வெற்றிக்கு ஐந்து வில்லன்கள்

Image

புத்தக அறிமுகம்

ஒரு ஹோட்டலுக்குப் போகிறீர்கள். நீங்கள் ஆர்டர் கொடுத்த உணவு வருகிறது. அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடும் தருணத்தில், உணவுக்குள் ஒரு ஈ செத்துக்கிடப்பது தெரியவருகிறது.

கத்திக் கூப்பாடு போட்டு உங்கள் கோபத்தைக் காட்டுவீர்களா..? உணவை அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிடுவீர்களா..? பக்கத்தில் சாப்பிடும் நபர்களுக்குத் தெரியாமல் சர்வரிடம் அதை சுட்டிக்காட்டி வேறு உணவு கொண்டுவரச் சொல்வீர்களா..? மேனஜரை வரவழைத்து சுட்டிக் காட்டுவீர்களா..? இதெல்லாம் சகஜம் என்று ஈயை தூக்கிப் போட்டுவிட்டு தொடர்ந்து சாப்பிடுவீர்களா..?

இது போன்ற தருணங்களில் ஒவ்வொரு நபரும் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்வதே ஒருவரது குணாதிசயம். அப்படி ஒருவர் நடந்துகொள்ளும் அணுகுமுறையை ஆங்கிலத்தில் ஆட்டிட்யூட் என்று சொல்வார்கள்.  

வெற்றி, தோல்விக்கு மட்டுமல்ல மகிழ்ச்சி, துன்பத்துக்கும் அவரது அணுகுமுறை எனப்படும் ஆட்டிட்யூட் காரணமாக இருக்கிறது. ஆட்டிட்யூட் என்பதை ஒருவரது இயல்பு, குணநலன், நடவடிக்கை, குணாதிசயம், மனப்பான்மை, மனோபாவம் என்றெல்லாம் சொல்லலாம்.

நேர்மறையாக, எதிர்மறையாக, கோபமாக, அமைதியாக, ஆளுமையுடன் என ஒவ்வொரு நபரும் அவர் வகுத்து வைத்திருக்கும் விதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறார்கள்.

அதிக திறமை இல்லாத மனிதராக இருந்தாலும் நல்ல அணுகுமுறை கொண்டவர் என்றால், நல்ல மனிதர் என்று பெயர் வாங்கிவிடுகிறார். அதேநேரம் அதிக திறமை உள்ளவர் என்றாலும் மோசமான அணுகுமுறை உள்ளவர் என்றால், ‘திறமை இருந்து என்ன செய்றது, நல்ல மனுஷன் இல்லையே’ என்று விலகுவார்கள்.

எனவே, ஒவ்வொரு நபரின் வெற்றிக்கும் மகிழ்ச்சியும் இந்த ஆட்டிட்யூட் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பதை,  தி டிஃப்ரன்ஸ் மேக்கர் (The Difference Maker) என்ற புத்தகத்தில் சிறப்பாக வடித்திருக்கிறார் ஆசிரியர் ஜான் சி மேக்ஸ்வல்.

வெற்றி தரும் ஆட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால், அப்படி முன்னேறிவிட முடியாமல் தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள் என்று மாக்ஸ்வெல் எச்சரிக்கிறார். இந்த ஐந்தையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால் வெற்றி நிச்சயம் என்கிறார்.

எவை எல்லாம் வெற்றிக்கு எதிரான ஆட்டிட்யூட் என்று பார்க்கலாம்.

  1. ஊக்கமின்மை

என்ன செய்வது என்றாலும் ஆர்வத்துடன் செய்யுங்கள். ஆர்வமும் ஊக்கமும் இல்லாமல் செய்யப்படும் விஷயங்களே வெற்றியைத் தடுக்கும் முக்கியமான வில்லன். ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றால் உங்களை உற்சாகப்படுத்தும் நபர்களுடன் பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு பழகினால் எப்போதும் அவநம்பிக்கையே தோன்றும். நெகட்டிவ் வார்த்தைகள் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் ரொம்பவே சோர்வாக்கும், முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

2. மாற்றம்

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், நான் இப்படித் தான் இருப்பேன் என்று மாற்றங்களை ஏற்காமல் முரண்டு பிடிக்காதீர்கள். மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள். புதிய விஷயங்களுடன் இணைந்து செல்வதே வெற்றிக்கு எளிதான வழி. எனவே, ஒவ்வொரு மாற்றம் நிகழும்போதும் ஏற்றுக்கொள்ளும் முதல் நபராக இருங்கள்.

3. பிரச்னைகள்

பிரச்னை இல்லாத மனிதர் என்று யாருமே இல்லை. எனவே, பிரச்னைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். பிரச்னை வரலாம் என்று எதிர்பார்த்து தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், சாவி இல்லாமல் பூட்டு தயாரிக்கப்படுவதில்லை. எனவே, ஒன்றுக்கு மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள். பல சமயங்களில், பிரச்னை என்று நினைப்பது சாதாரணமாகத் தென்படும். அசட்டையாக விட்டால் பெரிய ஆபத்தாக மாறிவிடும். எனவே பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாமல், அந்த தீர்வு தான் வெற்றிக்கு வழி என்பதை அறிந்து தைரியமாக எதிர்கொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

4. பயம்

ஒவ்வொரு நபருக்கும் பயம் இருக்கவே செய்யும். எனவே, பயத்தை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை. எது அச்சம் தருகிறதோ, அதை ஒப்புக்கொள்வதே வீரம். அவரால் தான் அந்த பயத்தை வெற்றிகொள்ள முடியும். பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று தேடிப் பாருங்கள். ஆழமாகத் தேடினால் அந்த பயத்திற்கான காரணம் அற்பமாக இருக்கும். எனவே, பயம் என்னவென்று அறிந்து அதை தெளிவுடன் ஆய்வு செய்து வெளியேறும் தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

5. தோல்வி

நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போன்று வாழ்க்கையில் வெற்றியைப் போலவே தோல்வியும் முக்கியம், சகஜம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லா நேரமும் வெற்றி அடைய வேண்டும் என்பது அவசியம் அல்ல, சில நேரங்களில் தோற்பதும் நல்ல அனுபவமாக இருக்கும். நல்ல பாடமாக இருக்கும். எனவே, தோல்வியைக் கண்டு அச்சப்படாதீர்கள். ஒரு பெரிய வெற்றிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விலை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த ஐந்து குணாதிச்சயங்களையும் வளர்த்துக்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்கிறார் மேக்ஸ்வல்.

அதோடு எல்லா விஷயங்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நம் கையில் இல்லாத விஷயங்களுக்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையிலும் என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்வதே முக்கியம்.

வெற்றி நிச்சயம்.

  • சக்திவேல் பாலசுப்பிரமணியன்

Leave a Comment