என்ன செய்தார் சைதை துரைசாமி – 296
சென்னை நகர் முழுவதும் சுமார் 3 லட்சம் கடைகள் அமைத்து, அதன் மூலம் தெருவின் குப்பையை மேலாண்மை செய்வதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டம் தீட்டியிருந்தார். இந்த விஷயத்தில் கடைக்காரர்கள் ஆர்வமுடன் இயங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊக்கத் திட்டங்கள் வகுத்திருந்தார்.
அதன்படி, மிகவும் சிறப்பாக தெருவை பராமரிக்கும் கடைக்காரருக்கு பரிசு, பாராட்டுகள் வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். ஒவ்வொரு வட்டத்திலும் எந்தத் தெருவில் குப்பை இல்லை என்று போட்டி போட்டு குப்பை அகற்றுவதற்கு இது வழிவகை செய்யும் என்று நம்பினார். மக்கள் மற்றும் மாநகராட்சியின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் கடைக்காரர் அதிக ஒத்துழைப்பு கொடுப்பார் என்று திட்டமிட்டார்.
இதுதவிர, எப்போதும் கடைக்காரரின் கண்காணிப்பு இருப்பதால், மக்களும் குப்பையை சரியாகவும், முறையாகவும் போடுவதற்கு முன்வருவார்கள். மக்களே, மக்களுக்காக சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாக இது விளங்கும் என மேயர் சைதை துரைசாமி ஆர்வமாக முன்னெடுத்தார். ஒரு வேளை கடைக்காரர் குப்பையை சரியாக மேலாண்மை செய்யவில்லை என்றால், உடனே வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்க முடியும் எனும் வகையில் திட்டமிட்டிருந்தார்.
அரசுக்கு எந்த வருவாய் இழப்பும் இல்லாமல், இந்த திட்டம் மூலம் குப்பை அகற்றப்படுவது மட்டுமின்றி மக்களின் சுகாதாரம் மேம்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்தார். இதனை இப்போது முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர முடியாது என்பதால் 2016 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்ததும் இதனை நடைமுறைப் படுத்துவோம் என்று மேயர் சைதை துரைசாமி திட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவும் பாராட்டும் தெரிவித்தார்
2016 பொதுத்தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் வெற்றிபெற்று பதவிக்கு வந்துவிட்டாலும், உடல்நிலை காரணமாக அவரால் இந்த திட்டத்தை நிறைவேற்ற் முடியாமல் போய்விட்டது. இந்தத் திட்டம் நிறைவேறாத காரணத்தால் 3 லட்சம் குடும்பத்திற்கு உதவிசெய்யும் மகத்தான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தமே இன்றும் சைதை துரைசாமிக்கு இருக்கிறது. அதனாலே, அவர் மனிதநேயர் என்று போற்றப்படுகிறார்.
- நாளை பார்க்கலாம்
‘