அரசியல் பட்டிமன்றம்
பொது மேடையில் டாக்டர் ராமதாசும் அன்புமணியும் மோதிக்கொண்ட விவகாரம்தான் இன்றைய அரசியல் ஹாட் டாபிக். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்த மோதல் விவகாரத்தை அப்படியே கருணாநிதி – ஸ்டாலின் பதவி பிரச்னையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். யார் நல்ல அப்பா என்பதைப் பார்க்கலாம்.
கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் வீல் சேரில் வலம் வரத் தொடங்கியதும் ஸ்டாலின் பதவிக்கு வருவதற்கு ஆசைப்பட்டார். ஆனால், அந்த ஆசையில் அழகிரி மண் அள்ளிப் போட்டார். அதற்கு ஸ்டாலினும் பணிந்து போனார். 2016 தேர்தலிலே ஸ்டாலினை திமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டனர். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தவர்கள் கூட திமுக தலைவராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்றே குரல் கொடுத்தார்கள்.
அதற்கெல்லாம் கருணாநிதி அசைந்தே கொடுக்கவில்லை. ஆனால் இவை எதைக் குறித்தும் சற்றும் கவலப்படாமல், கட்சித் தலைவர் பதவி , முதலமைச்சர் பதவி என்பதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் திமுக என்ற கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதில் ஸ்டாலின் மட்டும் தீவிரம் காட்டி கடும் உழைப்பைத் தந்தார். ஆனாலும் தோற்றுப் போனார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகே முறையாக தேர்தல் மூலம் அனைவரின் ஒருமித்த ஆதரவோடு திமுக வின் தலைமை பொறுப்பை ஏற்றார். 2021 தேர்தலுக்கு முன் சிலர்ஸ்டாலின் குறித்து விமர்சனப் பார்வைகளை வைத்த போதும் அவற்றிற்கெல்லாம் எதிர்வினை ஆற்றாமல் தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைத்தார். 2021 தேர்தலில் மாபெரும் வெற்றியையும் கட்சிக்குப் பெற்றுத் தந்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கிய அவரது வெற்றிக் கணக்கு இன்னும் தொடர்கிறது. சகோதரி கனிமொழி அவர்களின் மீதும் பேரன்பை பொழியும் ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக தலைவராக கனிமொழியை அறிவித்து மகிழ்ந்தார். அழகிரியை அரசியலுக்குள் நுழைய விடவில்லை என்றாலும் நேரில் வீட்டுக்குச் சென்று வரும் அளவுக்கு உறவு நீடிக்கிறது.
அதேநேரம், பா.ம.க.வில் அப்படியே உல்டாவாக நடக்கிறது. தான் உயிருடன் இருக்கும்போதே கட்சியில் மகனுக்கு உரிய பொறுப்பைக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக ஜி.கே.மணியிடம் இருந்த பதவியைப் புடுங்கி அன்புமணியிடம் கொடுத்தார் ராமதாஸ். அதன் பிறகு கூட்டணியை முடிவு செய்யும் பொறுப்பைக் கொடுத்தார். ஒட்டுமொத்தமாக மகன் மட்டுமே கட்சியை சொந்தம் கொண்டாடும் நிலையில் தன்னுடைய ஆதரவாளர் ஒருவரையும் கட்சிக்குள் நுழைத்ததே இப்போது சண்டையாக வெடித்திருக்கிறது.
நான் தொடங்கிய கட்சி, நான் வைத்ததே சட்டம் என்றெல்லாம் பேசுகிறார் ராமதாஸ். அவர் ஒரு கட்சித்தலைவர், தன்னுடைய தந்தை என்பதையெல்லாம் மறந்து நேரில் மோதியிருக்கிறார் அன்புமணி.
இதையெல்லாம் பார்க்கும்போது கருணாநிதியே நல்ல அப்பாவாகவும் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். ஸ்டாலினும் அடக்கமான பையனாக வளர்ந்திருக்கிறார் என்பதே முடிவு.