கர்ப்பத்தை தடுக்கும் ஃபைப்ராய்டு கட்டிகள்..!

Image

எச்சரிக்கிறார் டாக்டர் விஜயலட்சுமி




இன்று, பெண்களை அதிகம் பதறவைக்கும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது, ஃபைப்ராய்டு எனப்படும் நார்க்கட்டி. குறிப்பாக கர்ப்பப்பையில் வரும்  ஃபைப்ராய்டு கட்டி, உலக அளவில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களை பாதிப்பதாக  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, குழந்தைப் பிறப்பில்கூட பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவர்கள். இதுகுறித்து பிரபல மகப்பேறு மருத்துவர் விஜயலட்சுமியிடம் பேசினோம்.

ஃபைப்ராய்டு என்றால் என்ன? யாரை எல்லாம் இது பாதிக்கும்?


ஃபைப்ராய்டு என்பது பெண்களுக்கு கர்ப்பப்பையில் வரக்கூடிய ஒருவகையான நார்க்கட்டி. இது, கேன்சர் வகையிலானது இல்லை, சாதாரண கட்டியே ஆகும். இது, கர்ப்பப்பை சுவரை ஒட்டி வளரக்கூடியது. வயிறு, குடல், கர்ப்பப்பை போன்ற இடங்களில் இருக்கிற திசுக்கள் மிகமிக மென்மையாக இருக்கும். எங்கெல்லாம் இந்த மென்மையான திசுக்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் ஃபைப்ராய்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஃபைப்ராய்டைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பப்பையில்தான் அதிகமாக வருகிறது. இது, மிகக் குறைந்த அளவில் கேன்சராக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக இந்த ஃபைப்ராய்டு கட்டி, பெண்கள் வயதுக்கு வந்தது முதல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது கர்ப்பப் பைக்கு வெளியில் இருக்கும் அல்லது கர்ப்பப் பையின்  உள்ளுக்குள்ளும் இருக்கலாம். இதனால், அதிகமான ரத்தப்போக்கு ஏற்படலாம். மாதவிடாய் நேரத்தில் அதிகமான வலி இருக்கலாம். இதுவே, இதன் பொதுவான அறிகுறிகள். சில சமயங்களில், கர்ப்பப் பைக்கு வெளியில் இருக்கும் கட்டியானது, பெரிதாக வளரவளர நிறைய தொந்தரவுகளைக் கொடுக்கும். அப்போது, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும். பெருங்குடலுக்கு அழுத்தம் கொடுப்பதால், மலம் கழிப்பதிலும் சிரமம் ஏற்படும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகமாக இருக்கும்.

இந்த கட்டி வராமல்  தடுக்க வழி இருக்கிறதா? இது, குழந்தைப் பிறப்பைப் பாதிக்குமா?

இதை வராமல் தடுக்க வழிகள் இல்லை. இது, ஒரு பாரம்பரிய நோயும் அல்ல. ஆனால், வந்துவிட்டால் குணப்படுத்த சிகிச்சை இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அதைப் பார்த்துவிட்டால்  மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். அதாவது, அந்த கட்டியை, கரைக்கக்கூடிய மாத்திரைகளைக் கொண்டு குணப்படுத்தலாம். அதேநேரத்தில், கட்டி பெரிதாக இருக்கும்பட்சத்தில் அறுவைச் சிகிச்சை மூலமே அதைக் குணப்படுத்த முடியும். என்றாலும், இந்தக் கட்டி குழந்தை பிறப்பைப் பாதிக்கும்.
அரிதாக சில பெண்களுக்கு ஃபைப்ராய்டு இருக்கும்போதே கர்ப்பமும் தரிப்பதுண்டு. கருவுடன் அந்தக் கட்டியும் சேர்ந்து வளரும். பெரும்பாலும் இது கர்ப்பிணிகளுக்குப் பிரச்னைகளைக் கொடுப்பதில்லை என்றாலும், சிலருக்கு கரு கலையவும் குறைப்பிரசவம் நிகழவும் காரணமாக அமைவதுண்டு. இந்த கட்டி, மிகப் பெரிய அளவில் இருந்தால், குழந்தைகள் சரியான அளவில் வளர முடியாது, குழந்தை நல்ல முறையில் வளர்வதற்கு இடம் இருக்காது. அதனால், குறை பிரசவம் ஆவதற்கு வாய்ப்புள்ளது. பிரசவத்திற்கு பிறகும் ஃபைப்ராய்டு பிரச்னை, கர்ப்பப்பை சுருங்குவதைத் தடுக்கும். ரத்தப்போக்கும் அதிகமாக இருக்கும்.

ரத்தப்போக்கு வெளியேறும் நாட்களில் பெண்கள் எடுக்க வேண்டிய உணவுகள் என்ன? அந்தச் சமயத்தில், அவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை?

இந்த ஃபைப்ராய்டு கட்டியினால், அதிக ரத்தப்போக்கு வெளியேறுவதால், பெண்கள் இரும்புச் சத்துகொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகளிலும் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக, பசலை மற்றும் முருங்கைக் கீரைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இது தவிர, பேரீச்சை, வெல்லம்,  பால், பருப்பு, பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை, உளுந்து, துவரை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, எள் உள்ளிட்டவற்றிலும் இரும்புச் சத்து உள்ளது.  அதுபோல் முட்டையின்  மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மீன், நண்டு, அன்னாசிப்பழம், மாதுளம் பழம், பிளம்ஸ், தக்காளி, அவரை, சோயாபீன்ஸ், காலிபிளவர், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பாகற்காய், புரோக்கோலி, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய், டர்னிப் இலைகள், கடுகு இலைகள் போன்றவற்றிலும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

இவற்றை ரத்தப்போக்கு அதிமுள்ள நாட்களில் பெண்கள் சாப்பிடுவது அவசியம்.
மேலும், எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்வதும் ஃபைப்ராய்டில் இருந்து விலகி இருக்க உதவும். வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். என்றாலும், மாதவிலக்கின்போது கடுமையான வலியோ, அதீத ரத்தப் போக்கோ இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படியிருக்கும்பட்சத்தில், மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது. எதையும் ஆரம்பத்தில் பார்ப்பதே சிறந்தது.

Leave a Comment