பெண்களை மிரட்டும் கண்கள்..!

Image

எச்சரிக்கையாக இரு தோழி



அறிவியல் உலகில் அனுதினமும் ஆயிரம் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. எந்த ஒரு கண்டுபிடிப்பு என்றாலும் அவற்றில் எத்தனை சதவிகிதம் நன்மை இருக்கிறதோ, அதே அளவுக்கு தீமையும் இணைந்தே இருக்கிறது.  அதனால்தான்,  நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நடத்தப்படும் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதிலும்  அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருக்கிறார்கள்.


இன்றைய சூழலில் ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய சமூக வலைத்தள பக்கங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை செக் செய்தாலே போதும். அந்த பெண்ணைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரையிலும்  தெரிந்துவிடும் என்கிறது ஓர் ஆய்வு. இந்த தகவல்களே கயவர்களை தூண்டுகிறது என்றும் சொல்கிறார்கள்.

அதனால்,  பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கிறது. எங்கே, எப்போது, எப்படி, யாரால் குற்றம் நடக்கும் என்பதை யாருமே யூகிக்க முடியாது. சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு எதிரிகள் இருக்கலாம். அதனால், தாய், தந்தையரைத் தவிர யாரையும் ஒரு பெண் முழுமையாக நம்பிவிடக் கூடாது. வீட்டில் மட்டுமின்றி, வெளியிடங்களுக்குப் போகும்போது, இருநூறு சதவிகித பாதுகாப்புடன் செல்வது அவசியம்.

இப்போது ஒருவரை படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் மிகவும் சுலபமாகிவிட்டது. நவீன தொழில்நுப்டம் மூலம் அந்த வீடியோவை தவறாக திரிக்கவும் முடியும். அதனால், பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நண்பர்கள் என்றாலும் தேவையின்றி புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கவே வேண்டாம்.

கழிவறை, ஹோட்டல் ரூம், துணிக்கடைகளின் டிரையல் ரூம்களில் கேமரா கண்கள்  ஒளிந்திருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இப்படி எடுக்கப்படும் ஒரே ஒரு புகைப்படம், அந்தப்  பெண்ணின் வாழ்வையே சீரழித்துவிடும்.  பக்கத்து வீட்டின் மொட்டை மாடி, எதிர்வீட்டு ஜன்னல் ஆகியவற்றிலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியுள்ளது.  இது மட்டுமின்றி காதலர்கள் பேசிக்கொள்ளும் கொஞ்சல்கள், கணவன் – மனைவி இடையேயான ரொமான்ஸ்களும் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதற்காக நவீன தொழில்நுட்ப யுகத்தில் வீட்டுக்குள் அடைந்தே கிடக்கவும் முடியாது.

பெண்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக, ‘ஒரே ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்’ என்று உங்களது கைப்பேசியை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்டால், தரக்கூடாது. தெரிந்தவர்களாக இருந்தாலும் முடிந்தவரை கொடுக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள். அப்படிகொடுக்க நேர்ந்தால், செல்போனில் இருந்து ஏதேனும் தகவல் திருடப்பட்டதா என்பதை உடனடியாக உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.  ஆம், உங்களிடம் இருந்து கைமாறிய சில நொடிகளில்கூட வில்லங்கம் செய்துவிட முடியும். அதுபோல் செல்போனை ஏதேனும் காரணங்களால் சர்வீஸ் கொடுப்பதாக இருந்தால், புகைப்படங்களை அழித்து விட வேண்டும். மெமரி கார்டை அகற்றிவிட்டுத்தான்  கொடுக்க வேண்டும். கான்டாக்டில் இருக்கும் எண்களையும் கணினியில் சேமித்துக்கொண்டு, செல்போனில் இருந்து அகற்றிவிட்டு கொடுக்க வேண்டும்.


மேலும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முன்பின் தெரியாதவர்களை ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இணைக்கக் கூடாது. பிரச்னையான கருத்துக்களை வெளியிடும்  நபர்களை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது. ஃபேஸ்புக்கில் ஒவ்வொருமுறை எழுதும்போதும் கவனமாக எழுத வேண்டும். நம்முடைய எழுத்தே நம்மை சிக்கவைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல், ஃபேஸ்புக்கில் தோழிகள், குடும்பத்தின்  புகைப்படங்களைப் போடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.


செல்போனில் வேண்டாத, பெயர் தெரியாத அழைப்புகள் வந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்துப் பேச வைக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நபர்கள் நட்பு கோரிக்கை எழுப்பினால் ஏற்றுக்கொள்ளக் கூடாது. முக்கியமாக செல்போன், எம்.எம்.எஸ்., ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று எந்த ரூபத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக உரிய வகையில் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதற்காக அஞ்சவும் கூடாது. அதற்கு தயக்கமும்  காட்டக்கூடாது. ‘தானாகவே சரியாகிவிடும்’ என்று நினைத்தால், அதுவே எதிரிக்கு இடம்கொடுத்தது போலாகிவிடும்.

பெரும்பாலான பெண்கள், தங்களுக்கு மிக நெருக்கமான ஆண்களால், அறிமுகமான நபர்களால் மட்டுமே  இதுமாதிரியான குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். இதற்காக பெண்கள் மனம் உடைவதோ… தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வதோ முட்டாள்தனமானது. ஆகையால் எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எதையும் எதிர்த்துப் போராடத் தயாராகுங்கள்.

எப்போதும் உங்களுக்கு துணையாக நிற்பதற்கு பெற்றோர்களும், காவல் துறையும் உள்ளது என்பதை மறக்கவே வேண்டாம்.

Leave a Comment