டாக்டர் எம்.மருதுபாண்டியன்
மருந்து கால், நம்பிக்கை முக்கால் என்பார்கள். ஒரு நோயாளி மருத்துவர் மீதும் மருந்துகள் மீதும் வைக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் எம்.மருதுபாண்டியன்.
மருத்துவத்தில் என்ன சிகிச்சை கொடுத்தாலும், என்ன மருந்து கொடுத்தாலும், என்ன டெஸ்ட் எடுத்தாலும் நோயாளிகளுக்கு முதல் தேவை நம்பிக்கை. மருத்துவரின் மேலும் நம்பிக்கை, மருத்துவச் சிகிச்சையிலும் நம்பிக்கை இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் கொடுக்கும் மருந்து வேலை செய்யும். அவர்கள் நலம் பெறுவதும் விரைவாக நடக்கும்.

என் அனுபவத்தில் பல பேரைப் பார்த்திருக்கிறேன். சரியாகுமா, ஆகாதா என்ற குழப்பத்துடன் வருவார்கள். நோய் பற்றிய பயத்துடன் வருவார்கள். இதுபற்றி உறவினர்கள், நண்பர்களிடம் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு என்னிடம் வருவார்கள். கூகுளில் தேடுவார்கள். சாதாரண தலைவலியாக இருக்கும். வேறு ஏதாவது பாதிப்பு இருக்குமா என்று புற்றுநோய் வரை போய்விடுவார்கள்.
அது சாதாரண தலைவலியாக இருக்கும். டென்சன் தலைவலியாகக்கூட இருக்கலாம். மருத்துவரைப் பார்த்து மாத்திரை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்தால் சில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால், அவர்களுக்கோ ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும். தங்கள் பெற்றோர்களுக்குத் தலையில் ஸ்ட்ரோக் வந்திருக்கலாம். அதேமாதிரி எனக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன என்று சொல்வார்கள்.
கை ஒரு பக்கம் பலவீனமாக இருக்கிறது என்பார்கள். பரிசோதித்துப் பார்த்தால் அது மாதிரி எதுவும் இருக்காது. தனக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் பற்றிய முன் அனுமானங்களுடன் வருவார்கள். தங்களை மருத்துவ அறிவுள்ளவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். ஒருவர் நெஞ்சு வலியுடன் வருவார். நெஞ்சு அடைக்குது, கைக்குப் பரவுது, வியர்க்குது என்று ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை எல்லாம் சொல்வார்.
இசிஜி எடுத்துப் பார்க்கவேண்டும் என்போம். எல்லாம் சாதாரணமாக இருக்கும். ஆனாலும் அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பத்து நிமிடங்கள் செலவாகும். மேலும், அவரிடம் பேசும்போதுதான் அண்மையில், நண்பர் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பது தெரியவரும். அதை அப்படியே தன் உடலுக்கும் அப்ளை செய்து, அதேமாதிரி நமக்கும் நடந்திருக்கிறது என்று தவறாக நினைப்பார்கள்.
முதலில் நம் உடலைப் பற்றிய நம்பிக்கை நமக்கு இருக்கவேண்டும். அப்போதுதான் மருத்துவர் அளிக்கும் சிகிச்சையும் பலனளிக்கும். ஹார்ட் அட்டாக் என்ற புரிதலுடன் அதிலிருந்து வெளியேறி சாதாரண நிலைக்கு வரமுடியும். இல்லையெனில் அதே சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். நம்பிக்கையின்றி இதய சிகிச்சை நிபுணரைப் பார்த்து ஆஞ்சியோ வரை செய்தவர்கள் இருக்கிறார்கள்.
மருத்துவரின் சிகிச்சைமீது நம்பிக்கை வைத்தால், நாம் நோயிலிருந்து எளிதாக விடுபடமுடியும். நோய் தொடர்பான சிந்தனைகளை அதிகம் வைத்திருப்பார்கள். பல நண்பர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்திருப்பார்கள். அதை வைத்துக்கொண்டு வீணாகக் குழப்பம் அடைவார்கள். என்னிடம் மாதத்திற்கு 5 இசிஜி எடுத்தவர்கள்கூட இருக்கிறார்கள்.
உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு மாதிரி. அப்பா உடலும் பையனின் உடலும் வேறுதான். அதேபோல நண்பர்களின் உடலை நம்மோடு ஒப்பிடமுடியாது. ஒவ்வொருவருக்கும் மரபணு மாற்றங்கள் இருக்கும். அதனால் நோயும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. அதன் பாதிப்பும் தன்மையும் வேறுபட்டு இருக்கும். எனவே, நமக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறவேண்டும். நாமே மருத்துவராக மாறிவிடக்கூடாது. நோயாளிகள் நம்பிக்கையுடன் வந்தால் எளிதாகக் குணப்படுத்திவிடமுடியும்.
