முதுமை வந்ததும் வேடிக்கை பாருங்கள்

Image

வீட்டுக்குள் வானப்பிரஸ்தம்

முந்தைய காலங்களில் வானப்பிரஸ்தம் என்ற ஒரு நிகழ்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருந்தது. அதாவது வாழ்க்கையை போதுமான அளவுக்கு நிறைவாக வாழ்ந்து முடித்ததும், வனப்பகுதிக்குள் நுழைந்து எளிமையான வாழ்க்கைக்கு மாறிக்கொள்வார்கள். சமைப்பது, மருத்துவம் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, கிடைப்பதை மட்டும் தின்று மரணத்தை எதிர்நோக்கி வாழ்க்கையை நகர்த்துவார்கள்.

உறவுகள், சொந்தங்களை ஒட்டுமொத்தமாக மறந்துவிடுவார்கள், அவர்களும் வானப்பிரஸ்தத்திற்குப் போனவர்களைத் தேடிச்சென்று தொந்தரவு செய்ய மாட்டார்கள். நகர வாழ்க்கையில் இருந்து வெளியேறி இயற்கை வாழ்க்கைக்குச் சென்றவர்களால், அதை தாக்குப்பிடிக்க இயலாது. அந்த நேரத்தில் கைகளில் ஆயுதமும் வைத்திருக்க மாட்டார்கள். எனவே, கொடிய விலங்குகளால் வேட்டையாடப்பட்டு அல்லது விஷக்கனிகளை சாப்பிட்டு செத்துப் போவார்கள்.

ஆனால், இன்று மரணத்தின் கடைசி நொடி வரையிலும் மனிதர்கள் வீட்டில் இருக்கிறார்கள். சம்பாதித்த பணத்தை அனுபவிக்கவும் செய்யாமல், பிறருக்குக் கொடுக்கவும் செய்யாமல் குழப்பத்தில் தவிக்கிறார்கள். முதுமையில் எப்படி பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதற்கு ஒரு குட்டிக் கதை.

சங்கரலிங்கம் வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஏகப்பட்ட சொத்து சேர்த்துவைத்திருந்தார். பிற்காலத்தில் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காக, எல்லா சொத்துக்களையும் தன்னுடைய பேரிலேயே வைத்திருந்தார். அதனால் அவர் பெற்ற நாலு பிள்ளைகளும், அவருடனே கூட்டுக்குடும்பமாக சேர்ந்து இருந்தார்கள். அவர் துடிப்புடன் இருந்தவரையிலும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடிமைபோல் கிடந்தார்கள். திடீரென ஒரு நாள் சங்கரலிங்கம் பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்ததும், குடும்ப  நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய அதிகாரத்தை காட்டத் தொடங்கியது. எந்த சொத்து யாருக்குச் சேரவேண்டும் என்பதில் ஏகப்பட்ட குழப்பம் உண்டானது. பாசத்தினால் அத்தனை பிள்ளைகளும் தன்னுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சங்கரலிங்கம், பிள்ளைகளின் குரூரமான முகத்தைப் பார்த்து வேதனையடைந்தார். இதனை பார்க்கத்தான் இத்தனை நாட்கள் உயிரோடு இருந்தேனா என்று வருத்தப்பட்டார். இரண்டு வருடங்கள் இப்படியே நொந்து நூலாய் வாழ்ந்தார் சங்கரலிங்கம். அவரை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கத் தொடங்கினார்கள் பிள்ளைகள். அவருக்கு சாப்பாடு, தண்ணீர் கிடைப்பதுகூட சிரமமானது.

அதனால் சங்கரலிங்கத்தின் உடல்நிலை மேலும் மோசமானது. வாய் பேசமுடியாத நிலைக்கும் சுயநினைவு இழக்கும் கட்டத்துக்கும் வந்தார். உடனே ஆளுக்கொரு பத்திரம் தயார் செய்து, சங்கரலிங்கத்தின் கைரேகை வாங்குவதற்கு ஆளாய் பறந்தார்கள். அத்தனை சொத்துக்களையும் தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொண்டு, சங்கரலிங்கத்தை கொலை செய்யவும்  துணிந்தான் ஒருவன். இதனை தெரிந்துகொண்டவன் மற்றவர்களிடம் தகவல் சொல்ல, அந்த வீடு போர்க்களமானது. நான்கு பேருக்கும் பெரிய மோதல் ஏற்பட்டு வெட்டு, குத்து ஏற்பட்டது. நான்கு பேரும் ஜெயிலுக்குப் போன நாளில் செத்தே போனார் சங்கரலிங்கம். இப்படித்தான் பெரும்பாலோர் இறுதிக்காலம் அமைந்துவிடுகிறது.

புத்திசாலித்தனமாகவும் ஒரு சிலர் வாழ்க்கையை அமைக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜோசப். கம்ப்யூட்டர் துறையில் படித்து வேலைக்குப் போனார். வெளிநாட்டு வாய்ப்பு வந்தது. மிகவும் கடுமையாக உழைத்தார். பதவியும் பணமும் வந்தது. மேலே மேலே உயரத்திற்கு போய்க்கொண்டே இருந்தார். திடீரென ஒரு நாள் பார்த்துவந்த வேலையில் இருந்து வெளியேறினார். அதுவரை சேர்த்துவைத்திருந்த பணத்தைக் கொண்டு, சொந்த ஊரில் ஏழை குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். கொஞ்சம் இடம் வாங்கிப்போட்டு இயற்கை விவசாயம் தொடங்கினார். இந்த இரண்டும் அவருக்கு பணம் கொட்டவில்லை என்றாலும் நிறைய நிறைய சந்தோஷம் கொடுத்தது.

கோட், சூட் என்று மாட்டிக்கொண்டிருந்த ஜோசப், கிராம வாழ்க்கைக்கு ஏற்ப வேட்டி, பனியனுக்கு மாறிவிட்டார். வெளிநாட்டுக்காரனுடன் சேர்ந்து விதவிதமாக சாப்பிட்ட ஜோசப், இப்போது சிறுதானியங்களை பசிக்கும்போது எடுத்துக்கொள்கிறார். இனிமேல் தன்னுடைய வாழ்வுக்கு பணம் தேவையில்லை என்பதை உணர்ந்துவிட்டார் ஜோசப். அதனால் கடைசி காலத்தில் யாரை நம்பியும் வாழாமல் இயற்கைக்குத் திரும்பி வாழத்தொடங்கிவிட்டார். இதுதான் வாழ்க்கை, இதுதான் தெளிவு.

சம்பாதித்த பணத்தை சொந்த வாழ்வுக்குச் செலவழியுங்கள். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லோராலும் சொந்தமாக பள்ளி நடத்தவும், தொழில் நடத்தவும் முடியாது. ஆனால், எல்லோராலும் வீட்டுக்குள்ளே இருந்துகொண்டே துறவு வாழ்க்கை வாழ இயலும்.

இதுவே மகிழ்ச்சி.

Leave a Comment