ஞானகுரு அத்தியாயம் 6
கங்கை மாதா ‘ஹோ’வென்ற இரைச்சலுடன் பிரவாகமாய் ஓட்டிக் கொண்டிருந்தாள். நுங்கும் நுரையுமாகப் புரண்டு கொண்டிருந்த அவள் மடியில் அப்படியே விழுந்தேன். ஆசை தீரும் மட்டும் குளித்தேன். எத்தனை கோடி மனிதர்கள் குளித்த நதி… எத்தனை கோடி மக்களின் நம்பிக்கை! குளிக்கையில் மனம் தத்துவ விசாரத்தில் நீந்தியது. ‘பிற நதிகளைப் போல் கங்கையும் ஒரு நதிதான்… ஆனால் இதற்கு மட்டும் ஏன் புண்ணிய நதி என்ற பட்டம்? புண்ணிய நதி என்ற நம்பிக்கையே, இத்தனை மனிதர்களை இழுக்கிறதே. நம்பிக்கை அற்றவர்களுக்கு இதுவும் ஒரு சாதாரண நதியே…’ தலையை சிலுப்பிக் கொண்டு கரையேறினேன்.

புதிதாக வாங்கியிருந்த காவி ஆடையை உடுத்திக் கொண்டேன். பழைய ஆடையில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துவிட்டு, அதனை அப்படியே நதியில் ஓடவிட்டேன்.
நதியில் போட்ட பெருங்குளியல், வயிற்றில் பசித் தீயை மூட்டிவிடது. ஹோட்டலில் மூக்குப் பிடிக்க சாப்பிட உடல் இழுத்தாலும், அதை அடக்கிக்கொண்டு, ‘இந்த பசியும் ருசியாகத்தானே இருக்கிறது. இதனையும் கொஞ்சநேரம் அனுபவிக்கலாம்’ என நினைத்து கரையில் அமர்ந்தபடி கங்கை காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
மந்திரங்கள் விற்பனை
புரோகிதர்கள் மந்திரங்களை நன்றாகவே விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு புரோகிதருக்கு முன்னாலும் நீண்ட வரிசை. இத்தனை பாவிகளா… என்று முகம் திருப்பினேன். என்னையும் சிலர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் புரோகிதம் செய்யக் கூப்பிட்டுப் பார்த்து, ஏமாந்து போனார்கள்.
கொஞ்சல் வெயில் சுள்ளென உரைக்க ஆரம்பித்தது. ஒரு எழுபதைத் தாண்டிய பெண்மணியை, கைபிடித்துக் கூட்டிவந்தான் ஒரு இளைஞன். குளிர்ந்த நீரில் குளித்தால் அவள் ஜடமாகி விடுவாள் என நினைத்து, கங்கை நீரை சொம்பில் மொண்டுவந்து, அவள் தலையில் தெளித்தான். மீதி நீரை அவள் பாதத்தில் ஊற்றினான். அதன் பின்னர் அவளை என்னருகே பாதுகாப்பாக அமரவைத்து, அந்த இளைஞன் நதியில் இறங்கி குளிக்கத் தொடங்கினான்.
தன்னுடைய பிறவிப்பயன் முழுமையடைந்து விட்டது என்ற ஆனந்தம் கண்களில் மின்ன, பெருக்கெடுத்தோடும் கங்கையை அந்த மூதாட்டி ஆவல் தீர பார்த்துக் கொண்டு இருந்தாள். குழந்தையாக மாறியிருந்த அவளை, நான் வேடிக்கை பார்த்தேன். என் பார்வை அவள் புலன்களைத் தாக்கி இருக்க வேண்டும். கங்கை தரிசனத்தில் மூழ்கி இருந்தவள், என்னைப் முகம் சுருக்கிப் பார்த்தாள். என் முகச்சாயலைப் பார்த்து, ‘‘தமிழா…’’ என்று ஆவலுடன் கேட்டாள்.
கங்காதேவி பாவம்
நான் ஆமோதிக்கும்விதமாக தலையை அசைத்தேன்.
’’மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு… பாரத்தை எல்லாம் கங்கா தேவி மேல இறக்கிவைச்சது மாதிரி இருக்கு’’ என்று அவள் சொன்னதும், கொஞ்சம் பெரிய புன்னகையை பதிலாகக் கொடுத்தேன். மேற்கொண்டு எதுவும் பேசாமல்… மீண்டும் நதி பார்க்க ஆரம்பித்தாள், அவள்.
அந்த இளைஞன் குளித்துவிட்டு மேலே வந்தான். என்னைப் பார்த்து அவனும் சிநேகமாக சிரித்தான். எனக்கும் அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் பிடித்துப் போனது.
’’பாட்டி எழுந்தரிங்கோ போலாம்…’’ என்று கை கொடுத்து எழுப்பினான்.
’’ராமச்சந்திரா, நீயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாரேன், கங்கை என்னமா போறா..’’ என்றாள்.
