உச்ச நீதிமன்றமும் பா.ஜ.க. அலுவலகமா..?

Image

சந்திரசூட் வீட்டில் மோடி பூஜை

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பிரதமரும் தலைமை நீதிபதியும் ஒரு சேர மத நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது மிகப்பெரிய தவறு என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மக்களின் கடைசி நம்பிக்கையான உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் மீது மக்கள் எக்கச்சக்க நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், அவரது வீட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடியை அழைத்திருப்பதும் விநாயகர் சதுர்த்தி பூஜை நடத்தியிருப்பதும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு, ‘’வீழ்ந்தது உச்ச நீதிமன்றம்’’ என்று பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘’நீதிமன்றத்தின் சுதந்திரத்தின் மீதும், நீதிபதிகளின் நிலைவழுவாத தன்மையின் மீதும் மக்களுக்கு இருக்க வேண்டும். அதற்கேற்ப நீதித்துறையின் செயல்பாடு இருக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒன்றிய அரசால் பெண்கள், விவசாயிகள், தலித்துகள், பழங்குடிகள், வணிகர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டு, அனைத்துக்கும் மேலான அரசியலமைப்பு சட்டமே பாஜக கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இன்றைய சூழலில், மக்களையும் அரசியலமைப்பு சட்டத்தையும் காக்கும் கடமையை கொண்ட உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரமும் நன்மதிப்பும் மிகவும் அவசியமானது.

தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற தனிப்பட்ட மதம் சார்ந்த நிகழ்வில், ஆட்சி நிர்வாகத்தின் தலைவராக உள்ள மோடி பங்கெடுத்திருப்பதும் அதை தலைமை நீதிபதி அனுமதித்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

அதுவும் மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், அம்மாநிலத்தின் கலாச்சார அடையாளமான தொப்பியை அணிந்தபடி மோடி பங்கேற்றுள்ளார். நாடெங்கும் உள்ள நீதிபதிகளுக்கும் நீதித்துறை அலுவலர்களுக்கும் சந்திரசூட் சொல்ல வரும் செய்தி மிகவும் ஆபத்தானது. ஒருபக்கம் தலைமை நீதிபதி கைதட்டி பஜனை பாட, அவரது மனைவி மணி ஆட்ட, விநாயகர் சிலைக்கு மோடி பூஜை செய்கிறார்.

இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக புரட்சியாளர் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய ஒன்றியம், இப்போது பெரும்பான்மைவாத சமய சார்புள்ள ஒரு நாடாக அறிவிக்கிறது இந்த காட்சிகள்’’ என்று ஆவேசமாகப் பதிவு செய்திருக்கிறார்.

நாடெங்கும் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Leave a Comment