• Home
  • சினிமா
  • எல்லா கதையும் உண்மை… எல்லா உண்மையும் கதை

எல்லா கதையும் உண்மை… எல்லா உண்மையும் கதை

Image

பிக் பிஷ் சினிமா தரும் பாடம்

இந்த உலகம் கடலால் அல்ல… கதைகளால் சூழப்பட்டது. பிறந்தது முதல் மரணம் வரையிலும் பிறர் சொல்லும் கதைகளை கேட்டுத்தான் வளர்கிறான் மனிதன். பூமி தட்டையானது என்று சொன்னால் நம்புவான்… உருண்டை என்றாலும் நம்புவான். அவனுக்குத் தேவை சுவாரஸ்யமான கதை மட்டுமே.

பொதுவாகவே உண்மை என்றாலும் அடுத்தவரிடம் சொல்லும்போதே கொஞ்சம் பில்டப் கொடுத்தே மனிதர்கள் பேசுகிறார்கள். என்னுடைய மகன் இரவும் பகலும் விழுந்துவிழுந்து படித்துத்தான் இத்தனை நல்ல மார்க் வாங்கியிருக்கிறான், என்னுடைய மகன் நன்றாகத்தான் படித்தான் ஆனால், பரிட்சை தினத்தன்று காய்ச்சல் வந்துவிட்டது. அதனால்தான் மதிப்பெண் குறைந்துவிட்டது என்றெல்லாம் உண்மையும் புனைவுமாகவே வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் பேசப்படுகின்றன.

இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த காதல் நம்முடையது என்று பேசாத காதலர்கள் இல்லை. அண்ணன், தம்பின்னா இப்படித்தான் இருக்கணும் என்று சொல்லப்படாத சகோதரர்கள் இல்லை. பிள்ளையை எப்படி கவனிச்சிக்கிட்டா தெரியுமா, அவதான் அற்புதமான அம்மா என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இவர்களே பின்னர் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டுவது, வெட்டு குத்துக்களில் இறங்குவது என்று வாழ்க்கையில் எதுவுமே நிஜமல்ல, அதேநேரம் கதையும் அல்ல.

இந்த உண்மையை அடிப்படையாக வைத்து நெஞ்சைத் தொடும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் படமே பிக் ஃபிஷ்.  இயக்குனர் டிம் பர்டனின் மாயாஜாலத்தில் புதிய உலகத்தின் கதவுகள் திறக்கின்றன.

பத்திரிகையாளனாக இருக்கும் வில் புளூமின் அப்பா புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பதாக செய்தி வருகிறது. ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் போட்டோ ஜெர்னலிஸ்ட் மனைவியான ஜோசபினுடன் சொந்த ஊருக்குப் பயணமாகிறான். அப்பாவை விட்டு, ஊரை விட்டு பிரிந்துவந்த காரணத்தை நினைத்துப் பார்க்கிறான்.

வில் திருமண நாளன்று வந்திருக்கும் விருந்தினர்களிடம் கதை சொல்கிறார் வில் புளூமின் அப்பா எட்வர்ட் புளூம். எவராலும் பிடிக்க முடியாத ராட்சஷ மீன் ஒன்றை, தங்க மோதிரத்தைப் போட்டு பிடித்தேன். அன்றுதான் வில் பிறந்தான். அவனது அம்மா சாண்ட்ரா பிரசவத்தின் போது கடுமையாக முக்கியதில், வயிற்றில் இருந்து ராக்கெட் வேகத்தில் வெளியே வந்து நீண்டதூரம் வழுக்கிக்கொண்டே வெளியோ போய் விழுந்தான் என்று சொல்லி சிரிக்கிறார். அதனை அத்தனை பேரும் ஆர்வமாகக் கேட்க, வில் மட்டும் எரிச்சல் ஆகிறான். ஏனென்றால் அவன் இந்த கதையை ஆயிரம் முறை கேட்டுவிட்டான்.

அப்பாவிடம் எல்லாவற்றுக்குமே ஒரு கதை சொல்வார். அது சுவாரஸ்யமாக இருக்கும் என்றாலும் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்பதுதான் மகனின் கோபம். நேர்மை இல்லாத கதைசொல்லி என்ற கடுப்பில் ஊரைவிட்டே கிளம்பிவிடுகிறான். மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. இப்போது மரணப் படுக்கையில் இருப்பதால் வேறு வழியின்றி வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்க்கிறான்.

 மருமகளைப் பார்த்ததும் ஆர்வமுடன் கதை சொல்லத் தொடங்குகிறார் எட்வர்ட். ஜோசபினுக்கு அவர் சொல்லும் கதையைக் கேட்பது அத்தனை பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் வில் மேலும் கடுப்பாகிறான்.

எதற்காக எப்போதும் பொய்யான கதைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். உண்மையே பேசமாட்டீர்களா என்று நேருக்கு நேர் கேட்கிறான். நான் சொன்னது எல்லாமே உண்மைதான், அதை நீ இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்கிறார் எட்வர்ட்.

சின்ன வயதில் இருந்து எட்வர்ட் சொன்ன கதைகள் ஆரம்பமாகின்றன.