கொரோனா பரவல் காலத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த இருவரைப் பற்றி இங்கே சொல்ல விரும்புகிறேன். ஒருவருக்கு 51 வயது. 125 கிலோ எடை கொண்டவர். மருத்துவமனைக்கு வரும்போது ஆக்சிஜன் அளவு 45 – 50க்குள்தான் இருந்தது. “எங்கேயுமே பெட் கிடைக்கவில்லை. எப்படியாவது அட்மிட் செய்யுங்கள். அவர் செத்தாலும் பரவாயில்லை” என்று கேட்டுக்கொண்டார் கண்ணீருடன் அவரது மனைவி.
ஐசியூவில் அவரை சேர்த்திருந்தோம். கிட்டத்தட்ட 22 நாள்கள் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். எப்போது போனாலும் சிரித்த முகமாக என்னை நலம் விசாரிப்பார். அவரை உற்சாகமாக நம்பிக்கையுடன் வைத்திருந்தோம். பிரத்தியேகமாக அவருக்கு ஒரு செவிலியை நியமித்து சிகிச்சை அளித்தோம். பிறகு பூரண நலம் பெற்று உற்சாகமாக வீடு திரும்பினார்.
இன்னொருவருக்கு 26 வயது. கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் வந்தார். ஐசியூவில் அட்மிட் செய்து சிகிச்சை தொடங்கினோம். அவரை நோயிலிருந்து மீட்டெடுத்திருக்கலாம். ஆனால், ஐசியூவில் இருந்துகொண்டே செல்போன் மூலம் கொரோனா தொடர்பான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் யூ டியூப் வீடியோக்களைப் பார்த்துவந்தார். என்னதான் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தினாலும், கொரோனா பற்றிய செய்திகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார். எங்களால் அதைத் தடுக்கமுடியவில்லை. நோயிலிருந்து குணமாகிவிடலாம் என்ற நம்பிக்கையே அவரிடம் குறைந்துவிட்டது. ஒரு கட்டத்தில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. காப்பாற்றமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டார்.
உடல்நலம் மிக மோசமடைந்தவர் நம்பிக்கையால் காப்பாற்றப்பட்டார். பெரிய பாதிப்பு இல்லாமல் வந்தவர், சிகிச்சை மீதான நம்பிக்கை குறைவால் குணமடையாமல் போனார். முதலில் நாம் நோய் பற்றி கூகுளில் தேடுவதை நிறுத்தவேண்டும். அது மிகப்பெரிய குழப்பத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும். கொரோனா காலகட்டத்தில் சாதாரண காய்ச்சலைக்கூட கொரோனா என நினைத்துக்கொண்டு வருவார்கள். அவர்களே நேராகப் போய் சிடி ஸ்கேன் எடுத்துக்கொண்டு என்னிடம் காட்டுவார்கள். அதிகபட்ச பதற்றத்தில் செயல்படுவார்கள்.
முதலில் நோயாளிகள் மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்கக்கூடாது. கூகுளில் தேடக்கூடாது. தலைவலி என்று தேடினால், ப்ரெய்ன் ட்யூமர் வரை தகவல் கிடைக்கும். வயிற்றுவலிக்கு கேன்சர் வரை காட்டும். பலவீனமான மனம் கொண்டவர்கள் தங்களுக்கும் அதேதான் ஏற்பட்டிருக்கிறது என்று கவலை அடைந்துவிடுவார்கள். அதைப் பற்றியே சிந்தித்து, அது தொடர்பாக செய்திகளைத் தேடத் தொடங்குவார்கள். அதனால் அவர்களுடைய நம்பிக்கையின் அளவு குறைந்துகொண்டே வரும்.
உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு எதிர்ப்புச் சக்தியும் மிகவும் குறைந்துவிடும். ஒரு நம்பிக்கை குறைவான நோயாளிக்கு என்ன சிகிச்சை அளித்தாலும், அது உடலில் வலிமையாக வேலை செய்யாமல் போய்விடும். எப்போதும் மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மனத்தில் நம்பிக்கை குறைவாக இருந்தால், அதற்கு உடல் ஒத்துழைக்க மறுக்கும்.
ஒருமுறை 93 வயது பாட்டிக்கு இடுப்பில் ப்ராக்சர் ஏற்பட்டது. ஆனால் அவர் மிகப்பெரும் நம்பிக்கையுடன் இருந்தார். “எனக்கு ஆபரேஷன் செய்யுங்கள். நான் பிழைத்துக்கொள்வேன்” என்று சொன்னார். வயது ஒரு தடையாக இருக்கிறது என்று அவரது குடும்பத்தினரிடம் சொன்னோம். அதுவொரு மேஜர் ஆபரேஷன். சிகிச்சைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் நல்ல நடமாட்டத்துடன் இருந்தார்.
ஒருவர் நம்பிக்கையுடன் இருந்தால், மருத்துவரால் நல்ல வாழ்க்கையை அவர்களுக்குத் தரமுடியும். தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவேண்டும். மனதைத் திடப்படுத்துவதற்குத் தியானம், யோகா செய்யவேண்டும். மருத்துவமோ வாழ்க்கையோ நம்பிக்கைதான் எல்லாம் என்பதை நாம் உணரவேண்டும்.