தயாரிப்பாளர், இயக்குநர் கேயார்
திரை உலகில் இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் கேயார். அது மட்டுமல்ல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குநர் சங்கங்களில் தலைமைப் பொறுப்பு உட்பட பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றிருந்தவர். இந்திய அரசின் தேசிய விருதுக்குழுவிலும் பங்கேற்றவர். கோதண்டராமையா என்கிற இயற்பெயரைக் கொண்ட கேயாரைச் சந்திக்கிற பலரும் அவரது இளமைத் தோற்றத்தைக் கண்டு வியப்பதுண்டு. வயது எழுபதைக் கடந்தும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவருடன் பேசினோம்.
“என்னைப் பார்க்கிறவர்கள் முதலில் கேட்கிற கேள்வி இதுதான், எப்படி இப்படி இருக்கிறீர்கள்? இதற்கு என்ன செய்கிறீர்கள்? என்பதுதான். ஆனால் நான் எதுவுமே செய்வதில்லை. விருப்பம் போல சாப்பிடுகிறேன். விருப்பம் போல நடக்கிறேன். சுதந்திரமாக இயங்குகிறேன் அவ்வளவுதான் எனது ஆரோக்கியத்தின் ரகசியம்.
சாப்பாடு என்றால் நான் சைவம், அசைவம் இரண்டும் சாப்பிடுவேன். வயதுக்கு ஏற்ற உணவு மாற்றத்தில் இப்போது நான் மட்டன் சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவேன். காய்கறிகளில் கீரைகளில் விருப்பம் உண்டு. இரவில் மாதுளம் பழம் சாப்பிடுவேன்.மற்றபடி எனக்கு இதுதான் பிடித்த உணவு என்று நான் எதிலும் தீவிரமாக இருப்பதில்லை. நான் பெரிய உணவு விரும்பி கிடையாது .அதைப் போல உடற்பயிற்சியிலும் சரி நான் கடினமான பயிற்சி எதுவும் செய்வதில்லை. அன்று முதல் இன்று வரை காலை நடப்பது மட்டுமே எனது உடற்பயிற்சி. அதையும் வலிந்து உடலைச் சிரமப்படுத்தி செய்வதில்லை. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கிறேன்.

முன்பெல்லாம் வெளியில் நடைப்பயிற்சி செல்வேன். தெரு நாய்த் தொல்லைகள் அதிகமாகி விட்டதால் இப்போது வெளியே செல்வதில்லை. வீட்டு வளாகத்துக்குள்ளேயே நடக்கிறேன். உடல் அசைவுப் பயிற்சிகள் ,கை கால்களை நீட்டி மடக்குவது என்று எளிமையான உடற்பயிற்சிகளைத்தான் செய்கிறேன்.
எனக்கு 40 ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்குரிய மாத்திரை சாப்பிடுகிறேன். அது கூட டாக்டர்களால் உருவாக்கப்பட்டது போல் நான் உணர்கிறேன்.
நான் தினமும் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம்,முதல் நாள் இரவு கொதிக்க வைத்து ஆற வைத்த சீரகத்தண்ணீர் காலையில் ஒரு லிட்டர் தினமும் குடிப்பேன். அதேபோல் உணவில் கீரைகள் தொடர்ந்து விடாமல் சாப்பிட்டு வருகிறேன். காலையில் தினமும் இந்த நேரத்திற்குக் கண்டிப்பாக எழ வேண்டும், இந்த நேரத்திற்குச் சாப்பிட வேண்டும் என்று நான் பெரிதாகக் கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வதில்லை. வேலை இருந்தால் சீக்கிரம் எழுந்து விடுவேன் இல்லாவிட்டால் சற்றுத் தாமதமாக எழுவேன். சாப்பாட்டு விஷயத்திலும் அப்படித்தான் .
சாதாரண சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குரிய கட்டுப்பாட்டுடன்தான் நான் சாப்பிடுகிறேன். எனக்கு 72 வயதாகிறது 68 கிலோ இருக்கிறேன். வயதுக்கேற்ற எடை இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இன்னும் கூட எடை குறைக்கலாம் என்று நினைக்கிறேன்.
சினிமா எனக்குப் பிடிக்கும். சினிமா மீது நேசம் கொண்டவர்கள் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். சினிமாவைப் பற்றி யாரும் அவதூறு கூறினாலும் தவறாகப் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஏனென்றால் சினிமா தன்னை நம்பியவர்களை என்றும் கை விடுவதில்லை. இதற்கு நானே சாட்சி.
நான் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் என்று பலதுறைகளில் இயங்கி இருக்கிறேன். அதேபோல் பல்வேறு சங்கப் பணிகளில் இருந்திருக்கிறேன். தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் உருவாக நான் ஒரு காரணம். தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம், சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கங்களில் தலைவராக இருந்திருக்கிறேன். இயக்குநர் கே. பாலச்சந்தர் தலைவராக இருந்தபோது தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் நான் செயலாளராக இருந்திருக்கிறேன். சவுத் இந்தியன் பிலிம் சேம்பரிலும் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளேன். தேசிய விருது தேர்வுக் குழுவிலும் பணியாற்றியுள்ளேன்.
