ஞானகுரு டிபஸ்
ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் படு சோகத்தில் இருந்தார். ஞானகுருவின் அருகே அமர்ந்ததும், ‘இந்த உலகத்திலேயே கஷ்டமான வேலை என்ன தெரியுமா..? குழந்தை வளர்க்கிறதுதான். என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க. நாம வாழ்றதே அவங்களுக்காகத்தான்னு குழந்தைங்க புரிஞ்சுக்கிடறதே இல்லை” என்று சலித்துக்கொண்டார்.
‘’நீயும் அப்படித்தானே உன் பெற்றோரிடம் நடந்திருப்பாய்…”
‘’இல்லை. என் பெற்றோர்களைப் பார்த்தாலே பயப்படுவேன். எதற்கெடுத்தாலும் அடிப்பார்கள். அவர்கள் கண்டிப்புடன் வளர்த்த காரணத்தால்தான், இன்றைக்கு நன்றாக இருக்கிறேன். ஆனால், என் பிள்ளைகளுக்கு நான் என்ன சொன்னாலும் புரிவதில்லை. அடிக்கவும் மனம் வருவதில்லை… அவர்களிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை” என்றார்.
‘’ம்… இந்த உலகமே கதைகளால் சூழப்பட்டது. எனவே, குழந்தைகளுக்கு அவர்களுடைய வயதுக்கு ஏற்ப சுவாரஸ்யமாக கதை சொல்லிப் பழகு. அவர்கள் உன்னிடம் ஒட்டிக் கொள்வார்கள்” என்றார் ஞானகுரு.
‘’நான் சின்ன வயதில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்… ஒரு சாக்லேட் வாங்குவதற்கு எத்தனை சிரமப்பட வேண்டும் என்பதை எல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால், அதை அவர்கள் காது கொடுத்துக் கேட்பதே இல்லை”
‘’நீ சின்ன வயதில் அனுபவித்த பசி, கண்டிப்பு போன்றவை அவர்களுக்குப் புரியாது. குறிப்பாக உன்னுடைய மோசமான பக்கத்தைப் பார்க்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லி உன் பக்கம் இழுத்துக்கொள். உன் குழந்தையிடம் இன்னமும் மழலைத்தன்மை மாறவில்லை என்றால், அவனுக்கு ஏற்ப கதை சொல்லு…’’
‘’அப்படியொரு கதை சொல்லுங்களேன்..?”
‘’ வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், கத்திரிக்காய் எல்லாம் ஒரு தோட்டத்தில் வளர்ந்துக்கிட்டு இருந்திச்சு. ஒரு நாள் முட்டைகோஸை பறிச்சுட்டுப் போயிட்டாங்க. உடனே வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் எல்லாம் முட்டைகோஸுக்காக அழுதிச்சு. அடுத்த நாள் தக்காளியை பறிச்சுட்டாங்க. அதுக்கு வெங்காயமும் கத்திரிக்காயும் அழுதிச்சு. அடுத்து, கத்திரிக்காயையும் பறிச்சுட்டாங்க… வெங்காயம் மட்டும் அழுதிச்சு. அப்போ அழுதுகிட்டே வானத்துக்கிட்டே, ’எல்லோரையும் பறிச்ச போது நான் அழுதேன், என்னை பறிச்சா யார் அழுவா’ன்னு கேட்டதாம்.
உடனே வானம், ’உன்னை பறிச்சுட்டு போய் யார் உரிச்சாலும், உன் பக்கத்துல இருக்கிற எல்லோரும் உனக்காக அழுவாங்க’ன்னு சொல்லுச்சாம். அதனாலதான் வெங்காயம் உரிக்கும்போது எல்லோரும் அழுகிறோம்னு சொல்லு. குழந்தை குஷியாகும். தொடர்ந்து உன்னிடம் கதை கேட்கும். வயது வளர வளர, உன் கதைகளின் தரமும் வளரட்டும். வானத்தில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றன, பூமியில் எத்தனை உயிரினங்கள் இருக்கின்றன என்று தொடங்கி, இன்றைய அரசியல் நிகழ்வுகள் வரை நீ உன் வாழ்நாளில் கற்றுக்கொண்ட அத்தனையையும், சுவாரஸ்யமாக சொல்லிக்கொடு…’’
‘’அவர்களுக்கு நீதி போதிக்க வேண்டாமா… பொய், திருட்டு, போதை போன்றவை எத்தனை கொடுமையானது என்பதையும் சொல்லலாம்தானே…’’
‘’பொய் சொல்லக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டாம். நீ அப்படி வாழ்ந்து காட்டு. நீ திருட்டு, போதைகளில் இருந்து விலகி நில். உன்னை அப்படியே பிள்ளையும் பின்பற்றி நடக்கும். நீ வீட்டுக்குள் இருந்துகொண்டே, இதோ ஆபிஸ் பக்கத்தில் வந்துட்டேன் என்று பொய் சொன்னால், உன்னைவிட பெரிய பொய்யனாக பிள்ளைகள் வளரும்…’’
‘’சுவாரஸ்யமான கதைகளை சொன்னால் மட்டும் பிள்ளைகள் மாறிவிடுவார்களா..?’’
