ஆசிரியர் பக்கம்
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் பழக்கம் நிறைய குடும்பங்களில் உள்ளது. தாங்கள் பார்த்து பிரமிக்கும் நபர், அரசியல் தலைவர்கள், பெரிய அதிகாரிகள் காலில் விழுந்து ஆசி வாங்குவதை பெருமையாகப் பார்க்கிறார்கள்.
சில மேடைகளில் இந்த கலாச்சாரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிக்கொண்டிருப்பார். இடையில் யாரேனும் ஒரு மாணவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார். அதையடுத்து வரும் மாணவர்களுக்கும் அந்த அழுத்தம் விழுந்துவிடும். எனவே வரிசையாக எல்லோரும் காலைத் தொட்டுவிட்டு பரிசு வாங்கும் நிலைக்கு ஆளாவார்கள். அப்போது யாராவது ஒரு மாணவர், அதனை தவிர்ப்பது பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சில வீடுகளில் இதனை பாரம்பரிமாக கடைப்பிடிக்கிறார்கள். விஷேச தினங்களில் பெரியோர்களின் ஆசிர்வாதம் முக்கியம் என்று சொல்லித்தரப்படுகிறது. இதை எங்க சந்தோஷத்துக்குச் செய்கிறோம், மதிப்பையும் அன்பையும் இப்படி காட்டுவதில் தவறு இல்லை என்கிறார்கள்.
எனவே காலில் விழுவது அடிமைத்தனத்தின் மிச்சமா அல்லது கலாச்சாரமா என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது.
எந்தவொரு மனிதரும் இன்னொரு மனிதரை விட உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. காலில் விழுவது பழக்கமே தவிர கலாச்சாரம் கிடையாது. எவருடைய ஆசிர்வாதமும் யாரையும் வாழ வைக்காது, யாருடைய சாபமும் எவரையும் காயப்படுத்த முடியாது.
ஒரு மனிதரை தொடுவதற்குத் தகுதியில்லாத நபர் என்று தள்ளி வைப்பது மட்டும் குற்றம் அல்ல, ஒருவரை மிகவும் தகுதியுள்ள நபராக உயர்த்திக் காட்டுவதும் தீண்டாமையின் மறுபக்கமே. ஆகவே, பிறர் பார்க்கும் நேரத்தில் ஒருவர் காலில் விழாதீர்கள். தனி நபராக இந்த பழக்கத்தை பொது இடத்தில் தொடங்கி வைக்காதீர்கள்.
மதிப்பு கொடுப்பது என்றால் தனிமையில் கொடுங்கள். அதுவே மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். தொடர்புக்கு ; 9840903586