அலைபாயுதே மனசு
பிரபல வங்கியில் நல்ல பதவியில் இருக்கும் காயத்ரி நேரில் சந்திப்பதற்கு வந்தார். இன்னமும் 35 வயதைத் தொடவில்லை. திருமணம் முடித்து கணவனுடன் நல்ல உறவில் இருக்கிறார். திருமணம் முடித்த நேரத்தில் ஐந்து வருடங்கள் குழந்தை வேண்டாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள் என்றாலும் இன்னமும் கர்ப்பம் அடையவில்லை.

அதேநேரம், மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுக்க இருவரும் அவசரப்படவில்லை. இன்னும் ஓர் ஆண்டு காத்திருந்து, அதன் பிறகு சிகிச்சை எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
கணவர் ராமலிங்கம் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இரண்டு பேரும் சம்பாதிப்பதால் பணம், காசுக்கு குறைவில்லை. திருமணம் முடித்ததுமே தனிக்குடித்தனம் வந்துவிட்டதால் உறவுகளால் எந்த பிரச்னையும் இல்லை. வருடம் ஒரு முறை வெளிநாடு டூர் செல்வது, வாரம் ஒரு நாள் ஹோட்டல் சாப்பாடு, மாதம் ஒரு முறை உறவினர் விசிட் என்று எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் காயத்ரியின் வங்கிக்கு புதிதாக வந்திருக்கிறார் அருண். இவர் காயத்ரிக்கு நேரடியாக மேல் அதிகாரி. ஓவர் ஸ்மார்ட். மிகவும் ஜாலியாக பழகும் நபர். அதேநேரம், பணியாளர்களிடம் வேலை வாங்குவதில் கில்லாடி. எந்த ஒரு டார்கெட் என்றாலும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே புயல் வேகத்தில் முடிக்கும் அவரது ஸ்பீடு காயத்ரியை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டது.
காயத்ரியை விட அருண் 20 வயது அதிகம். அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் ஏனோ திடீரென அருண் மீது காயத்ரிக்கு ஈர்ப்பு வந்திருக்கிறது. இத்தனைக்கும் அவர் எல்லோரிடமும் பழகுவது போலவே காயத்ரியிடமும் பேசிப் பழகியிருக்கிறார்.
இரண்டு நாட்கள் அருணுடன் அலுவலக விஷயமாக வெளியூர் டூர் போக நேர்ந்திருக்கிறது. அப்போதும் ஒரு பக்கா ஜெண்டில்மேனாகவே அருண் நடந்திருக்கிறார். எல்லா விஷயத்திலும் அவர் பர்ஃபெக்ட். அதோடு அவர் காயத்ரியை அடிக்கடி பாராட்டவும் செய்திருக்கிறார்.
எனவே, ஒரு கட்டத்தில் அருண் பக்கத்தில் வந்தாலே காயத்ரி பரவச நிலைக்கு வந்திருக்கிறார். அவருடன் பேசுவதற்காகவே சில வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்திருக்கிறார். காயத்ரி தானாக முன்வந்து பேசுவது தெரிந்தும் அருண் அதை சாதகமாகப் பயன்படுத்தவே இல்லை.
இரவு நேரத்திலும் அருண் பற்றிய நினைப்பே வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அருண் தனக்கு வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு காயத்ரி வந்துவிட்டார். தன்னுடைய காதல் உணர்வை கட்டுப்படுத்த முடியாது என்பது புரிந்துவிட்டது.
எனவே, ஒரு ஹோட்டலில் சந்தித்து தன்னுடைய காதல் உணர்வுகளை அருணிடம் காயத்ரி வெளிப்படையாகக் கொட்டிவிட்டார். அப்போது, தனக்கும் அப்படியொரு ஃபீலிங் இருப்பதாகவும், தனக்கு குடும்பம் இருப்பதால் அதை வெளியில் காட்டவில்லை என்றும் அருண் சொல்லியிருக்கிறார்.
அருணும் தன்னுடைய நிலையில் தான் இருக்கிறார், தன்னைக் காதலிக்கிறார் என்பதைத் தெரிந்ததும் காயத்ரி ரொம்பவே ஆனந்தமாகிவிட்டார். தன்னை அதிர்ஷ்டசாலி என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்.
