வீட்டுக்குள் இடம் போதும்
இயற்கை வைத்தியம் செய்வதற்கு ஆசைப்படும் நபர்கள்கூட, மூலிகைகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வீட்டின் முன்னே அல்லது பின்னே, மொட்டை மாடியில் என்று கொஞ்சம் இடம் இருந்தாலே போதும். அங்கே மூலிகை வளர்த்து, அதன் பலன்களை பெற்றுவிட முடியும். எப்படிப்பட்ட மூலிகைகளை அவசியம் வீட்டில் வளர்க்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
அருகம்புல்
உடல் எடை குறைய, கொலாஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஓர் அருமருந்து. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். அருகம்புல்லையும் தேங்காய் எண்ணெய்யையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடிபோல் ஜொலிக்கும்.
கரிசலாங்கண்ணி
வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள்காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.
முசுமுசுக்கை
இது, நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடைவிடாத தும்மல் குணமாகும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாகும். முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும்.
ஆவாரம் பூ
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை அறவே நீக்கும்.
கரிசாலை
இது, கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தையும் தரக்கூடியது. வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து, கொதிக்கவைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து குடிநீராகவும் அருந்தலாம்.கரிசாலை இரத்த சோகையைப் போக்கக்கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
குப்பைமேனி செடி (பூனை வணங்கி)
இந்த மூலிகை அருகே பூனை செல்லாது என்பதாலே குப்பைமேனியை பூனை வணங்கி என்று சொல்வார்கள். கோழை நீக்குதல், இருமலை கட்டுப்படுத்துதல், விஷக்கடி, ரத்தமூலம், வாதம், நமைச்சல், ஆஸ்துமா, குடல்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி, மலமிளக்கி என பலவற்றுக்கும் நிவாரணியாக இந்த இலை உள்ளது. இந்த மூலிகைச் செடியின் கீரையை (இலை) ஆமணக்கு எண்ணெய்யில் தாளித்து 48 நாட்கள் தொடர்ந்து சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு தொடர்பான பல்வேறு நோய்களும் நம்மைவிட்டுப் போகும். இதன் சாற்றை எடுத்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவு கொடுத்தால் வயிற்றை கழியச்செய்து கோழையை அகற்றி வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லும். இதன் இலையில் மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்து அரைத்து போட்டால் அனைத்து வகை சொறி சிரங்குகளும் தீரும்.
நொச்சி
இதன் இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப் படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம், மூக்கடைப்பு போன்றவை குணமாகும். இதன் சாற்றை உடலில் இருக்கும் கட்டிகளின் மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
திப்பிலி
இதை, வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து இரண்டுவேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல் வலுப்பெறும். தேமல் நோய் மறையும். திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டுவேளையாக மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.
பிரம்மி
இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நரம்பு மண்டலத்தைத் தூண்டிச் சோர்வை நீக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சாஃப்ட்வேர் தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த மூலிகையை நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனைச் சாறு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். இலைகளைக் கசாயம் செய்து குடித்தால், மலச் சிக்கல் தீரும். இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டு வந்தால், குரல் வளம் பெருகும். வேரை அரைத்துக் கொதிக்கவைத்து நெஞ்சில் பூசினால், நாள்பட்ட சளி சரியாகும்.
கண்டங்கத்திரி
இது, கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயற்படும். இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்லதொருமருந்து. கீல்வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து. இதன் வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும். இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப் பிடிக்க பல் வலி, பல் அரணை தீரும்.
முசுட்டை
மூலநோய் நம்மை அணுகாமலிருக்கவும், அதனால் தோன்றும் மலவாய் புண்களை ஆற்றவும் பயன்படும் அற்புத மூலிகை, முசுட்டை.இவை மலக்குடலை சுருங்கி விரியச் செய்து மலத்தை எளிதாகச் கழியச் செய்வதுடன் மலவாயிலுள்ள புண்களை ஆற்றி ரத்தக்கசிவை தடுக்கின்றன. முசுட்டைக் கொடியின் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு சாப்பிட மூலநோயினை தொடர்ந்த மலச்சிக்கல் நீங்கும். மேலும் 10 கிராம் உலர்ந்த முசுட்டைக் கொடியை 500 மி.லி. நீரில் போட்டு கொதிக்கவைத்து, 125 மி.லி-யாக சுண்டியப் பின் வடிகட்டி அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்க மூலச்சூடு தணியும், மலம் இளகும். முசுட்டை இலையை இடித்து சாறெடுத்து, சமஅளவு நல்லெண்ணெய்யுடன் கலந்து, காய்ச்சி, மலவாயில் ஏற்படும் புண்கள், வெடிப்பு ஆகியவற்றின் மேல் தடவி வர புண்கள் ஆறும்