிறார்கள்.

ஏழைகளுக்கு அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை. ரோட்டில் வைத்து பூ வியாபாரம் செய்பவள், வீடும் ஒற்றைத் தடுப்பாகத்தான் இருக்கும். அவள் பேசுவதை அக்கம்பக்கத்தினரும் கேட்கத்தான் செய்வார்கள். எனவே, எல்லா இடத்தையும் அவள் சொந்த வீடாக, எல்லா இடத்தையும் அவள் சிரிக்கும் இடமாக எடுத்துக் கொள்கிறாள்.

பெரும்பாலான ஏழைகள் போதும் என்ற மனநிலைக்கு பழகிவிடுகிறார்கள். எது கிடைத்தாலும் அதற்காக மகிழ்ச்சி அடைகிறார்கள். நாளையும் இப்படி ஏதேனும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி அடைவதற்குக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் தவற விடுவதில்லை. துன்பத்திலும் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். அதனால்தான், ஏழைகள் வீட்டில் மரணம்கூட கொண்டாட்டமாகிறது.

அதேநேரம், எல்லா ஏழைகளும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள், எல்லா ஏழைகளும் சிரிக்கிறார்கள் என்றும் அர்த்தம் இல்லை. கொலை, கொள்ளை போன்ற செயல்களில் பலரும் இறங்குவதற்கு ஏழ்மையே முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த மனநிலையில் இருப்பவர்கள் மகிழ்வுடன் இருப்பதில்லை. அவர்கள் மகிழ்ச்சிக்கு குடி, புகை என்று மாறிவிடுகிறார்கள்.

பணக்காரர்களும் நடுத்தர மக்களும் மகிழ்ச்சியைத் தேடி வருடம் ஒரு முறை சுற்றுப்பயணத்துக்கு திட்டம் போடுகிறார்கள். ஆனால், ஏழைகள் அப்படியெல்லாம் சிரிப்பதற்குத் திட்டமிடுவது இல்லை.

அதேநேரம் ஏழ்மைக்கும் மகிழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதும் என்ற மனம் மனமும், பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையும் இல்லாத கோடீஸ்வரனும் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்…’’ என்றார் ஞானகுரு.

இந்த பதிலே மகேந்திரனுக்கு போதுமானதாக இருந்தது.