தோல்வி என்பது முடிவல்ல, அனுபவம்

Image

இதுவே நல்ல ஆரம்பம்

இன்னும் ஒரே ஒரு அடி தோண்டினால் நீருற்று கிடைத்துவிடும் என்ற நிலையில், கிணறு தோண்டுவதைக் கைவிட்டவர்கள் ஏராளம். ஆம், முடியும் வரை போராடுவது அல்ல, முடிவு வரை போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.

தோல்வியைக் கொண்டாடுபவர்களுக்குத்தான் வெற்றி தேவதையின் அருள் கிடைக்கும். தோல்வியைக் கண்டு பயந்தவர்களும், தோல்வியினால் பாதையில் இருந்து விலகியவர்களும் ஒருபோதும் வெற்றியைத் தொடவே முடியாது. ஏனென்றால், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருப்பது நூலிழை வித்தியாசம்தான்.

நீரில் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது போன்றுதான், தோல்வி இல்லாமலே வெற்றி அடையவேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அது சாத்தியமே இல்லை. தோல்வியைக் காணாத மாவீரர்களும், அறிஞர்களும், மேதைகளும், விஞ்ஞானிகளும் இந்த உலகத்தில் பிறக்கவே இல்லை.

என்னால் முடியும் என்பதற்கும், என்னால் மட்டுமே முடியும் என்பதற்குமான இடைவெளியில்தான் இந்த வெற்றி தோல்வியின் தூரம் அமைந்திருக்கிறது.
அதாவது, கடமையைச் செய்தால் அது வெற்றி, அதுவே கடமைக்குச் செய்தால் அது தோல்வி . வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள இடைவெளி தகுதிக் குறைவால் வருவது அல்ல…. முயற்சி குறைவால் வருவது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நமது ராக்கெட் விஞ்ஞானி ஒருவரிடம், ‘’நீங்கள் அனுப்பும் ராகெட் கடலுக்குள் விழுந்தால் அது தோல்விதானே..?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘’ஒரு ராக்கெட்டை தயாரிப்பதில் பல நிலைகள் உள்ளன. அதாவது, ராக்கெட்டை வெவ்வேறு பகுதிகளாக தயாரிப்பதிலிருந்து, ஏவுதளத்தில் முழுமையான ராக்கெட்டாக இணைக்கப்பட்டு, செயற்கை கோள் பொருத்தப்பட்டு,  குறித்த நேரத்தில் செலுத்துவது, விண்வெளியை அடைவது  என பல்வேறு திட்ட இலக்குகள் உண்டு. அதனால்ம்  ராக்கெட் கடலுக்குள் விழுவதை நாங்கள் தோல்வி என்று கருதுவது இல்லை. ஏனென்றால் கடலுக்குள் விழும்  தருணம் வரை அந்த ராக்கெட்  பல திட்ட இலக்குகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இதை நாங்கள் ஒரு அனுபவமாகவே எடுத்துக்கொள்வோம்.

இந்த அனுபவம் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை எங்களுக்கு எடுத்துரைக்கும். அதை நாங்கள் ஆராய்ந்து அந்த தவறு நடக்காதவண்ணம் மீண்டும் ஒரு ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி காண்போம்” என்றார். ஆம், இந்தத் தெளிவுதான் மனிதருக்குத் தேவை. ஒரு தோல்வியில் இருந்து நீங்கள் மனம் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அது உங்களின் விருப்பம். 

’முயற்சி இல்லையென்றால் உன்னால் ஜெயிக்கவே முடியாது; முயற்சி இருந்தால் உன்னைத் தோற்கடிக்கவே முடியாது” என்பார், நம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஆம், நம்முடைய இலக்குகளை நன்றாக முடிவுசெய்து, அதில் தீர்க்கமாய் இறங்கினோம் என்றால், அனைத்தையும் பெற்றுவிட முடியும். அதுதான் உண்மையும்கூட.

வெற்றியை அனுபவிக்க ஆசைப்படுகிறீர்களா..? முதலில் தோல்வியை ரசிக்கப் பழகுங்கள்.

Leave a Comment