காலை பிடி… காலை பிடி..!

Image

ஒலிம்பிக்கில் எப்போ வரும் கபடி?


நம் இந்தியாவின் பழமையான, பாரம்பரிய விளையாட்டுகளுள் கபடியும் ஒன்று. மண் தரையில் புழுதி பறக்க விளையாடப்படும் கபடியானது, ஒருகாலத்தில் கிராமங்களுக்குள் மட்டுமே எட்டிப் பார்த்தது. ஆனால், இன்று உலகில் பல நாடுகளில் தேசிய விளையாட்டாக இருக்கிறது.

காலை பிடி, காலை பிடி என்பதுதான் மருவி கபடி என்று மாறியது என்றாலும், கடந்த 50 வருடங்களில்  கபடி சில மாற்றங்களைக் கண்டிருக்கிறது. அதிலும் தற்போது கபடி வண்ணமயமான விளக்குகள் ஒளிர, பலவகையான நவீன இசைக் கருவிகள் முழங்க விளையாடப்பட்டு வருகிறது. சர்வதேச விளையாட்டு அரங்கிலும் கபடி முக்கிய இடத்தை எட்டியுள்ளது. கிராமத்து இளைஞர்களோடு பின்னிப் பிணைந்திருந்த கபடியானது, இன்று பெண்களும் விளையாடும் வீரமிகு விளையாட்டாக மாறியிருக்கிறது. வயது மற்றும் எடைப் பிரிவுகளின் அடிப்படையில் கபடி போட்டிகள் வகைப்படுத்தப்படுகின்றன. சர்ஜீவினி, அமர், ஹூட்டுட்டு என்று இந்தியாவில் மூன்று வகையான கபடி விளையாட்டுகள் உள்ளன.


ஐ.பி.எல். (கிரிக்கெட்), ஐ.எஸ்.எல். (கால்பந்து) இருப்பதைப் போன்று கபடிக்கும் பி.கே.எல் (ப்ரோ கபடி லீக் ) என்கிற பெயரில் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் பெயரில் நடத்தப்படும் தொடர் மிகவும் பிரபலமானது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ப்ரோ லீக் மூலம் கபடிக்கு புத்துயிர் அளித்திருக்கிறார். இந்த தொடரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 12 அணிகள் பங்கேற்று விளையாடும். உலக அளவிலான கபடி போட்டிகளை வழிநடத்த சர்வதேச கபடி கூட்டமைப்பு உள்ளது. நம் நாட்டில் இந்தியக் கபடி கூட்டமைப்பு செயல்படுகிறது.


ஆசிய விளையாட்டு, உலகக் கோப்பை என ஆண்கள், பெண்களுக்கான இரு பிரிவுகளில் கபடி போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால், இன்னும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டு அங்கீகரிக்கப்படவில்லை. 1990ம் ஆண்டு  முதன் முறையாக, 11வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான  கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய ஆடவர் அணி கபடிப் போட்டியில் தங்கம் வென்று வந்தது. சமீப காலமாக ஈரான் அணி ஆசிய அளவில் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடி வருகிறது.  
2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் ஈரான் அணிதான் இந்திய அணியுடன் தங்கப்பதக்கத்துக்கு மோதி தோல்வி கண்டது. 2018ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய கபடி அணி, ஈரானிடம் தோல்வி கண்டு தங்கப்பதக்கத்தைக் கோட்டை விட்டது.

மகளிருக்கான கபடி போட்டிகள் 2012இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது சேர்க்கப்பட்டது. அதிலும் கடந்த 2 போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. அதுபோல், சர்வதேச கபடி அரங்கில், 2010  முதல் 2019ஆம் ஆண்டு வரை 6 முறை உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டியை  இந்தியா நடத்தியுள்ளது. 6 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.


இதையடுத்து, கபடி விளையாட்டை இன்னும் ஊக்குவித்து, ஒலிம்பிக்போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை  மத்திய அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. மத்திய விளையாட்டு துறை மந்திரியாக இருந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,  ‘கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும்’ என்று தெரிவித்திருந்தார். அதன்பிறகு, இந்த தடவை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கிரண் ரிஜிஜு,  ‘உள்நாட்டில் விளையாட்டு எந்தளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு கபடி சிறந்த எடுத்துக்காட்டு. நாங்கள் நினைத்த விளையாட்டு கலாசாரத்தின் துவக்கம் இதுதான். தற்போது இது நிஜமாகி வருகிறது. அடுத்த ஒலிம்பிக்கில் எப்படியும் கபடி இடம் பெறச் செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்’ என  தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய கிரண் ரிஜிஜு,  ‘கபடி விளையாட்டை இன்னும் ஊக்குவித்து, ஒலிம்பிக்போட்டியில் சேர்ப்பதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு விளையாட்டான கபடியை, ஒலிம்பிக் போட்டிக்கு எடுத்துச் செல்லத் தேவையான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு முன்னெடுக்கும்’ என்று மீண்டும் உறுதி கொடுத்திருக்கிறார். அமைச்சரின் இந்தப் பேச்சு கபடி விளையாட்டு  வீரர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இதுகுறித்து கபடி விளையாட்டின் மூத்த வீரர் தர்மராஜ் சேரலாதனிடம் பேசினோம். “இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் கபடி சேர்க்கப்படவில்லை. ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில்தான் கபடி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதிலும், நாம் சிறப்பான இடத்தில் இருக்கிறோம். இதைவைத்துத்தான் ஒலிம்பிக்கில் கபடியைச் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இது, நல்ல விஷயம். எப்படியும் ஒலிம்பிக்கில் கபடி இடம்பெற்றுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒலிம்பிக்கில், கபடி இடம்பெற்றால் நமக்கு மிகப்பெரிய கவுரவம். அதன்மூலம் எல்லா இளைஞர்களும் கபடிக்கு வருவார்கள். இதன்மூலம் வளரும் தலைமுறையினருக்கு கபடி ஓர் உந்துசக்தியாக இருக்கும்…” என்று தெரிவித்தார்.

அப்படியே நடக்கட்டும்.

Leave a Comment