எத்தனை மரம் அழித்தீர்கள்?
ஒவ்வொரு மனிதரும் வாழ்நாளில் சுமார் ஆயிரம் மரங்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது நாம் வீட்டுக்குப் பயன்படுத்தும் கதவு, ஜன்னல், மேஜை, நாற்காலி என்று பல்வேறு வகையில் மரங்களின் அழிவுக்கு எல்லா மனிதர்களும் காரணமாகவே இருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே ஒரு மரமாவது வளர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.
மரம் என்பது வரம். ஒரு மரமானது, மழை, நிழல் மட்டுமல்லாது, பறவைகளுக்கு வசிப்பிடமும், கால்நடைகளுக்குத் தழையும், மனிதர்களுக்கு சகலமும் தருகிறது. மண்ணரிப்பையும் தடுக்கிறது. இப்படி எல்லோருக்கும் எல்லாமும் தரும் மரம், மனிதர்களால் அழிக்கப்படுவது ஒருபுறம் என்றால், மறுபுறம் புயல், மழை, பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் அழிந்துவருகிறது. மரம் இல்லையேல், மழை இல்லை என்பதை மனிதன் நினைக்கத் தவறுவதால்தான் மரம் வளர்ப்போம் என்கிற வாசகம் வாகனங்களின் பின்புறம் மட்டுமே பயணித்து வருகிறது.
நாடு முழுவதும் சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், உயர் அழுத்த மின்பாதை கோபுரம் அமைத்தல் என ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைகிறது… வெப்பச்சலனம் ஏற்படுகிறது… மழைப்பொழிவு குறைகிறது. இதற்கு எல்லாம் யார் காரணம்? மனிதர்கள்தானே. மரங்களின் பயன்களை முழுதும் அனுபவிக்கும் மனிதர்கள், அதை வளர்ப்பதற்கு மட்டும் ஆர்வம் காட்டாமல் இருந்துவிடுகின்றனர்.
மரம் நடு விழா ஒன்றில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. சில மாதங்கள் கழித்து, ‘நடப்பட்ட மரக்கன்றுகளில் எத்தனை பிழைத்துள்ளன’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நடப்பட்டது 100… செத்தது 101’ எனப் பதில் அளிக்கப்பட்டது. ‘அது எப்படி’ என மீண்டும் வினா கிளம்பியது. ‘100 கிளைகளை வெட்டியதில், இருந்த மொத்த மரமும் செத்துவிட்டது’ என்ற பதிலைக் கேட்டு அதிர்ந்துபோனது, கேள்வி கேட்ட தரப்பு. ஆம், உண்மையில் உலகில் இப்படித்தான் மரங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன.
‘புல்லும் மரனும் ஓரறிவு இனவே’ என மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைத் தமிழர், தொல்காப்பிய காலத்திலேயே எழுதியுள்ளனர். அத்தோடு, பல்வேறு வகையான காரணப் பெயர்களையும் கொடுத்திருந்தனர். சிந்துவெளி நாகரிகத்தில் மர வழிபாடு நடைபெற்றுள்ளது. அவர்களுடைய முத்திரைகளில் மரங்கள் அதிகளவு இடம்பெற்றிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. மூவேந்தர் மற்றும் பழங்குடி மக்களிடையே குலமரபு சின்னங்களாகவும் மரங்கள் இருந்திருக்கின்றன.
மாமன்னர் அசோக சக்கரவர்த்தி மரங்களை வளர்க்கச் சொல்லி கட்டளையிட்டார். அவர் மட்டுமல்ல… அவருக்குப் பின்வந்த பல மன்னர்களும் மரங்களை வளர்த்துள்ளனர். 19ம் நூற்றாண்டில் ஜெகதீஸ் சந்திரபோஸ் என்ற இந்திய விஞ்ஞானி, மரங்களுக்குரிய உணர்ச்சி, அறிவு நிலைகளை எடுத்துக்காட்டி மெய்ப்பித்தார். அவற்றைப் பிற விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், இன்று மதம், சாதியால் மனிதர்கள் பிரிக்கப்படுவதைப்போல, அதே மனிதர்களால் மரங்களும் பிரிக்கப்படுகின்றன; வெட்டப்படுகின்றன. வீடு, காடு, கோயில் என ஒவ்வொரு நிலைப்பாட்டுக்கும் மரங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன; பின்பு அவற்றின் தேவைகளுக்காக அழித்தொழிக்கப்படுகின்றன. ஆனாலும், மரங்கள் இன்றும் சிலருக்கு தெய்வங்களாகக் காட்சி தருகின்றன. அதேநேரத்தில் மருத்துவத்துக்கும் நல்ல பயனளிக்கின்றன.
