கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
ஆறுதல்
வழி அனுப்ப யாருமே இல்லாமல்
தன் பயணங்களைத்
துவங்குபவர்கள் இருக்கிறாராகள்.
போய்ச் சேர்ந்ததும்
அழைப்பெடுத்துச் சொல்ல
யாருமே இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.
யாருமே இல்லாமல்
யார் யாரோ இன்னமும் இந்த உலகில்
இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
- அரூஸா ஜெவாஹிர்
நினைவுகள்
ஒரே ஆறுதல்,
நம் எல்லோரிடமும்
மகிழ்ச்சியான புகைப்படங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
- திலீபன் மணிக்குமார்
இனிது இனிது, வாழ்வு இனிது
பசியறிந்து சோறு போட
ஒருவர் இருக்கும் வரை…
சாப்பிட்டாயா எனக்கேட்க
ஒருவர் இருக்கும் வரை…
தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க
ஒருவர் இருக்கும் வரை….
நோய் வருத்தும் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக்கொள்ள ஒருவர் இருக்கும் வரை…
குரல் மாறுபாட்டில் மனநிலையைக் கணிக்க
ஒருவர் இருக்கும் வரை…
போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என
வழியனுப்ப
ஒருவர் இருக்கும் வரை…
வீடடையக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை…
தோற்றுப்போய் திரும்புகையில்
தோள்சாய்த்துக்கொள்ள
ஒருவர் இருக்கும் வரை…
போ என்றாலும் விட்டுப்போகாது
சண்டை போட்டுக்கொண்டேனும்
உடனிருக்க
ஒருவர் இருக்கும் வரை…
மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ள
ஒருவர் இருக்கும் வரை….
நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரை…
எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரை…
கூட்டத்தின் நடுவே தனித்துப்போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரை…
தவறுகளைத் தவறென சுட்டிக்காட்டித் திருத்தும்
ஒருவர் இருக்கும் வரை…
துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த்துடைக்க
ஒருவர் இருக்கும் வரை….
மனக்குறைகளைப் புலம்பித்தள்ளுகையில் காதுகொடுத்துக்கேட்க
ஒருவர் இருக்கும் வரை
மட்டுமே…
வாழ்வு வசந்தமானது”