‘’நாம் எப்படி ஒன்று சேர்வது?’’ என்று அருணிடம் கேட்டார் காயத்ரி.
அதற்கு அருண் ரொம்பவே தெளிவாக, ‘’எனக்கு என் மனைவி மீது எந்த வெறுப்பும் இல்லை. எனவே, அவரை பிரிவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் என்னுடைய குழந்தைகள் எனக்கு முக்கியம். எனவே, நாம் வேண்டுமென்றால் ரகசியக் காதலர்கள் போன்று அவ்வப்போது அலுவலக டூர் என்று எங்காவது சென்று சில நாட்கள் ஜாலியாக இருந்துவிட்டு வரலாம்…’’ என்று சொல்லியிருக்கிறார்.
இதில் காயத்ரிக்கு உடன்பாடு இல்லை. அது கணவனுக்கு செய்யும் துரோகம் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அருண், ‘’சரி, அப்படியென்றால் நீ சட்டப்படி விவாகரத்து வாங்கிவிடு. உனக்கு இங்கேயே ஒரு பங்களா வாங்கித் தருகிறேன். என்னுடைய மனைவியாக இருக்கலாம். ஆனால், வாரக் கடைசியில் மட்டும் அதாவது சனி, ஞாயிறு மட்டும் நாம் ஒன்றாக இருப்போம். மற்ற நாட்களில் நான் என்னுடைய வீட்டில் தான் இருப்பேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.
‘’அப்படியென்றால் என்னை வைப்பாட்டியாக இருக்கச் சொல்கிறீர்களா..?’’ என்று காயத்ரி நேரடியாகவே கோபமாகக் கேட்டுவிட்டார். தன்னை அருண் ரொம்பவே அவமதிப்பு செய்துவிட்ட வருத்தத்தில் சில நாட்கள் பேசவே இல்லை. வங்கிக்கும் விடுப்பு போட்டுவிட்டார்.
வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் அருண் பேசிய விஷயத்தில் இருக்கும் நியாயத்தை யோசிக்கத் தொடங்கியிருக்கிறார் காயத்ரி.
தனக்கு ஒரு குழந்தை இல்லை என்பதால் எளிதாக விவாகரத்து வாங்கிவிட முடியும். அவருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அந்த குடும்பத்தைக் குலைப்பது சரியாக இருக்காது. எனவே, வாரத்தில் இரண்டு நாட்கள் அருணுடன் வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதோடு நில்லாமல் தன்னுடைய முடிவை கணவரிடமும் கூறியிருக்கிறார்.
‘’எனக்கு உங்கள் மீது எந்த கோபமும் இல்லை, எந்த புகாரும் இல்லை. அதேநேரம், நான் இதுவரை உணராத காதல் உணர்வை இப்போது மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். இந்த அனுபவத்தை விட்டுத்தர மனம் வரவில்லை. எனவே, எந்த பிரச்னையும் செய்யாமல் எனக்கு விவாகரத்துக் கொடுங்கள்’’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அவரது கணவன், ‘’நீ என்ன முடிவு செய்தாலும் பரவாயில்லை. அதற்கு முன்பு ஒருசில கவுன்சிலிங் வகுப்புக்குப் போய்விட்டு வந்து முடிவு எடு. நான் உன்னை தடுப்பதற்காகக் கூறவில்லை, நீ செய்வது சரி என்பதை நன்றாக புரிந்துகொண்டு செயல்படு’’ என்று சொல்லியிருக்கிறார்.
அதனாலே வந்திருக்கிறார் காயத்ரி.
‘’நீங்கள் என்ன சோப் பயன்படுத்துகிறீர்கள்..?’’
‘’சின்ன வயதிலிருந்து லக்ஸ்..’’
‘’ஏன்..?’’
‘’விளம்பரங்களில் அதை பார்த்து பிரமித்திருக்கிறேன். இப்போதும் அதன் மணம் எனக்குப் பிடித்திருக்கிறது…’’
‘’வேறு என்னென்ன சோப் பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்கள்..?’’
