கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
அறிதல்
என்னைப் பற்றி
எனக்குத் தெரிந்ததே
கொஞ்சத்திலும் கொஞ்சம்.
இதில் எதைப்பற்றியும்
யார் குறித்தும்
அபிப்ராயம் சொல்ல
நான் யார்?
- விக்கிரமாதித்தன்
சுயம்
வேண்டிய எதையும்
விருந்தாளியைப் போலவே
கூச்சத்துடன் கேட்கிறார்….
அம்மாவின்
மறைவிற்குப் பிறகு
அப்பா.
- மெஹராஜ் இஸ்மாயில்
அம்புட்டுத்தான்
சிறிது தூரம் பின்தொடர்கிறது நாய்
அவ்வளவு தூரம்தான் வாழ்வு
அவ்வளவு தூரம்தான் நம்பிக்கை
அவ்வளவு தூரம்தான் ஏமாற்றம்
அவ்வளவு தூரம்தான்
நான் நீங்கள் நாய்
- நிலாகண்ணன்
கருணை
நான் செத்துப்போனால்
எல்லாம் சரியாகிடும் இல்லையா
என்ற நிலைக்கு
ஒரு மனுஷனையோ
ஒரு மனுஷியையோ
தள்ளாது இருங்கள்
அதுவே இவ்வுலகிற்கு
நீங்கள் புரியும்
மாபெரும் கருணை.
- நேசமித்ரன்