சிம்பிள் பியூட்டி
நாற்பது வயதைத் தாண்டினாலே உடல் பலவிதமான எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த வயதில் பலவித மாற்றங்களும் நம்முடைய உடலை ஆக்கிரமிக்கும். அதில் ஒன்று… அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல். தலையில் காணப்படும் வறட்சிதான் இதற்கு முக்கிய காரணமென்றாலும், அதைக் கொண்டுவந்து சேர்க்கும் மூலக்காரணிகள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக, மெனோபாஸ் என்பது இந்த வயதில் ஆரம்பமாவதால், டென்ஷன், உடல் சோர்வு, மன உளைச்சல் ஆகியவை ஏற்பட்டு, அதன் காரணமாகவும் தலைமுடி உதிரும்.
‘நாற்பது வயதாகிவிட்டது. இனிமேல் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்’ என்று ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். கொழுப்புச் சத்து நிறைந்த பால், தயிர் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். இதனால், தோல் பாகங்களில் எண்ணெய்ப் பசை குறைந்து, ஒட்டுமொத்த உடம்பும் வறண்ட பாலைவனமாகிவிடும். இதுவும் முடி உதிரக் காரணமாக அமைந்துவிடும். தலையில் வகிடு எடுக்கும் பகுதி அகலமாகி, சொட்டை விழுந்ததுபோல் தெரியும். கோண வகிடு எடுத்தாலும் ஒரு பக்கமாக வழுக்கை விழும். அந்த இடத்தில் முடி வளர்வதற்கான அறிகுறியே இல்லாமல் போய்விடும். முடிகளின் நுனியில் பிளவு ஏற்பட்டு, வளர்ச்சியும் பாதிக்கப்படக்கூடும்.
இப்படிப்பட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்க… அடிக்கடி வெறும் தலைக்கு குளிப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். அரை டீஸ்பூன் விளக்கெண்ணெயை சிறு கிண்ணத்தில் ஊற்றி, அதை அப்படியே கொதிக்கும் நீரின் மீது வைத்து எடுத்து, சூடு பறக்க தலையில் தேய்க்க வேண்டும். பிறகு, சுத்தமான சீப்பு கொண்டு வார வேண்டும். தினமும் இப்படிச் செய்தால், வகிடு பகுதியில் அகலம் குறைந்து, நெருக்கமாக முடி வளர ஆரம்பிக்கும்.
முடியானது அதிகம் பிளவுபட்டிருந்தால், 100 மில்லி தேங்காய் எண்ணெயில் சிறிது ஓமத்தைப் போட்டுக் காய்ச்சி, தலையில் நன்றாகத் தேய்த்து, சீப்பு கொண்டு வாரிக் கொள்ளலாம். ஓமம் சேர்ப்பது கூந்தலைப் பாதுகாப்பதோடு, சளி பிடிப்பதையும் தடுக்கும்.
சிலருக்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதெல்லாம் கொத்து கொத்தாக தலையணையில் முடிகள் விழுந்திருக்கும். தலையில் சீப்பை வைத்தாலோ… வேரோடு உதிரும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், தினமும் இரவு தூங்கப் போவதற்குமுன் ஆலிவ் எண்ணெயை சிறிது எடுத்து தலையில் நன்றாக மசாஜ் செய்து சீப்பு கொண்டு வாரி, நுனி வரை பின்னல் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால், முடி உதிர்வது குறையும்.
வறட்சி காரணமாக முடியின் பளபளப்பும் குறைந்துவிடும். இதற்கு, வெந்நீரில் 3 டீஸ்பூன் வெந்தயத்தூள், 3 டீஸ்பூன் டீத்தூள், ஒரு டீஸ்பூன் தயிர்… இவை மூன்றையும் கலந்து தலைக்கு குளித்து வந்தால் ’போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு” என்கிற கதையாக மறுபடியும் உங்களின் கூந்தல் பளபளக்கும்!