அனுபவித்து வாழுங்கள்
மரணத்துக்குப் பிறகே சொர்க்கத்தை அடையமுடியும் என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையல்ல, ஏனென்றால் மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை அறிந்தவர்கள் யாருமில்லை.
ஆனால், இங்கு வாழும் மனிதர்கள் அனைவரும் வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.
அதெப்படி என்று கேட்கிறீர்களா..?
கடுமையாக வேலை செய்துவிட்டு வரும்போது அல்லது சுற்றுலா முடிவடையும் கடைசி தினங்களில் என்ன நினைப்போம் என்று யோசித்துப் பாருங்கள். எப்போது வீட்டுக்குப் போய் சேர்வோம் என்றுதான் ஆசைப்படுவோம். நமது வீட்டுக்குப் போய் அங்கே வழக்கமாகப் படுக்கும் இடத்தில் படுப்பது தான் இன்பமாகத் தெரியும்.
அப்படி நமக்கு இன்பம் தரும் வீடு தான் சொர்க்கம். நமது குடும்ப உறுப்பினர்களே நம்முடைய சொர்க்கத்தின் பாதுகாவலர்கள். எனவே, நாம் வசிப்பது சொந்த வீடு, வாடகை வீடு என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை, எங்கு வசிக்கிறோமோ, அந்த வீட்டை சொர்க்கமாக எண்ணுவது மட்டுமல்ல, மாற்றிக்கொள்ளவும் வேண்டும்.
வீடு சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அங்கே நிம்மதி இருக்க வேண்டும், தேவையற்ற சண்டைகள் இருக்கக்கூடாது. குழப்பங்கள், அவசரங்கள் இருக்கக்கூடாது. இதற்கெல்லாம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விஷயம் என்ன தெரியுமா..?
இரவு சீக்கிரம் தூங்கி காலையில் வேகமாக எழுந்திரிப்பது முக்கியம். ஏனென்றால், லேட்டாக எழுந்தரிப்பதாலே நிறைய சிக்கல், அவசரம், குழப்பம் உருவாகிறது. எனவே முன்கூட்டியே எழுந்துகொள்ளுங்கள். அப்படி சீக்கிரம் கண் விழிக்கும்போதே உடலிலும் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி பரவுவதை உணர முடியும். அந்த புத்துணர்வை குடும்பத்தில் மற்றவர்களுக்கும் கொடுங்கள்.
ஏனென்றால் காலையில் நீங்கள் என்ன உணர்வுகளை மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்களோ, அதுவே நாள் முழுவதும் நீடிக்கும். காலையில் நீங்கள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால், அது மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். காலையில் ஒருவர் கோபமாக கத்தத் தொடங்கினால் வீட்டில் மற்றவர்களையும் அந்த கோபமும் சோகமும் தொற்றிக்கொள்ளும். எனவே, எந்த காரணம் கொண்டும் காலையில் மகிழ்ச்சியை தவற விடாதீர்கள்.
அதேபோல் வீட்டை அழகு படுத்த தயங்காதீர்கள். அழகு என்பது கவர்ச்சியானது, சுத்தமானது. சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை வரை உங்கள் அழகுபடுத்துதல் தொடரட்டும். அதுவே பார்த்தவுடன் மகிழ்ச்சி தரும்.
வீட்டுக்குள் வரும்போதே உங்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சி கிடைப்பதை உணருங்கள். அப்படி உணரத் தொடங்கினாலே வீடு சொர்க்கமாக மாறிவிடும்.
எஸ்.கே.முருகன்
9840903586