உணவு, தண்ணீர், உறக்கமே மருந்து

Image

சித்த வைத்தியத்தில் இயற்கை

இயற்கையோடு இயற்கையாக மனிதர்கள் இணைந்து வாழவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கருத்து. அதனாலே சித்த மருத்துவத்தில் பயன்படும் மருந்துகள் அனைத்தும் இயற்கையுடன் தொடர்புடைய காய், கனி, இலை, வேர், பட்டை என்பதாக உள்ளன.  

பொதுவாக மனிதருக்கு உண்டாகும் வாதம், பித்தம், கபம் என மூன்று அடிப்படையில் நோய்களைப் பிரித்துப் பார்த்து அவற்றுக்கு மருந்தாக லேகியம், சூரணம், பஸ்பம், செந்தூரம், தைலம், மாத்திரை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

சித்த வைத்திய மருந்துகளை சாப்பிடும்போது பத்தியம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதனால், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று சித்த வைத்தியம் கூறுகிறது.

உணவு ஆரோக்கியத்திற்கும் நோய்க்கும் அடிப்படை. எனவே, உணவை அன்புடன், நிதானமாக ரசித்து, ருசித்து நிதானமாக சாப்பிடுங்கள். பசி எடுத்தால் மட்டுமே உண்ணுங்கள். ஒருபோதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். உணவு முழுவதும் உண்ட பின்னர் கொஞ்ச நேரம் இடைவெளிக்குப் பிறகே தண்ணீர் குடிக்க வேண்டும்.

புதிதாக சமைத்த உணவையே உண்ணுங்கள். உணவை சமைத்து 3 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. முதல் நாள் சமைத்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீர்கள்.

குடிக்க ஆறிய வெந்நீரை பயன்படுத்தி வாருங்கள். உருக்கிய நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கருணைக் கிழக்கு தவிர்த்து பூமியின் அடியில் விளையும் கிழங்குகளை தவிருங்கள்.

உணவுக்குப் பின் சிறிது நேரம் உலவுங்கள். குறிப்பாக, இரவு உணவுக்குப் பிறகு கண்டிப்பாக 300 மீட்டராவது நடந்து வாருங்கள். இரவு தூக்கத்தை ஒருபோதும்  கெடுத்துக் கொள்ளாதீர்கள். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்காதீர்கள்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி செய்விக்கும் மருந்துகளை உட்கொண்டு வாந்தி எடுத்து வயிற்றை சுத்தம் செய்யுங்கள். இதனால் வயிற்றில் அமில சுரப்பு சீராகும்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்யுங்கள். இதனால் குடல் பாதையில் வளரும் தேவையற்ற புழுக்களையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்றி புதிய என்சைம்கள் உருவாக்க வழி செய்யலாம்.

45 நாட்களுக்கு ஒருமுறை மூக்கை உப்பு நீரில் அல்லது திரவ மருந்துகளை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். இதை மருத்துவர் மேற்பார்வையில் செய்யுங்கள். இதனால் மூச்சு பாதை சுத்தமாகும். ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் குளியல், அதுவும் வெந்நீரில் செய்யுங்கள். உடலில் உண்டாகும் பித்த நோய்களுக்கான சிறந்த தடுப்பு மருந்து எண்ணெய் குளியல் என்கிறது சித்த மருத்துவம். மேலும், எண்ணெய் குளியல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள வெப்பம் மற்றும் கழிவுகளை வெளியேற்றும், சரும ஆரோக்கியம் காக்கும் என்கிறார்கள்.

தினமும் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், ஆறு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். இதனை முறையாக செய்துவந்தால் ஆரோக்கியமும் இளமையும் என்றென்றும் நீடிக்கும்.

Leave a Comment