‘’எங்காவது வெளியூர் போகும் நேரத்தில் வேறு வழியில்லாமல் அங்கு இருக்கும் சோப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், வேறு சோப் வாங்க வேண்டும் என்று தோன்றியதில்லை…’’
‘’லக்ஸ் விளம்பரங்கள் உங்களுக்குப் பிடிக்குமா?’’
‘’ம்… என்னென்ன புது ப்ளேவர் வருகின்றனவோ, அவற்றை எல்லாம் வாங்கிப் பயன்படுத்துவேன்…’’
‘’சரி, சமீபத்தில் வேறு ஏதாவது நீங்கள் ரெகுலராக பயன்படுத்தும் பிராண்ட் மாற்றினீர்களா..?’’
‘’முன்பு தாஜ்மஹால் டீ வாங்கி பயன்படுத்தி வந்தேன். சமீபத்தில் த்ரீ ரோசஸ் வாங்கி பயன்படுத்துகிறேன். அது ரொம்பவே நன்றாக இருக்கிறது..’’
‘’எப்படி மாறினீர்கள்..?’’
‘’தெரியவில்லை, அதை வாங்க வேண்டும் என்று தோன்றியது. வாங்கிப் பார்த்தேன்..’’
‘’சரி, விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில் த்ரி ரோசஸ் விளம்பரங்கள் மிகவும் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. உங்கள் வீட்டுக்கு அருகில், அலுவலகம் பக்கத்தில், கடைகளில் அதன் விளம்பரங்களைப் பார்த்து உங்களை அறியாமலே மயங்கியிருப்பீர்கள். எனவே, அடுத்து டீத்தூள் என்ன வாங்கலாம் என்று தோன்றிய நேரத்தில் புதிய பிராண்ட் பயன்படுத்தத் தொடங்கிவிட்டீர்கள்…’’
‘’அப்படியெல்லாம் இல்லை. சரி, இதற்கும் என் விஷயத்திற்கும் என்ன தொடர்பு..?’’
‘’பொதுவாக பள்ளி, கல்லூரி வயதில் புதிதாக சந்திக்கும் நபர் மீது திடீரென காதல் தோன்றும். அது, ஒரு நெருப்பு போன்றது. சடாரென பற்றிக்கொள்ளும். அதற்கு எந்த பெரிய காரணங்களும் தேவையில்லை, அதேபோல் அந்த உறவு படாலென உடைந்தும் போகும். அதற்கும் பெரியாக காரணங்கள் இருக்காது.
அதேபோல் வேலை செய்யும் இடங்களில் புதிதாக வரும் நபர் மீது, பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வரும் நபர் மீது, அடிக்கடி பேசிப் பழகும் நபர் மீதும் காதல் உணர்வு தோன்றுவது இயற்கை. இதை மியர் எக்ஸ்போஸர் எஃபக்ட் என்பார்கள். இது காதல் போன்று தோன்றும். ஆனால், இது காதலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை’’
‘’காதலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் காதலை உடைக்கப் பார்க்காதீர்கள். நான் அவர் மீது அதீதமான நம்பிக்கை வைத்திருக்கிறேன்…’’ என்றார் காயத்ரி.
‘’நீங்கள் சொல்வது உண்மை என்றால், இது மியர் எக்ஸ்போஸர் எஃபக்ட் இல்லை என்றால் கண்டிப்பாக அவருடன் வாழுங்கள், கல்யாணம் செய்துகொள்ளுங்கள். அது தவறு அல்ல. அதற்கு முன் உங்கள் காதல் உண்மையானது தானா என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள்… ஏனென்றால் இதே போன்று மீண்டும் ஒரு நபர் மீது காதல் வந்துவிட்டால் நீங்கள் அருணை பிரிய நேரிடும் அல்லவா..?’’
காயத்ரிக்கு கோபத்தில் உடல் கொதித்தது.
‘’பார்க்கிற எல்லோரையும் காதலிக்கிற பொண்ணுன்னு என்னை நினைக்கிறீங்களா..?’’
’’அப்படி சொல்லவில்லை, இது உண்மையான காதல் தானா என்பதை மட்டும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்..’’
‘’எப்படி..?’’
