என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119
குடிசைப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதும் ஏழை மக்கள் முதலில் கலந்துகொள்வதற்குத் தயங்கினார்கள். பரிசோதனை என்ற பெயரில் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பெண்கள் அச்சப்பட்டார்கள்.
எனவே, மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த பரிசோதனைகளின் முக்கியத்துவம் எடுத்துக் கூறப்பட்டது. முன்கூட்டியே மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பட்சத்தில் மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்த முடியும். மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது, உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது, அதோடு பெண் மருத்துவர்களே பரிசோதனை செய்வார்கள் என்றெல்லாம் அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்துக் கூறப்பட்டது. அதன் பிறகே நிறைய பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
இந்த மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டவர்கள் பெயர் உள்ளிட்ட மருத்துவ ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டன. ஒரு சில பெண்களுக்கு புற்று நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இவர்கள் அடுத்தகட்ட பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டனர்.
வரலாற்றிலேயே இல்லாத வகையில் 5.12.2013 முதல் 9.12.2013 வரை மட்டுமே 1,000 மருத்துவமுகாம்கள் சென்னை மாநகராட்சியில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன. முகாம்களில் கலந்துகொண்ட பெண்கள் பரிசோதனை செய்துகொள்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், 142 தனியார் மருத்துவமனைகளும் பங்கேற்றனர். சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட அக்கறை காரணமாக 1,669 தனியார் மருத்துவர்களும் பங்கேற்றனர் என்பது பிரமிக்கத்தக்க சாதனையாகும்.
- நாளை பார்க்கலாம்.