‘’கதைகள் என்பது பிள்ளைகளை உன்னிடம் வரவழைக்கத்தான். அப்படி வரும் குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றை எல்லாம் சின்ன வயதில் இருந்தே கற்றுக்கொடு. ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்று வித்தியாசம் பார்க்காமல் நீச்சலடிக்கக் கற்றுக்கொடு. சைக்கிள் ஓட்ட கத்துக் கொடு. இவை எல்லாவற்றையும்விட சமையல் செய்ய கற்றுக்கொடு…’’
’’சமையல் செய்யவா..?”
‘’ஆம்… அதுதான் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான கலை. உணவுப் பொருட்கள் எப்படி விளைகிறது, அதனை வீட்டுக்குக் கொண்டுவர எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை வயலுக்கு கூட்டிப் போய் காட்டு. மார்க்கெட்டுக்கு கூட்டிப் போய், காய்களை எப்படி தேர்வு செய்து வாங்குவது என்பதை சொல்லிக்கொடு. காய்களை சுலபமாகவும், வேகமாகவும் நறுக்குவதற்கு கற்றுக்கொடு.
அடுப்பை கையாள்வதற்கும் கற்றுக்கொடு. சப்பாத்தியில் தொடங்கி தோசை, பிரட் என்று சிம்பிளாக ஆரம்பித்து சாதம் வைக்கவும் கற்றுக்கொடு. குறிப்பாக பால் சாதம், மோர்சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் என்று, தனக்குத் தேவையானதை பிள்ளையே சமைப்பதற்கு கற்றுக்கொடு. அதைவிட முக்கியம், சாப்பிட்ட பாத்திரங்களை கழுவச் சொல்லிக் கொடுப்பது
அதேபோல் பணத்தை சேகரிக்க கற்றுக்கொடு. நீ கொடுக்கும் பணத்தில் பிள்ளையே நோட்டு, புத்தகம், தின்பண்டம் போன்றவற்றை வாங்குவதற்கு பழக்கு. அப்போதுதான், அவன் எவ்வளவு செலவு செய்கிறான் என்பது தெரியவரும்.
பொது போக்குவரத்தான பஸ், ரயிலில் பிள்ளைகளைக் கூட்டிப் போ. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை சந்திக்கச் செல்லும்போது மறக்காமல் குழந்தையையும் கூட்டிச் செல். தினமும் பொழுதுபோக்குவதற்கும், விளையாடுவதற்கும் ஊக்கம் கொடு…’’
’’இப்படி ஒரு வேலைக்காரனுக்குத் தேவையானதை எல்லாம் சொல்லிக்கொடுத்தால், அவன் படிப்பு என்னாகும்..? எப்படி நல்ல மதிப்பெண் வாங்குவான்..? எப்படி வேலைக்குப் போவான்..?”
‘’இன்று நீ கவலைப்படுவது போலவே, உன் பிள்ளையும் அவன் பிள்ளையை நினைத்து வருத்தப்பட வேண்டும் என்று நீ நினைத்தால், அவனை பாடம் மட்டும் படிக்கச் சொல். அவனும் அவன் பிள்ளைகளும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நீ நினைத்தால், வாழ்க்கையைக் கற்றுக்கொடு. படிப்பை அவன் பார்த்துக்கொள்வான்…”
பதில் சொல்ல முடியாமல் தவித்தார் மகேந்திரன்.