கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
எளிது எளிது
அன்பாக இருப்பதுபோல்
காட்டிக்கொள்வதைவிட
அன்பாகவே இருந்துவிடுதல்
எளிதானதுதான்!
– ஈரோடு கதிர்
எல்லாம் முடிந்து போகும்
அதிர்ந்து பேசாதீர்கள்
தர்க்கம் செய்யாதீர்கள்
கோவம் கொள்ளாதீர்கள்
பொறாமை கொள்ளாதீர்கள்
நயவஞ்சம் வளர்க்காதீர்கள்
புகழ்ந்து வீழ்த்தாதீர்கள்.
எல்லாம் ஒருநாள்
ஒரு நிமிடத்தில் அல்ல,
ஒரு நொடியில் முடிந்துவிடுகிறது.
மரணத்திற்கு
இவை ஏதும் அறியாது.
- S.பத்மகுமார்