சாதியும் மதமும் பொய் என்ற அருட்பெருஞ்ஜோதி
உலகில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பசிப்பிணிதான் என்பதை உணர்ந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை உலகுக்குச் சொன்னவர். ஒருவன் பசியோடு இருக்கும் பொழுது அவனுக்கு எந்தவித கருத்தும் தேவைப்படாது. அவன் பசியைப் போக்கிவிட்டுதான் மற்ற ஆன்மிக விஷயத்தை அவனோடு பேச முடியும்.
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு இதை தவிர்த்து கடவுள்அருள் பெறுவதற்காக, நாம் என்னபாடுபட்டாலும் அதனால் நம்மை நாமே ஏமாற்றி கொள்வோமே தவிர கடவுள் அருளை நிச்சயமாக பெறமுடியாது என்றவர் ராமலிங்க அடிகளார். 1867 – ஆம் ஆண்டு பார்வதிபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று, சமரச சுத்த சன்மார்க்க தருமச் சாலையை நிறுவினார், வள்ளல் பெருமான். 1867 – ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி, இருபத்தி ஒரு அடி நீளம், 2.5 அடி அகலம் இரண்டரை அடி ஆழமுள்ள அணையா அடுப்பு ஏற்படுத்தினார். அன்று எரியத் தொடங்கிய அந்த அணையா அடுப்பு 154 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. மனிதனின் பசி என்கின்ற நெருப்பு அணைய வேண்டும் என்று சொன்னால், இந்த அணையா அடுப்பு எரிய வேண்டும்,
இந்த அணையா அடுப்பை எரியவிட்டால், மனிதனின் பசிப்பிணி நீங்கிவிடும் எனவே இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இந்த தர்ம சாலையை ஏற்படுத்தினார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள். வள்ளலாரின் பொன்மொழிகள் இன்றும் வழி காட்டுகின்றன.
- ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.
- உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
- பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் நின்றுவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
- வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.
- மனதை அடக்க நினைத்தால் அடங்காது.. அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
- எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும்.
மூடநம்பிக்கைகளை உடைப்பதே உபதேசம். இயற்கையின் உண்மையை உள்ளபடி அறிந்து அனுபவிப்பதே உண்மையான வழி என்று கூறும் வள்ளலார் கேட்ட கேள்விகள் ஆன்மிகவாதிகளை உலுக்கியெடுத்தன.
கடவுள் என்றால் என்ன? கடவுள் எங்கே? கடவுள் ஒருவரா அல்லது பலரா? நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும்? கடவுளை வணங்காவிட்டால் என்ன நடக்கும்? சொர்க்கம் என்று ஒன்று உண்டா? கடவுளை எப்படி வணங்க வேண்டும்? கடவுள் ஒருவரா அல்லது பலரா? கடவுளுக்கு கை, கால் இருக்கிறதா? கடவுளுக்காக நாம் எதையும் செய்ய முடியுமா? கடவுளைக் கண்டுபிடிக்க எளிதான வழி எது? இயற்கையில் கடவுள் எங்கே இருக்கிறார்? அழியாத வடிவம் எது? நமது அறிவை எவ்வாறு உண்மையான அறிவாக மாற்றுவது? நீங்கள் எப்படி கேள்விகளைக் கேட்பது மற்றும் அவற்றுக்கான பதில்களைப் பெறுவது? எது நம்மிடம் உண்மையை மறைக்கிறது? உழைக்காமல் கடவுளிடமிருந்து எதையும் பெற முடியுமா? உண்மையான கடவுளை அறிய மதம் பயனுள்ளதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி பதிலும் கூறினார்.
தமிழ் மாதமான கார்த்திகைத் திருநாளில், தனது அறையில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீப விளக்கை எடுத்து, முன் வைத்தார். மாளிகை. 1874 ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் தேதி, அதாவது ஜனவரி மாதம், இந்திய வானவியலில் குறிப்பிடப்படும் பூசம் நட்சத்திர நாளில், வள்ளலார் அனைவருக்கும் விடை கொடுத்தார். நள்ளிரவில் வள்ளலார் மாளிகை அறைக்குள் நுழைந்தார். அவரது விருப்பப்படி அவரது முக்கிய சீடர்களான கல்பட்டு ஐயாவும் தொழுவூர் வேலாயுதமும் மூடிய அறையின் கதவை வெளியில் இருந்து பூட்டினர். அங்கிருந்த சிறிய துளையும் அடைக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் ஒளியாக மாறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், அன்றைய நாளில் வள்ளலாருக்கு கடுமையான எதிர்ப்புகள் தோன்றின. அதனால் அவரை உயிருடன் வைத்து எரித்துவிட்டார்கள். அதையே ஜோதி வடிவம் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை காட்டப்படவில்லை. அதேநேரம், அவர் ஜோதியாக மறைந்ததற்கும் ஆதாரங்கள் கிடையாது. அவரது வார்த்தைகளே ஜோதிமயம். அவரது தத்துவங்கள் நெருப்பை விட சூடானவை. அவற்றை பின்பற்றினாலே போதும்.