இதுவே மகிழ்ச்சி
மிகவும் குறைந்த செலவில் மகிழ்ச்சி அடைய ஆசையாக இருக்கிறதா..? உங்களிடம் இருக்கும் ஏதேனும் தேவையில்லாத ஒன்றை, தேவைப்படும் ஒருவருக்குக் கொடுத்துப் பாருங்கள். அவரது மகிழ்ச்சி உங்களை மலரச் செய்துவிடும்.
ஆம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதை இதற்காகவே சொல்கிறார்கள். ஒருவர் மகிழ்வுடன் இருப்பதைவிட, பிறரை மகிழ்ச்சியடைய வைப்பதுதான் மிகவும் உயர்வானது. துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதலாக இருப்பதிலும், பிறர் கண்ணீரைத் துடைப்பதிலுமே உண்மையான மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியது அதிகமில்லை, வற்றாத நம் அன்பை அள்ளியள்ளிக் கொடுப்பதுதான். ஆம், எல்லோருடனும் அன்புடன், கனிவுடன் நடந்துகொள்ளும் கருணையே நம்மிடம் இருக்கும் மிகப்பெரும் செல்வம்.
‘பிறருக்கு உதவுவது என்பது ஒரு வரம். அத்தகைய நிலையில் நாம் இருப்பது மிகப்பெரும் பேறு. பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட முடியும். ஏதோ ஒரு வகையில் அதற்கான வழி நமக்குக் கிடைத்தே தீரும் என்பது இயற்கை விதி.
அதேநேரம், நாம் செய்யும் உதவி எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது இருக்க வேண்டும். முழு அன்புடன் கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுத்தோம் என்கிற அளவீட்டைக் காட்டிலும், அன்புடன் கொடுப்பதுதான் முக்கியம். ஆம், வாங்குவதைவிட கொடுப்பதுதான் மிகுந்த மகிழ்வு தரும்.
பிறருக்கு உதவுவதைக்கூட உளவியல்ரீதியாக உற்றுநோக்கினால் அறிவியல் உண்மை இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆம், எஃப்.எம்.ஆர்.ஐ. எனும் தொழில்நுட்பத்தின் மூலம் அறிவியல்ரீதியாகப் பார்க்கும்போது, பிறருக்கு கொடுக்கும்போது, நம் மூளையிலிருக்கும் நரம்புகள் புத்துணர்வுடன் தூண்டப்படுவதாக அறியப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் அமைப்புக்கு உதவுவதைவிட, கண் முன்னே சிரமப்படும் நபர்களுக்கு உதவுவது அதிக மகிழ்ச்சியை அளிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
‘இந்த உலகில் மனிதன் நிலையாக வாழப்போவதில்லை, வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்’ என்கிறார், சிவப்பிரகாசர். கொடுப்பதற்கு ஒருபோதும் தயங்கவே கூடாது. ஏனென்றால், நாம் பிறரிடம் பெற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த உயிரும், உடலும் பெற்றோர் கொடுத்தது. உணவும் நீரும் இயற்கை கொடுத்தது. கல்வியும் அறிவும் ஆசிரியர்களும், உடன் பழகியவர்களும் கொடுத்தது. நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆசிரியராகவே இருக்கிறார். எனவே, நம்மை செழுமைப் படுத்தும் நபர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுப்பதில் தப்பில்லையே.
யாரேனும் உதவி கேட்டால் செய்வோம் என்று காத்திருப்பது சரியல்ல. ஒருவர் உதவி கேட்கும் முன்னே குறிப்பறிந்து உதவி செய்வதுதான் சாலச்சிறந்தது. தோண்டத் தோண்ட ஊறும் கிணற்றை பார்த்திருப்பீர்கள். அதுபோல், நீங்கள் பிறருக்கு உதவ உதவ, உங்களுக்கு செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும். எனவே, நல்ல மனதுடன் உதவி செய்யுங்கள்.
இதுதான் அதற்கான சரியான தருணம். உங்களால் ஓர் உயிரின் பசியை போக்க முடிகிறது என்றால், ஒரு குடும்பத்தை மகிழ்வடைய வைக்க முடிகிறது என்றால், அந்த கொடுப்பினைதான் உலகிலேயே மிகப்பெரியது. கொடுத்துப் பாருங்கள், அந்த இன்பத்தை காணலாம்.