‘’இரண்டு மாதங்கள் வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அருணுடன் போனில் பேசாதீர்கள். அவரிடம் சொல்லிவிட்டும் நீங்கள் விலகி நிற்கும் முடிவை எடுக்கலாம். உங்கள் கணவருடன் அல்லது வேறு யாரேனும் ஒரு நபருடன் இணைந்து வெளியூர் சென்று வாருங்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகும் உங்களுக்கு அருண் மீது காதல் இருந்தால் விவாகரத்து பெற்றுக்கொள்ளுங்கள்.
அதற்கு முன்பு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகிக் கொள்ளுங்கள். காதல் என்பது ஒரு சாதாரண உணர்வு. அது, எப்போது யார் மீது வரும் என்று சொல்ல முடியாது. ஒரு நல்ல சினிமா பார்க்க நேர்ந்தால், அந்த நாயகன் அல்லது நாயகி மீது கொஞ்ச நேரம் போதை இருக்கும். ஆனால், அது நிஜமாகும் வாய்ப்பு இல்லை என்பதால் அதை காதல் என்று நம்ப மாட்டீர்கள். அந்த போதையும் காதல் தான்.
உங்கள் கணவர் காதல் என்ற பந்தத்தைத் தாண்டி உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார். உங்களுக்கு ஏது நன்மை தரும் என்பதை புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். எனவே, உங்கள் முடிவை நன்றாக பரிசீலனை செய்து ஒரு முடிவு எடுங்கள்’’
‘’இரண்டு மாதம் அல்ல இரண்டு வருடம் ஆனாலும் என் காதல் மாறாது’’ என்று கிளம்பினார் காயத்ரி.
நான் சொல்லிக் கொடுத்த வகையில், முதலில் ஒரு வாரம் மட்டும் லீவு போட்டு வீட்டிலேயே இருந்திருக்கிறார் காயத்ரி. அருண் உடனே லீவு கொடுத்திருக்கிறார். மீண்டும் ஒரு வாரம் லீவு கேட்டதற்கு கொஞ்சம் கோபப்பட்டிருக்கிறார். மீண்டும் ஒரு வாரம் லீவு வேண்டும் என்றதும் ரொம்பவே கோபமாகி இருக்கிறார்.
இதுவரை பார்க்காத அருணின் புதிய முகத்தைப் பார்த்திருக்கிறார். தேவை இல்லாமல் இப்படி லீவு போட்டுக்கிட்டு இருந்தால் அலுவலகரீதியாக தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
‘’என்னிடமா இப்படி பேசுகிறீர்கள்..?’’ என்று காயத்ரி கேட்டதும், ‘’யாரா இருந்தா என்ன, எனக்கு என் வேலை ஒழுங்கா நடக்கணும்….’’ என்று டென்ஷன் ஆகியிருக்கிறார். ஆனாலும் காயத்ரி லீவு போட்டிருக்கிறார். தன்னுடைய எச்சரிக்கையை மீறி லீவு போட்டதில் அருண் ஆவேசம் அடைந்து, ‘மெமோ அனுப்புவேன்’ என்றதும் தெளிவாகி விட்டாள் காயத்ரி.
அருண் ஆட்களை ஏமாற்றி வேலை வாங்குவதில் கில்லாடி என்பதும், அடுத்தவர் மனநிலைக்கு ஏற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வதில் புத்திசாலித்தனம் காட்டுகிறார் என்பதையும் உணர்ந்து கொண்டார் காயத்ரி. அந்த நொடியே அருண் மீது இருந்த பிரமிப்பும் காதலும் காணாமல் போயிருக்கிறது.
இதை நேரில் வந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் காயத்ரி. கணவனையும் அழைத்துவந்து அறிமுகம் செய்துவைத்தார்.
எல்லோருடைய மனமும் புதுப்புது அனுபவங்களை எதிர்பார்க்கவே செய்யும். அது போன்ற தருணங்களில் மனம் கொஞ்சம் பலவீனமாக இருந்தால், எப்படியெல்லாம் வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும் என்பதற்கு காயத்ரியின் காதல் நல்ல சாட்சி.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
தொடர்புக்கு : 9840903586