சாலை விரிவாக்கத்தில் முதல் நடவடிக்கை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 198

சாலை விரிவாக்கம் என்றதும் ஏதேனும் ஒன்றிரண்டு சாலைகளை மட்டும் விரிவாக்கம் செய்வதற்குத் திட்டமிடலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால், முதல் கட்டமாகவே 14 சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சைதை துரைசாமி திட்டமிட்டார்.

தனியார் நிறுவனத்தைப்  பணியில் அமர்த்தி  நில அளவைப்  பணிகளை மேற்கொள்ளச் செய்தார். அதன்படி  14 சாலைகளில் விரிவாக்கத்திற்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 763.9  சதுர மீட்டர் பரப்பளவு  நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும் என்று கணக்கீடு செய்யப்பட்டது. இது அதிகாரிகளை மலைக்க வைத்தது. ஆனால், சைதை துரைசாமி துணிச்சலுடன் இது குறித்து தீவிர ஆய்வில் இறங்கினார். இந்த ஒட்டுமொத்த நிலங்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 327.2 சதுர மீட்டர் பரப்பளவு நிலம் தனியாரிடம் இருந்து பெறப்பட வேண்டும் என்பது தெரிய வந்தது.

மீதமிருந்த 31 ஆயிரத்து 436.8 சதுர மீட்டர் பரப்பளவு நிலம்  மாநகராட்சியிடமிருந்தும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் சார்ந்த நிலம் என்பதை மேயர் சைதை துரைசாமி அறிந்தார். மக்களுக்கு முன்மாதிரியாக அரசு இருக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே முதல் கட்டமாக மாநகராட்சி மற்றும் அரசு  நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கையில் இறங்கினார்.

சாலை விரிவாக்கத்திற்குத் தேவையான இடங்களைக் கையப்படுத்துவதற்கு  மாநில மற்றும் மத்திய அரசு துறைகளுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.  நிலம் பெறுவதற்கு அனுமதி கோரப்பட்டது. இந்த நேரம், தங்கள் வீடு இருக்கும் பகுதியை இந்தத் திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் கோரிக்கை வைத்தார்கள். இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும் பல்வேறு வகையில் முயற்சிகள் எடுத்தனர். ஆனாலும், எந்தெந்த சாலைகள் முதல் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை மேயர் சைதை துரைசாமி வெளியிட்டார்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment