மறக்க முடியாத சாதனையாளர்
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல் முறையாக பங்கேற்று ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தீபா கர்மாகர். புரோடுனோவா என்ற ஆபத்து நிறைந்த ஜிம்னாஸ்டிக் பிரிவில் நூழிலையில் பதக்கத்தைத் தவறவிட்டாலும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
அந்தப் போட்டியின் முதல் வால்ட்டில் 14.886 எடுத்த தீபா கர்மாகர், இறுதியில் 15.066 எடுத்து 4வதாக முடிந்தார். 3வது இடம்பிடித்த சுவிஸ் வீராங்கனை கியுலியா ஸ்டெய்ன்குரூபரைக் காட்டிலும் 0.15 புள்ளிகளே தீபா குறைவாக பெற்றார். 4வது இடத்தைப் பிடித்த பிறகு, பயிற்சியின்போது தீபாவிற்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. ஆபத்தானதாகக் கருதப்படும் அந்த காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தீபா, அதிலிருந்து மீண்டு பதக்கம் வென்று அசத்திவருகிறார். இப்போதுகூட அவரது கனவு, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதாகவாகவே இருக்கிறது.
தீபா கர்மாகர், 1993ம் ஆண்டு திரிபுராவில் உள்ள அகர்த்தலாவில் பிறந்தவர். இவருடைய தந்தையான துலால் கர்மாகர், எளிமையான குடும்பத்தில் பிறந்தவர்; பளு தூக்கும் வீரரும்கூட. மூத்த மகளைப் போலவே தீபாவும் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்றும், தன்னைப்போலவே தீபாவையும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக்க வேண்டும் என்பது அவரது கனவு.
தன் கனவை மகளிடம் சொன்னார், துலால். அதற்கு தீபா கர்மாகர், ‘நான் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், என்னை ஆங்கிலம் படிக்குமாறு வற்புறுத்தக்கூடாது. நான் வங்காளத்தில்தான் படிப்பேன்’ என்றார். காரணம், ஆங்கில மொழி அவருக்கு பிடிக்கவில்லை. அதன்மீதிருந்த வெறுப்பால், அவரது தந்தை சொன்னதற்காக ஜிம்னாஸ்டிக்கை தேர்ந்தெடுத்தார். ஆனாலும் அதன்மீதும் அவருக்குக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை.
தீபாவுக்கு 7 வயதானபோது அவரது தந்தை, பிஷ்பேஸ்வர் நந்தி என்ற பயிற்சியாளரிடம் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்காக அழைத்துச் சென்றார். தீபாவின் தட்டையான பாதங்களைப் பார்த்த பயிற்சியாளர், ஜிம்னாஸ்டிக்கிற்கு இவள் தேறமாட்டாள் என்று நினைத்தார். ஆனால் துலாலின் பிடிவாதத்தால், தீபாவுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. குறிப்பாக, கால்களுக்கு மட்டும் தனிப் பயிற்சி அளித்தார். தொடர்ச்சியான பயிற்சியால், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடும் அளவுக்கு தீபாவின் பாதங்கள் நெகிழ்வாயின.
இவர், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி மேற்கொண்ட பயிற்சிக் கூடத்தில் எங்கே பார்த்தாலும் எலிகள் உலாவுமாம். அது மட்டுமின்றி, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற முறையான உள்கட்டமைப்பு வசதியும் இருக்காதாம். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குறைகளையும் நிறைகளாக்கிக்கொண்டு இதில் முன்னேறத் தொடங்கினார்.
இதன் பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2007ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வென்றதுதான் அவரது முதல் பதக்கம். டெல்லியில் 2010ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் தீபாவுக்கும் இடம்கிடைத்தது. ஆனால், அதில் தீபா சாதிக்கவில்லையென்றாலும், ஆசிஷ்குமார் முதன்முறையாக ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை வாங்கித் தந்தார்.