ஓர் ஆண்டுக்கு 18 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஓர் ஏக்கரில் உள்ள மரங்கள் தருவதாக பேராசிரியர் டி.எம்.தாஸ் என்பவர் ஆய்வு செய்து உலகுக்கு நிரூபித்திருக்கிறார். அதுபோல், உலக நாடுகளில் மரங்கள் வளர்க்கப்படும் சுவாரஸ்யம் பற்றி எழுத்தாளர் மாத்தளை சோமு, தன்னுடைய வியக்கவைக்கும் தமிழர் அறிவியல் என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ‘ஜெர்மனி, சுவிஸ், பிரிட்டன், கனடா, நார்வே போன்ற நாடுகளில் மரங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. ஆனால், மனிதர்களின் தேவைகளுக்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெட்டப்பட்ட மரங்களை இறக்குமதி செய்கின்றனர் எனவும், ஆப்பிரிக்காவில் மர நடுகையைப் பேரியக்கமாக மாற்றி நோபல் பரிசை வென்றவர் வங்காரி மாதாய் எனவும், அவர் ஆரம்பித்த ‘பசுமைப்பட்டி இயக்க’த்தால் இதுவரைக்கும் கென்யா உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பல கோடிக்கும் அதிகமான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன எனவும், அதனால்தான் லங்காரி மாதாய், ‘மரங்களின் மாதா’ என அழைக்கப்படுகிறார்’ எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், ‘ஆஸ்திரேலியா நாட்டில் மரங்களை வெட்ட அரசு தடை செய்துள்ளது. வீட்டின் கூரையில் விழுந்துவிடும் என்றாலும் அதை வெட்ட உடனே அனுமதி கிடைக்காது. நிபந்தனையோடுதான் வெட்டப்பட வேண்டும். புதிய வீட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கும்போது மரங்களை வெட்டுவதைத் தவிர்த்தே அனுமதி கொடுப்பார்கள். தப்பித்தவறி மரங்களை வெட்ட வேண்டும் என்றால், அதற்கு ஈடாக வேறு மரங்களை நடவேண்டும். அத்தோடு 10,000 முதல் 15,000 ஆஸ்திரேலிய டாலர் பணத்தைப் பிணைத்தொகையாகக் கட்டவேண்டும். மேலும், நட்ட மரங்களின் வளர்ச்சியில் திருப்தி ஏற்பட்டால்தான் அந்தத் தொகை திரும்பக் கிடைக்கும்’ எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
உலகில் இப்படியென்றால், இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள பிஷ்னோய் சமூகத்தினர் மரங்களைப் பாதுகாக்க தம் உயிரையும் ஈந்துள்ளனர் என்கிறது வரலாறு. 1731ல் மார்வாரின் மன்னராக இருந்த அபய்சிங், ஜோத்பூர் கோட்டையைக் கட்டுவதற்காக அருகில் உள்ள கேச்சாட்லி கிராமத்தில் இருந்த வன்னி மரங்களை வெட்டி வரும்படி கிரிதாரி தாஸ் ஹக்கீம் எனும் தளபதிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, அங்கு சென்ற தளபதிக்கு அம்ருதாதேவி பிஷ்னோய் என்ற பெண் தலைமையில் பலர்கூடி அந்த மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி, அங்கு நின்றிருந்த 363 பேரையும் தாக்கிவிட்டு மரங்களை வெட்டிச் சென்றார் தளபதி கிரிதாரி. பின்னர், தன் தவற்றை உணர்ந்த மன்னர், அந்தச் சமுதாய மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அங்குள்ள மரங்களைப் பாதுகாப்பதற்கும் உத்தரவிட்டார். இதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் இந்த இன மக்கள் கேச்சாட்லி கிராமத்தில் கூடி விழா எடுக்கின்றனர். மரங்களைக் காக்க உயிர்துறந்த அம்ருதாதேவியின் பெயரில் மத்திய வனத்துறை அமைச்சகமும், ராஜஸ்தான் மாநில அரசுகளும் இன்றும் விருதுகள் வழங்கிக் கெளரவித்து வருகின்றன.
இப்படி எல்லாம் மரங்களை வளர்த்த நம் முன்னோர்களுக்கு மத்தியில், இன்றைய மனிதர்கள் பலரும் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுவைப்பதைப் போன்று படங்களை வெளியிட்டு பெருமை தேடிக்கொள்கின்றனர். அதற்குப் பதில், ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடமும் ஒவ்வொரு மரக்கன்றுகளை வழங்கி, பராமரிக்கச் செய்தாலே… அவர்களைப்போல மரங்களும் வளரும் என்பது நிஜம்.