கேட்டால் கொடுங்கள், தட்டினால் திறங்கள்..!

Image

உதவி செய்யும் கலை

உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், பிள்ளைகள், பேரன், பேத்திகள் போன்ற நெருக்கமான வட்டத்தில் ஒருவர் பணத்துக்காக மிகவும் சிரமப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியவருகிறது. என்ன செய்யப் போகிறீர்கள்..?

அ) நிறையவே பணம் இருப்பதால் உதவி செய்வதால் எந்த இழப்புமில்லை.

ஆ) மிகக்குறைந்த சேமிப்பே இருக்கிறது. அவர் திருப்பித்தரவில்லை என்றால் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.

இ) பணமே இல்லை. கடன் வாங்கிக்கொடுத்தே உதவ முடியும்.

இந்த மூன்றில் எந்த ஒரு சூழலில் இருந்தாலும், நீங்களே வலியச்சென்று பண உதவி செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் கேட்பதற்கு முன் உதவி செய்வதே மிகப்பெரிய தர்மம், குறிப்பறிந்து உதவுவதே மனிதநேயம் என்றெல்லாம் போதிக்கப்படுவதை தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் கேட்காமல் கொடுக்கப்படும் பணத்துக்கு ஒருபோதும் மதிப்பு கிடையாது. 

கேட்காமல் கொடுக்கப்படும் பணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிடும். பணம் கொடுத்து அவமானப்படுத்துவதாக கஷ்டப்படுபவர்களே கோபப்படலாம்.  அவர்களுடைய தன்மானத்தை உரசிப்பார்க்கலாம். எனவே, கஷ்டப்படும் நபர்களின் வாழ்க்கையில் தலையிடுவதற்கு முன்பு பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் தேடி வந்தால் நல்லது. தேடி வரவில்லை என்றால் மிகவும் நல்லது.

நான் உதவி செய்ய தயாராக இருப்பது கஷ்டப்படுபவருக்குத் தெரியாதே என்று சந்தேகப்படாதீர்கள். மழை நீர் இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து வெளியேறுவதை போன்று, யாரிடமெல்லாம் உதவி கிடைக்கும் என்பதை கஷ்டப்படுபவர்கள் நிச்சயம் தேடி கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்கள் வேறு ஏதேனும் வழியில் பணம் தேடிக்கொண்டு இருக்கலாம். அவர்களால் சமாளிக்கமுடியாத நேரத்தில் கண்டிப்பாக தேடிவந்து கடன் கேட்பார்கள். அந்த நேரத்தில் பணம் கொடுப்பதே அவர்களுக்கு பேருதவியாகத் தெரியும்.

பணம் மட்டுமல்ல, அறிவுரையும் அப்படியே. கேட்காத நேரத்தில் யாருக்கும் அறிவுரை கொடுக்காதீர்கள். பிறர் வாழ்க்கையில் எப்போதும் பார்வையாளராக மட்டுமே இருங்கள். அதுவே அவர்களுக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி.

Leave a Comment