தமிழகம் ஆன்மிக பூமியாகிறதா..?
பெரியாரின் மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் மகாவிஷ்ணு அரசு பள்ளியில் பேசிய பேச்சு அடங்குவதற்குள் அரசுப் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரையில் அரசு புத்தகத் திருவிழாவில் மேடையில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது கருப்பசாமி வேடமணிந்த ஒருவர் சாமியாடி ஆட்டம் போட்டதைப் பார்த்த பள்ளி மாணவிகளும் சாமியாடி மயங்கி விழுந்தனர்.
இந்த நிலையில் புத்தகத் திருவிழாவில், பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது ஏன், கருப்பசாமி வேடம் அணிந்து சாமியாடுவதற்கு அனுமதி கொடுத்தது யார் என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
அதேநேரம் இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ‘கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவே கருப்பசாமி வேடமணிந்து கிராமிய இசைப்பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இது கிராமியக் கலையைச் சேர்ந்ததே தவிர, பக்திப் பாடல் கிடையாது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. மாணவிகள் யாரும் மயங்கவில்லை, மாணவிகள் மகிழ்ச்சியாக ஆடியதையே சாமியாடியதாகக் கூறி திசை திருப்புகிறார்கள்”’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிவியலையே மாணவர்கள் நம்பவேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ‘’ அறிவியல் சிந்தனைக்கு எதிரானவர்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த இக்கட்டான காலத்தில், அறிவியல் அணுகுமுறையைப் பரவலாக்குவதும் காப்பாற்றுவதும் மிக மிக அவசியம். அதில் ஆசிரியர்களின் பங்கேற்பு முக்கியமானது.
அறிவியல் முழுமையடைந்து எல்லா சிக்கல்களையும் தீர்த்துவிடும் நாள் ஒன்று வரும் என நான் நம்பவில்லை. எப்போதுமே, புதிய பிரச்சனைகள் எழும், அதே வேளையில் ஒரு டஜன் வருடங்களுக்கு முன்போ அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முன்போ தீர்க்கமுடியாது என நம்பப்பட்ட பிரச்சனைகளை அறிவியல் தீர்த்துவைக்கும். புதிய பிரச்சனைகள், அதுவரையிலும் பிரச்சனை என நினைக்கப்படாத பிரச்சனைகள் எழும். அறிவியல் நமக்குத் தருகின்ற விடைகளுக்கும் அந்த விடைகள் புதிதாக எழுப்புகின்ற கேள்விகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி எப்போதுமே இருந்துவரும். எனவே இந்தவிதத்தில் நான் “அறிவியல்வாதி” அல்ல.
அறிவியல் நமக்கு எந்தக்காலத்திலும் எல்லா விடைகளையும் தந்துவிடாது. நாம் செய்ய முயற்சிப்பது என்னவெனில், நாம் தருகின்ற விடைகளின் எண்ணிக்கையையும், தரத்தையும் மிக மெதுவாக உயர்த்தும் வேலையைத்தான். நான் நினைக்கிறேன், அந்த வேலையை அறிவியலின் மூலமாக மட்டும்தான் நாம் செய்ய முடியும்.” இன்றைய மாணவர்களுக்கு வலுவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
பெற்றோர்கள் அறிவியலை நம்பவேண்டிய காலகட்டம் இது.