முதுமை தத்துவம்
சினிமாக்களில், மாயாஜாலக் கதைகளில் சூனியக்காரக் கிழவிகள் காட்டப்படுகிறார்கள். ஆனால் எங்கேயும்சூனியக்காரக் கிழவர்களை பார்க்கமுடிவதில்லை. அது ஏன் தெரியுமா..?
சிறுமிகளை இந்த உலகம் கொண்டாடுகிறது. இளம்பெண்களை ஆண்கள் உளமாற ரசிக்கிறார்கள். தாய்மை அடைந்த பெண்களை போற்றி வணங்குகிறார்கள். ஆனால், வயதான பெண்களை…?
வீட்டுக்கு மனைவி என்று ஒரு பெண் வந்தபிறகு அம்மாவின் தேவை ஆணுக்குத் தீர்ந்துவிடுகிறது. அதன்பிறகு வீட்டின் சமையல் மற்றும் குடும்பப் பொறுப்புகளை மனைவி எடுத்துக்கொள்கிறாள். ஆகவே, அந்த குடும்பத்தில் வயதான தாய், ஒரு தேவையற்ற பழம்பொருளாக மாறிவிடுகிறாள்.
இதுவே தந்தையின் நிலையில் கொஞ்சம் மாறுபடுகிறது. அதாவது பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய முதுமை வரையிலும் ஏதேனும் ஒரு வகையில் பொருளீட்டுகிறார்கள். எனவே பொருளீட்டும் வரையில் தந்தையின் தேவை குடும்பத்தில் தீர்ந்துபோவதில்லை.
அதேநேரம், வயதான ஆண், பெண் நடவடிக்கைகளில் சின்னச்சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. அதாவது, தன்னுடைய பேச்சு எடுபடாத இடங்களில் ஆண் பேச்சைக் குறைத்துக்கொள்கிறான். மேலும், வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு அவனிடம் அதிக விஷயங்களும் இல்லை. ஆகவே, கிடைக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறான்.
ஆனால், அம்மாக்கள் ஒருபோதும் அப்படி அமைதியாக இருப்பதில்லை. அவளுடைய சாம்ராஜ்யம் நடந்த வீடு அது. அங்கே இன்னொரு பெண் மருமகளாக வந்து சிறப்பாகவே ஆட்சி புரிந்தாலும் சின்னச்சின்ன குறைகளை கண்டுபிடித்து தைரியமாக தட்டிக் கேட்பாள். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி எல்லை தகராறு எட்டிப் பார்க்கிறது. இந்த சண்டையில் மகன்களால் ஒருபோதும் அம்மாக்கள் பக்கம் நிற்க முடிவதில்லை. ஆகவே, சண்டையில் தோற்றுப்போகும் அம்மாக்கள் மீண்டும் மீண்டும் கோபத்துக்கு ஆளாகி, தன்னுடைய அங்கீகாரத்துக்காகப் போராடுகிறாள், விடாப்பிடியாக சண்டை போடுகிறாள்.
தேவதையாக, தெய்வப்பிறவியாக பெண்ணை பார்த்த ஆண், இப்போது குடும்பத்தில் பிரச்னையை உருவாக்கும் அருவருப்பான பெண்ணாக, மோசமான கிழவியாகப் பார்க்கிறான். அந்த ஆண்களின் மனநிலையில்தான் சூனியக்காரக் கிழவிகள் எனும் பாத்திரம் உயிர்பெறுகிறது.
இழந்த அழகைப் பெறுவதற்கு, இழந்துபோன உரிமையை மீட்பதற்கு, அதிகாரத்தைப் பெறுவதற்காக சூனியக்காரக் கிழவிகள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்று கதை எழுதுகிறார்கள். அதை பெண்களும் சந்தோஷமாக ரசிக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை. ஏனென்றால் தேவதையாக இன்று பார்க்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்காலத்தில் சூனியக்காரக் கிழவியாக மாறப் போகிறாள் என்ற உண்மை அறியாமல், இன்றைய வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
அமைதியாக, வாயைப் பொத்திக்கொண்டு இருக்கும் ஒரே காரணத்தினால் வயதான கிழவர்கள் புத்தரைப் போலவும், அதிகம் பேசுவதன் காரணமாகவே கிழவிகள் சூனியக்காரக் கிழவியாகவும் மாறிவிடுகிறார்கள். ஆகவே பேச்சைக் குறைத்தால் ஞானியாகலாம்… அதிகம் பேசுவதே அவமானம்.