தேசியகீதம் வெளிநடப்பு
இன்று சட்டசபை தொடங்கப்பட்டதும் உரை நிகழ்த்தவேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி வெளிநடப்பு செய்தார். இந்த விஷயத்துக்கு ஆளும் தி.மு.க.வினர் தொடங்கி எதிர்க்கட்சி அ.தி.மு.க.வினர் வரை ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி கவர்னரை வறுத்தெடுக்கிறார்கள்.
இன்று கவர்னர் வெளிநடப்பு செய்த காரணம் குறித்து ராஜ்பவன், ‘’தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு தி.முக.வினர், ‘’தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தும் போதெல்லாம் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பின்னர் தேசிய கீதமும் ஒலிக்கும். இது எழுபது ஆண்டு கால மரபு ஆகும். தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிப்பதை அவமானகரமானதாக ஆர்.என். ரவி நினைக்கிறாரென்றால் அவர் ஏன் இங்கு ஆளுநராக தொடர வேண்டும்? தேசிய கீதம் பாடப்படும் வரை பொறுமை காக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுனர் புறக்கணித்து வெளியேறியது ஏன்? தாய்த்தமிழ் மீதும் தமிழ்நாடும் மீதும் அவ்வளவு வெறுப்பு இருந்தால், தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டியது தானே?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதோடு முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்க முடியாத, ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவர் ஆளுநர் ரவி என்பது தெளிவாக தெரிகிறது” “வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்” “அரசியல் செய்பவர் ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது” -குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆளும் கட்சி எதிர்க்கிறது என்றால் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கவர்னர் மீது வன்மத்தைக் கக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் வெளிநடப்பு நாடகம் ஆடுவதாகச் சொல்கிறார்கள். அ.தி.மு.க.வினர், ‘’தி மு க வின் ஏஜென்ட் தான் இந்த ராஜ் பவன் ரவி. ஒவ்வொரு முறை தி மு க வுக்கு சிக்கல் என்றால் இவரும் பாரதிய ஜனதாவின் காலாவதியான மாநிலத்தலைவரும் களத்தில் இறக்கப்படுவார்கள்’ என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
அதேபோல், சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறிய அடுத்த சில நிமிடத்தில் ஒரு அறிக்கை வெளிவருகிறது என்றால், அறிக்கையை தயார் செய்து விட்டுத்தான் பேரவைக்கு வந்தாரா ஆளுநர்? நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதே மரபு.. ஆனால், முதலிலேயே தேசிய கீதம் பாடாததே அவமதிப்பு என்று ஆளுநர் சொல்வது என்பதே உள்நோக்கத்தின் வெளிப்பாடு என்று ஆதாரத்தைத் தூக்கிப் போடுகிறார்கள்.
இப்படி திரும்பும் திசை எல்லாம் சிக்கல் என்றால் கவர்னர் என்ன செய்வார்..?