நியூமராலஜி
’’பாட்டி… ராமச்சந்திரான்னு கூப்பிடாதே… ராம்சந்தர்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்றது..!’’ என்று முனகியபடியே அருகில் அமர்ந்தான்.
’’ஸ்வாமியும் தமிழ்தான்’’ என்று என்னை அவனுக்கு அறிமுகப் படுத்தினாள்.
’’நியூமராலஜி வேலை செய்யுதா?’’ என்று அவனிடம் கேட்டேன்.
ராமச்சந்திரனின் கண்களில் வியப்பு. அது விலகாமலே… ‘‘இன்னும் பலன் தெரியலை…’’ என்றான்.

’’எவ்வளவு ஏமாந்தாய்?’’ அடுத்து நான் வீசிய இந்தக் கேள்வியால் ராமச்சந்திரனின் முகம் கோபத்தில் சிவந்தது. ராமச்சந்திரனுக்கு நான் நியூமராலஜியை கிண்டல் செய்தது பிடிக்கவில்லை. அதனால் முகம் திருப்பிக் கொண்டான். அவன் கோபத்தை உள்ளூர ரசித்துக்கொண்டு மௌனமாக இருந்தேன்.
’’ஊர் கூடி பெரியவங்க வைச்ச பேரை மாத்தாதேடான்னு எவ்வளவோ சொன்னேன், கேட்க மாட்டேங்கிறான். நீங்களாவது அவனுக்குப் புத்தி சொல்லுங்க சாமி…’’ சலித்துக்கொண்டாள் பாட்டி.
என் பார்வை, பாட்டியிடம் இருந்து விலகி மறுபடியும் ராமச்சந்திரன் மீது விழுந்தது. அவன் முகத்தில் கோபம் வடிந்து போயிருந்தது, ஆனால் ஏமாற்றத்தின் நிழல் அப்பட்டமாகத் தெரிந்தது. தலைமை நிமிராமலே பேசத் தொடங்கினான்.
’’சாமி, நாலு வருஷமா எனக்குப் பொண்ணு தேடுறாங்க, அமையவே மாட்டேங்குது. ஆபீஸ்லயும் எனக்குப் பிறகு வேலையில சேர்ந்தவன் எல்லாம் பிரமோஷன் வாங்குறான். எனக்கு மட்டும் ஒரு மண்ணும் இல்ல. ரொம்பவும் வெறுத்துப் போய்தான், ஒரு ஜோசியரைப் போய் பார்த்தேன். என்னைப் பார்த்ததுமே, ‘நீ பெரிய திறமைசாலி, ஆனா உன் பெயர்லதான் தப்பு இருக்கு’னு பளிச்சின்னு சொல்லிட்டார். நான் பிறந்த நேரத்துக்கும் ராமச்சந்திரன்ங்கிற பேரோட கூட்டுத் தொகைக்கும் பொருத்தம் இல்லையாம்….’’ என்று அவன் தரப்பு நியாயத்தை ஆத்திரமாகக் கொட்டினான் இளைஞன்.
நான் எதுவும் பேசாமல் கங்கையை வேடிக்கை பார்த்தேன். சுழித்துப் புரண்டு ஓடிக் கொண்டு இருந்தது. ஜோதிடப் பிரியர்களால், ஐந்து நிமிடம்கூட அமைதியாக இருக்க முடியாது என்பது தெரியும். நினைத்தது போல் அவனே பேசினான்.
’’அதான் நியூமராலஜி படி என் பேரை ராம்சந்தர்னு மாத்திட்டேன். தினமும் காலையில எழுந்ததும் முதல் வேலையா என் பெயரை 108 தடவை எழுதுறேன். பேசுறப்ப, லெட்டர் எழுதுறப்ப எல்லாம் ராம்சந்தர்னே எழுதுறேன். ஏன் சாமி, நியூமராலஜி பொய்யில்லேல்ல… பலிக்கும்ல?’’ அதீத நம்பிக்கையுடன் கேட்டான் ராமச்சந்திரன்.
’’ஒரு தாளில் பத்து ஆப்பிள் என்று எழுதி உன் பையில் போடுவதாக நினைத்துக் கொள்… இப்போது உன் பையில் என்ன இருக்கிறது?’’

’’பத்து ஆப்பிள்” என்று சொல்ல வந்தவன் கொஞ்சம் யோசித்து, ‘‘இல்லை.. பத்து ஆப்பிள் என்று எழுதிய பேப்பர்… இல்லை வெறும் பேப்பர்’’ என்றான் குழம்பியபடி.
’’ராமச்சந்திரா… மனிதனின் கை விரல்கள் அடிப்படையில்தான் எண்கள் உருவாக்கப்பட்டன. அதனால்தான் பூஜ்யம் முதல் ஒன்பது வரை மட்டுமே இருக்கின்றன. ஒருவேளை மனிதனுக்கு இருபது கை விரல்கள் இருந்திருந்தால், வேறுமாதிரியான கணிதம் உருவாகியிருக்கலாம். உன்னுடைய பெயரை தமிழில் எழுதினால் ஒரு எண்ணிக்கை வரும், ஆங்கிலத்தில் எழுதினால் ஒரு எண்ணிக்கை வரும். அப்படியிருக்கும்போது, எந்த எண்ணிக்கையை வைத்துப் பலன் சொல்ல முடியும்?’’