ஆசிஷ்குமார் வென்ற பதக்கம், தீபாவுக்கு உந்துதலைத் தந்தது. அந்த நம்பிக்கையில் அயராமல் உழைத்த அவர், தொடர்ந்து ஜிம்னாஸ்டிக்ஸில் பல்வேறு வகையான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அதன் பயனால், 2014ம் ஆண்டு அவருக்கு ஜிம்னாஸ்டிக்கில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்ததுடன் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் சூடிக்கொண்டார்.
.இந்த வெற்றிக்குப் பிறகு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தொடர்ச்சியாகப் பங்கேற்க ஆரம்பித்தார். 2015ல் ஜப்பான் ஏ.ஆர்.டி. ஜிம்னாஸ்டிக்ஸ் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிடைத்த பதக்கம், அவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறவைத்தது. மேலும், சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு வழங்கும், ‘உலகத் தரம்வாய்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை’ என்ற சான்றிதழும் அவருக்குக் கிடைத்தது.
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற தீபாவுக்கு, அவரது பயிற்சிக்காக மட்டும் 1.10 கோடி ரூபாயை இந்திய விளையாட்டு ஆணையம் ஒதுக்கியது. இதையும் தாண்டி செலவு செய்யவேண்டி இருந்தால் அதை, தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார்.. ஆனால் தீபாவோ, ‘இந்தியாவில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறுவதற்கு 3 மையங்கள்தான் உள்ளன. இந்த விளையாட்டில் இந்தியா முன்னேற வேண்டுமானால், அந்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’ என்றார்.
ஒலிம்பிக்கில் தோல்வியுற்றது குறித்து, ‘ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எல்லோருடைய கனவாக இருக்கும். ஆனால், எனது கனவு தங்கப்பதக்கம் மட்டுமே. எனது அடுத்த இலக்கு 2020 ஒலிம்பிக் போட்டிதான். நிச்சயம் அதில் நான் தங்கம் வென்று சாதிப்பேன். அதுதான் இப்போது எனது மனதிற்குள் ஓடும் ஒரே லட்சியம். எனது இந்த முதல் போட்டியில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். முதல் தோல்விதான் அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக இருக்கும். இந்த தோல்வி தற்காலிகமானதுதான். அடுத்த ஒலிம்பிக்கில் சாதிப்பேன்’ என்கிறார், தீபா.
ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றபோது, தனது பிசியோதெரபிஸ்ட் தன்னோடு வர வேண்டும் எனக் கேட்டார், தீபா. ஆனால், ‘ஒரே ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பிசியோ எதற்கு?’ என மறுத்துவிட்டார்கள், அதிகாரிகள்.
ரஷிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலியா முஸ்தாஃபினாவை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கும் தீபா,‘ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றபிறகே, என்னை கவனிக்க ஆரம்பித்தார்கள். ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதிப் போட்டியில்தான், நான் விளையாடும்போது வாழ்க்கையில் முதல்முறையாக அரங்கம் நிறைந்து, என் பெயரை உச்சரிக்கும் ரசிகர்களைப் பார்த்தேன்’ என்கிறார்.
இதுவரை ஜிம்னாஸ்டிக்கில் அவர் குவித்துள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 77. இதில் 67 தங்கப்பதக்கங்களும் அடங்கும். இவர், ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். ஆசியாவின் மிகச் சிறந்த சாதனையாளர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தீபா கர்மாகரும் இடம்பிடித்திருந்தார்.
ஜிம்னாஸ்டிக்ஸில் மிகவும் ஆபத்தான ‘புரோடுனோவா வால்ட்’டில் பங்கேற்ற ஐந்து சர்வதேச வீராங்கனைகளில் தீபாவும் ஒருவர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் தீபா தவிர மற்றவர்கள் ஒலிம்பிக்கிலும் தடம்பதித்தவர்கள்.
ஜிம்னாஸ்டிக் விளையாட்டை தேர்ந்தெடுத்தது குறித்து தீபா, ‘ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆபத்து இருக்கிறது. நாம் ரிஸ்க் எடுத்து செயல்பட்டால்தான் வெற்றிகளைக் குவிக்க முடியும்’ என்கிறார்.
தங்கமான பேச்சு.