கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
போலி
இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்…
மரியாதை ஒரு போலியான சமாச்சாரம்.
உச்ச அன்பிலும்
உச்ச கோபத்திலும்
இது இறந்திருக்கும்.
- கண்ணன் புலமி
நான்
உலகம்
என்னிடமிருந்து தொடங்கவில்லை.
அது என்னோடு
முடிவடையப் போவதுமில்லை.
துள்ளிப் போகும் ஆற்றில்
ஒரு துடிப்பு
நான்.
- ஆக்டேவியா பாஸ்
தீ
பகலில் எரியும்
திரியில் இருந்து
சுருள் சுருளாக பிரிகிறது இருள்
- கிருபா
வரம்
வனத்தையும் வாழ்வையும் இழந்து
சபிக்கப்பட்ட யானையைத்தான்
ஆசிர்வதிக்க
நிர்பந்திக்கிறான் பாகன்.
- தாரிக்
பொழைப்பு
வானம் பார்ப்பதும்
கடல் பார்ப்பதும்
யானை பார்ப்பதும்
ரயில் பார்ப்பதும்
காணாமல் போனது
பிழைப்பைப் பார்ப்பதில்
- மானா பாஸ்கரன்