’’அப்படியானால் இதில் எந்த பலனும் இருக்காதா…?’’ இருண்ட முகத்துடன் கேட்டான்.
’’கண்டிப்பாக இருக்கும்..! ஆனால் நியூமராலஜி சொன்ன அந்த ஜோதிடருக்கு மட்டும் கண்டிப்பாக பலன் கிடைத்திருக்கும்”” என்றேன். பாட்டி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏமாற்றத்தில் இருந்த ராமச்சந்திரன், ‘‘சரி, நியூமராலஜியை விடுங்கள்… கிரகங்களை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் ஜோதிடமாவது பலிக்கும்தானே…’’ என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
அதனதன் இயல்பில் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களின் சஞ்சாரத்துக்கும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், ஆதிமனிதன் வெப்பம் தரும் சூரியனையும், குளிர் தரும் சந்திரனையும் இன்னும் கண்களால் பார்க்க முடிந்த சில கிரகங்களுக்கும் தங்களுடைய வாழ்வுக்கும் நேரடி சம்பந்தம் இருப்பதாக நம்பினான், நம்புகிறான். கிரகங்களின் சஞ்சாரம் தன் தலையெழுத்தைத் தீர்மானிப்பதாக நம்பியதன் விளைவில் பிறந்ததுதான், ஜோதிடம். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த இடங்களில் சஞ்சாரம் செய்கின்றன என்பதை அடிப்படையாக வைத்து ஜாதகங்கள் எழுதப்படுகின்றன.
உண்மையில் மனிதகுலம் தோன்றுவதற்கு கோடானுகோடி வருடங்களுக்கு முன்னரே உருவானதாக நம்பப்படும் கிரகங்களுக்கு மனித வாழ்க்கை என்பது ஒரு பொருட்டே அல்ல. பிரபஞ்சத்தின் முன்பு மனிதன் ஒரு தூசு. பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த ஒரு கிரகத்தாலும் எந்த ஒரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் நன்மையோ… தீமையோ செய்ய முடியாது. காற்றும் வெயிலும் அதனதன் இயல்பில் செயல்படுகின்றன. அதனை நல்லதாகவும்… கெட்டதாகவும் எடுத்துக் கொள்வது மனிதர்களின் இயல்பு மட்டுமே.
அதேபோன்று நல்ல நேரம், கெட்டநேரம் என்பதும் நம் நம்பிக்கையின் விளைவுதான். நேரம் என்பதே மனிதர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் அப்பாற்பட்டது. அதில் எப்படி நல்ல நேரம் என்றும் கெட்ட நேரம் என்றும் இருக்க முடியும். இந்த நவீன யுகத்தில் மனிதன், சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டான். அந்தக் குழந்தைகள் எல்லாம் சிரஞ்சீவியாக இந்த உலகத்தில் வாழ்ந்துவிடப் போகிறார்களா என்ன? ஜோதிடத்தை நம்புபவர்கள் மட்டுமே, அதனை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உன்னைப் போன்று தன்னை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் இருக்கும் வரை, ஜோதிடம் இருக்கவே செய்யும்’’ & என் குட்டி பிரசங்கம், ராமச்சந்திரன் முகத்தில் குழப்ப ரேகைகளை உற்பத்தி செய்தது. அதை நோட்டமிட்டபடியே முத்தாய்ப்பாக, ‘‘அடுத்த கணத்தில் என்ன நிகழப்போகிறது என்பதை எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. இதுதான் நிஜம். இந்த நிஜமே மனித வாழ்க்கையின் சுவாரஸ்யம்…’’ என்றேன்.
’’ஆனால் ஜோதிடத்தில் சொல்வது பலிக்கிறதே…’’ என்று குரலை இழுத்தான் ராமச்சந்திரன். இதற்கு மேல் விளக்கத் தேவை இல்லை என்பது போன்று சிரித்தபடி நதியைப் பார்த்தேன். நான் சொன்ன விளக்கம் பாட்டியை உலுக்கியிருக்க வேண்டும்.
’’சாமி… காசியில் எங்க குடும்பத்துக்கு பூர்வீக வீடு இருக்குது, அங்கதான் நாங்க தங்கியிருக்கோம். நீங்களும் அங்க வரணும். இரண்டு நாள் தங்குனா புண்ணியமா இருக்கும்…’’ என்று பாட்டி விண்ணப்பித்தாள். ராமச்சந்திரனும் ‘‘ஆமாம் சாமி… ப்ளீஸ் வாங்களேன்…” என்று கேட்டுக் கொண்டான்.
நான் விட்டேத்தியாக எழுந்து நின்று, கை கொடுத்து பாட்டியைத் தூக்கிவிட்டேன்.
- ஞானகுரு வருவார்