என்ன செய்தார் சைதை துரைசாமி – 159
மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மட்டும் கவனம் எடுத்துக்கொண்டால் போதாது, பெற்றோரும் போதிய அளவுக்கு ஆர்வத்துடன் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்தார் மேயர் சைதை துரைசாமி. எனவே, பெற்றோர்கள், ஆசிரியர்களை ஒருங்கிணைத்துக் கூட்டம் போட்டுப் பேசினார். எந்த வகையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதிக மதிப்பெண் பெறுவதற்கும் ஆர்வத்துடன் படிப்பதற்குமான வழிகளை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஆசிரியர் பெருமக்களிடம் மாணவ சமுதாயத்திற்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை சுட்டிக் காட்டினார். 10 மற்றும் 12ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் வகுப்புக்கு ஒரு மாணவனை தத்தெடுத்து மாநில அளவில் மதிப்பெண் வாங்கவைக்கும் அளவு ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வகுப்பு மாணவர்கள் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டியது ஆசிரியர் கடமை என்றாலும், வெல்லக்கூடிய திறன் உள்ள மாணவருக்கு கூடுதல் ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் கொடுக்க வேண்டியது ஆசிரியர் கடமை என்று வலியுறுத்தினார்.
மேயர் சைதை துரைசாமி காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கிடைக்கும் வசதிகளும், சலுகைகளும் பெருகிய காரணத்தால், ஒரு காலத்தில் மோசம் என்று விலக்கப்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளைத் தேடி மக்கள் வந்தனர். கல்விச் செலவு குறைந்து போனதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார நிலை உயர்ந்தது. மாநகர பள்ளியில் சேர்வதற்கு சிபாரிசு கடிதம் கேட்கும் அளவுக்கு, மதிப்பு கூடியது என்றால் அதற்கு ஒரே காரணம் மேயர் சைதை துரைசாமியின் தொலை நோக்குத் திட்டங்கள்தான்.
சைதை துரைசாமியின் சீரிய திட்டங்கள் மூலம் கல்வித் தரவரிசையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மாநகராட்சியின் 70 பள்ளிகளையும் சேர்த்து சென்னையில் 574 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேயர் பொறுப்புக்கு சைதை துரைசாமி வருவதற்கு முன்னர், மாநகராட்சி பள்ளிகள் தரவரிசையில் மிகவும் பின்தங்கி இருந்தன. ஆனால் சைதையின் தீவிர முயற்சி காரணமாக மாநகராட்சி பள்ளி தரவரிசைப் படி 83-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த தரவரிசையைக் கண்டு ஆச்சர்யப்படாத கல்வியாளர்கள் இல்லை. மாநகராட்சி பள்ளியின் வெற்றிப் பயணத்தில் இந்த தரவரிசையானது ஒரு மைல் கல் ஆகும். இதற்கு முழு முதல் காரணம் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.