வாழ்த்து வில்லங்கம்
பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி இன்றைய தினத்தை தேசிய கொண்டாட்ட தினமாக அறிவித்திருப்பது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
நேற்றைய தினம் தைப் பொங்கலுக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, ‘’இந்த பொங்கல் திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அறுவடையை கொண்டாடி, பூமித்தாயின் அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது’’ என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்றைய தினம் அதற்கு நேர்மாறாக தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்படும் பண்பாட்டு மற்றும் கலாச்சார திருவிழாவான பொங்கல் வாழ்த்து சொல்லாமல் வட இந்தியாவில் கொண்டாடும் பெயர்களை சொல்லி வாழ்த்து சொல்லி இருக்கிறார்
இன்று கவர்னர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘’லோஹ்ரி, மகர சங்கராந்தி, போகலி பிஹு மற்றும் உத்தராயணத்தின் விசேஷமிக்க நாளில் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! அறுவடை காலத்தைக் குறிக்கும் இந்த பண்டிகைகள், அன்னை பூமிக்கான நமது ஆழ்ந்த நன்றியுணர்வை பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வளமான மரபுகள், சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள், ஒரே தேசமாக நம்மை ஒன்றிணைக்கும் கலாசார துடிப்பு மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்த்து, அனைவருக்கும் அதிக மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளத்தை வழங்கட்டும்…’’ என்று கூறியிருக்கிறார்.
அப்படி என்றால் இன்று தமிழ்நாட்டு பொங்கல் இல்லையா..? தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்துகொண்டு பொங்கலை புறக்கணிக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.