நான் ஈடுபட்ட துறைகள் அனைத்திலும் வெற்றியையே பெற்று இருக்கிறேன். ஃபைனான்சியராக மட்டும் தான் நான் தோல்வி அடைந்தவனாக நினைக்கிறேன். அதுவும் கூட பலரிடம் நான் கொடுத்த பணத்தைக் கெடுபடியாகக் கேட்காததால் எனக்கு அந்தத் தோல்வி கிடைத்தது. அதை அவர்களுக்குச் செய்த உதவியாக இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றையும் விட நான் மகிழ்ச்சியாக உணர்வது இயக்குநராக இருக்கும் போது தான் என்பேன். அப்போதுதான் நாம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். தினந்தோறும் ஏதாவது செய்து கொண்டு இருக்க வேண்டி இருக்கும். இயக்குநர் பொறுப்பு என்பது மிகவும் பதற்றமான, வேலை அழுத்தம் கொண்டது என்பார்கள். ஆனால் நான் அப்போது கூட பதற்றமில்லாமல் இலகுவாக இருப்பேன். திடீரென்று ஒரு நடிகர், நடிகை படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் கூட நான் பதற்றம் அடைய மாட்டேன். படப்பிடிப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில் குஷ்பூ வரவில்லை என்று சொல்வார்கள். அதனால் என்ன என்று பிற நடிகர்களை வைத்து மற்ற காட்சிகளை எடுப்பேன். அன்று பார்த்தால் நான் நிறையவே காட்சிகளை படப்பதிவு செய்து இருப்பேன். இப்படி யாரும் நாளைக்கு திடீரென்று வரவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்பார்கள். வந்தால் நல்லது, வராவிட்டால் ரொம்ப நல்லது என்று சொல்வேன். அடுத்ததைப் பற்றி யோசிக்கலாம் என்பேன். அப்படி மனதை இலகுவாக வைத்துக் கொள்வேன்.
நான் மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாகக் கூறி விடுவேன். இதனால் சிலர் என்னை என்ன இப்படிக் கூறுகிறாரே என்று நினைப்பார்கள். நான் உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்று பேசுவதில்லை என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும்.
நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நாளைக்கே உலகம் அழிகிறது என்றால் நாளை வரை இருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று தான் நினைப்பேன். எல்லோருக்கும் உள்ளதுதானே நமக்கும் என்று கடவுள் மீது பாரத்தைப் போட்டு விடுவேன். நான் எப்போதும் எது பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. எதையும் கவலைக்குரியதாக எடுத்துக் கொள்வதில்லை.
எனக்கு ஒரு காலத்தில் ஆன்மீகத்தில் பெரிதும் நாட்டம் இருந்தது. வள்ளலார் பாதை எனக்குப் பிடித்த பாதையாக இருந்தது. அவரைத் தொடர்ந்து வாசிக்கிற போதுதான் ஐந்தாம் திருமுறைக்கும் ஆறாம் திருமறைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தேன். ஐந்தாம் திருமுறையில் பக்தியில் ஒரு நிலை இருக்கும் .ஆறாம் திருமுறையில் வேறு ஒரு நிலை. அதில் ஒரு உருவவழிபாடும் தேவையில்லை ஜோதி வழிபாடு மட்டும் போதும் என்று கூறியிருப்பார். எல்லாம் மதங்களும் அதை நோக்கித்தான் செல்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
நான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜீவசமாதிகளும் சென்றிருக்கிறேன். சித்தர்கள் ஆலயங்கள், சமாதிகளுக்கும் சென்று இருக்கிறேன். அண்மையில் கூட பாண்டிச்சேரி சென்று 14 ஜீவசமாதிகள் பார்த்து வந்தேன் .திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் தான் போவார்கள். ஆனால் நான் மேலே மலையேறியே கோயிலைச் சுற்றி இருக்கிறேன். அந்த அளவிற்குத் தீவிரமான வேட்கை இருந்தது அப்போது.
காலம் கடந்து வயது முதிர்ந்து பல்வேறுபட்ட ஆன்மீக அனுபவங்களுக்குப் பிறகு தெரிவது மதம் ஜாதி இனம் மொழி என்று எதுவுமே கிடையாது. எந்த வேறுபாடுகளும் கிடையாது, அனைவரும் அந்த ஜோதியை நோக்கிச் செல்வதாக நான் நினைக்கிறேன்.
இந்து மதத்தில் உள்ள சுதந்திரம் எனக்குப் பிடிக்கும் எல்லா வகையான சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து வளர்ந்து வருவது தான் இந்து மதம். நான் ஒரு இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இது தான் எனது ஆன்மிக அனுபவங்கள். எனது ஆன்மீக அமைதிதான் எனது மனநலம். எனது மனநலம் தான் எனது உடல் நலம் என்று நினைக்கிறேன். மற்றபடி எனது உடல் ஆரோக்கியத்தில் பெரிய ரகசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை” இவ்வாறு கேயார் கூறினார்.
– அருள்செல்வன்