எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா..?
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார் திருமாவளவன். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரிதாக வெடித்த நிலையில், அந்த வீடியோவை டெலிட் செய்திருக்கிறார். அதேநேரம், திருமாவின் குரலுக்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து ஆதரவு கிடைத்திருக்கிறது.
மத்தியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. வெற்றி அடைந்த நேரங்களில் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் பங்கேற்று வந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியாக இருந்த போதும் எந்தக் கட்சிக்கும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுப்பதில்லை. இதையே அரசியல் நிலைப்பாடாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், பட்டியலின மக்கள் உயர் பதவிகளில் வரக்கூடாது ஆட்சியில் பங்கு பெறக்கூடாது என்று திமுக அரசு நினைக்கிறது எனக் கொதித்தெழுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அவரது கட்சியினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
’’2014, 2019 இரண்டு முறையும் மத்தியில் பாஜகவிற்கு பெரும்பான்மை இருந்த போதும் கூட்டணி ஆட்சிதான் அமைத்தோம், திமுகவிடம் அதிகார பகிர்வை விசிக கேட்பதில் என்ன தவறு ?’’ என்று தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா ஆதரவு கொடுத்திருக்கிறார்.
அதேபோல், ’’அண்ணன் திருமாவின் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கம் மிக நியாயமானது ! திமுக கூட்டணியிலேயே தமிழகம் எங்கும் கிளை கட்டமைப்பு உள்ள ஒரேக் கட்சி விசிக ! திமுக என்னும் குடும்ப கம்பெனி தங்கள் வெற்றிக்கு மட்டுமே விசிகவை பயன்படுத்திகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை ! திமுக கூட்டணியில் விசிக இல்லையென்றால் திமுக வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது !’’ என்று நாம் தமிழர் கட்சி பாராட்டு தெரிவித்திருக்கிறது.
இந்த விஷயம் வில்லங்கமாவதைக் கண்டதும், ’அந்த வீடியோவை அட்மின் நீக்கி இருக்கிறார். காரணம் கேட்டுச் சொல்கிறேன்’ என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேக் அடித்திருக்கிறார்.
’’தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே போவதில் யாருக்கும் வருத்தம் இல்லை. எங்களுடைய கட்சியினர் உழைப்பால் பெற்ற எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்று தி.மு.க.வினர் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.