எல்லோரிடமும் ஏதாவது இருக்கவே செய்கிறது.

Image

அதை கொடுப்பதே மகிழ்ச்சி

பிறருக்குக் கொடுக்கும்போது, நமக்குக் கிடைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்வார்கள். இதனை தானமும் தர்மமும் கொடுத்துப் பார்த்தவர்கள்தான் உணர முடியும். பணம் இருக்கிறவங்களுக்குத்தான் இப்படிப்பட்ட மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும், நம்மிடம் என்ன இருக்கிறது என்ற அவநம்பிக்கை காரணமாக, பலரும் கொடுப்பதைப் பற்றி நினைப்பதுகூட இல்லை.

உண்மை என்ன தெரியுமா..?

ஒவ்வொரு நபரிடமும் ஏதேனும் ஒன்று தேவைக்கும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. அதை நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலே போதும்.

அப்படியெல்லாம் என்னிடம் எதுவுமே இல்லை என்கிறீர்களா..? இதோ, இந்த சம்பவத்தைக் கேளுங்கள்.

ஒரு டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர். அந்த பஸ் நிரம்பியது. ஒரு வயதான மனிதர் வந்து நின்றதும், உடனே அந்த நபர் எழுந்துநின்று, வயதானவர் அமர்வதற்கு இடம் கொடுத்தார்.

அந்த நபர் நின்ற இடத்தின் அருகே கொஞ்ச நேரத்தில் ஒரு இருக்கை காலியானது. அந்த நபரோ, அந்த இருக்கையில் அமராமல், அருகே நின்ற வேறு ஒருவருக்கு அந்த இடத்தைக் கொடுத்தார். மீண்டும் மீண்டும் அதே போன்று அவர் இருக்கையை பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இதனை நடத்துனர் பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த நபர் நினைத்திருந்தால் அமர்ந்தே இருக்கலாம் அல்லது ஏதேனும் இருக்கையில் அமரவும் செய்யலாம். ஆனால் அவரோ, கடைசி நிறுத்தம் வரை நின்றுகொண்டுதான் பயணம் செய்தார்.

அவர் கீழே இறங்கும் நேரத்தில் ஆர்வத்தை அடக்க முடியாத நடத்துனர், ‘’ஏன் நீங்கள் உட்காராமல், அந்த இடத்தை வேறு நபருக்குக் கொடுக்கிறீர்கள்’’ என்று  காரணம் கேட்டார்.

அதற்கு அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா..?

“நான் படிக்காதவன்… என்னிடம் பிறருக்குக் கொடுப்பதற்கு என்று எதுவும் இல்லை. அதிக அறிவும் இல்லை, பணமும் இல்லை. ஆனாலும், மற்றவர்களுக்கு நான் எதையாவது கொடுக்க ஆசைப்படுகிறேன். எனவே,  எளிதாக செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான். எனவே இதை நான் எந்த பஸ்ஸில் ஏறினாலும்  தினமும் இப்படித்தான் என்னுடைய இருக்கையை பிறருக்குக் கொடுக்கிறேன்.  நாள் முழுவதும் நான் வேலை செய்கிறேன் என்றாலும்,  என்னால் இன்னும் சிறிது நேரம் நிற்க முடியும்.

நான் ஒவ்வொரு நபருக்கும் இருக்கை கொடுக்கும்போது, அவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்க்கிறேன். அந்த மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி தருகிறது. அவர்களுக்கு உதவி செய்தது போன்ற திருப்தி அளிக்கிறது. எனவே, நான் ஒரு வள்ளல் போன்று சந்தோஷமாக வீட்டுக்குச் செல்ல முடிகிறது’ என்று சொல்லிவிட்டு இயல்பாக நகர்ந்தார்.

இந்த சம்பவம் எத்தனை பெரிய விஷயத்தை உணர்த்துகிறது தெரியுமா? ஆம், கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று தயங்க வேண்டியதில்லை. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை பிறருக்குச் செய்தால் போதும். அது, கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துவிடுகிறது.

உண்மையைச் சொல்லப் போனால், அந்த நபர்தான் மிகப்பெரிய பணக்காரர். எதுவுமே இல்லாமலே அவர் தன்னை ஒரு பணக்காரராக உணர்கிறார். இல்லாத ஒன்றை பிறருக்குக் கொடுத்து, அதன் மூலம் மகிழ்ச்சியும் அடைகிறார்.

ஆம், இல்லாமையிலும் இருக்கிறது மகிழ்ச்சி.

Leave a Comment