சூனியக்கார கிழவி (ஹெலினா) தங்கியிருக்கும் பாழடைந்த பங்களாவுக்குள் தோழர்கள் நுழையத் தயங்கும் நேரத்தில் எட்வர்ட் தைரியமாக நுழைகிறான். அந்த சூனியக்காரக் கிழவியின் ஒரு கண் மூடப்பட்டு இருக்கிறது. அதை திறந்தால், எதிரே நின்று பார்ப்பவர் எப்படி மரணம் அடைவார் என்பது தெரியும் என்று பயமுறுத்துகிறாள் சூனியக்கார கிழவி.  

ஒரு கணம் கூட யோசிக்காத எட்வர்ட், எனக்கு மரணம் எப்படியிருக்கும் என்பது தெரியவேண்டும் என்று கண்களை திறந்து காட்டச்சொல்கிறான்.

இப்போது எட்வர்ட் (ஈவான் மெக்ரெஹர்) வளர்ந்துவிட்டான். இந்த நேரத்தில் ஊருக்குள் ஒரு ராட்சஷ மனிதன் வந்து வளர்ப்பு மிருகங்களை எல்லாம் அடித்துக்கொல்கிறான் என்று மக்கள் பயப்படுகிறார்கள். அவனை கொல்வதற்காக காட்டுக்குள் நுழைகிறான் எட்வர்ட். அவனுக்கு ராட்சஷ மனிதனால் மரணம் கிடையாது என்பது தெரியும் என்ற தைரியத்தாலே, அவனை எதிர்க்கப் போகிறான்.

ஆனால், காட்டுக்குள் போனபிறகே அது 12 அடிக்கு வளர்ந்திருக்கும் கார்ல் எனும் சாதாரண மனிதன் என்பது தெரியவருகிறது. பசியை தீர்க்கவே அவ்வப்போது ஊரூக்குள் வந்து சாப்பிடுகிறேன் என்கிறான். அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவதாகச் சொல்லி வேறு ஊருக்கு அழைத்துப் போகிறான் எட்வர்ட்.

வழியில் தென்படும் ஸ்பெக்டர் எனப்படும் புதுமையான நகரத்தில் வாழும் அத்தனை பேரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். எந்தக் காரணம் கொண்டும், அந்த ஊரைவிட்டு வெளியேறாமல் இன்பமாக வாழ்கிறார்கள். அந்த ஊரில் ஜென்னி என்ற எட்டு வயது சிறுமியை பார்க்கிறான். அவளுக்கு காதல் வருகிறது. எனவே நான் வளர்ந்து உனக்காக காத்திருப்பேன் என்கிறாள். அவளுக்கு திரும்பிவருவேன் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு  அங்கேயிருந்து கிளம்புகிறான் எட்வர்ட்.

உயர்ந்த மனிதன் கார்லை ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்க்கிறான். அந்த நேரத்தில் ஒரு மின்னல் போன்று சில நொடிகள் மட்டும் சாண்ட்ரா எனும் அழகியைப் பார்க்கிறான். அவள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறான்.

அவளைப் பற்றி எனக்குத் தெரியும். நீ சர்க்கஸ் கம்பெனியில் வேலை செய்தால் ஒவ்வொரு மாதமும் சம்பளத்துக்குப் பதிலாக அவளைப் பற்றிய ஒரு தகவல் சொல்வேன் என்கிறான் சர்க்கஸ் முதலாளி. மூன்று வருடங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறான் எட்வர்ட். அதன்பிறகு சாண்ட்ரா பற்றி தகவல் கிடைக்கிறது. வேகமாக போய் அவளை சந்தித்து, முதல் சந்திப்பிலேயே தன்னுடைய காதலை சொல்கிறான். ஆனால் அவளோ, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று சொல்கிறாள். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கிறான் எட்வர்ட்.

தன்னுடைய  சின்ன வயதுத் தோழன் சாண்ட்ராவை திருமணம் முடிக்கயிருப்பது தெரியவருகிறது. தனக்கு நிச்சயமான பெண்ணுடன் அடிக்கடி பேசும் எட்வர்ட்டை கண்டு கோபமாகும் தோழன் அடித்து நொறுக்குகிறான். தன் மீதான காதலுக்காகவே அடி வாங்குகிறான் என்பது தெரிந்ததும் மனம் மாறுகிறாள் சாண்ட்ரா. நிச்சய மோதிரத்தை தூக்கியெறிந்து எட்வர்ட்டை காதல் செய்கிறாள்.

திருமணம் முடிக்க இருக்கும்நேரம் ராணுவத்தில் இருந்து அழைப்பு வரவே, போருக்குச் செல்கிறான். போர் நடக்கும் இடத்தில் வித்தியாசமான ஒரு பெண்ணை பார்க்கிறான். இரண்டு கால்கள், ஒரே உடல், நான்கு கைகள், இரண்டு தலைகளுடன் இருக்கும் பெண்ணை பார்த்து வியக்கிறான். அவளை சர்க்கஸில் சேர்க்க கூட்டிச்செல்லும் நேரத்தில் எட்வர்ட் காணாமல் போகிறான். அவன் செத்துவிட்டதாக தகவல் கேட்டு கதறி அழுகிறாள் சாண்ட்ரா.

ஆனால், எட்வர்ட் திரும்பிவருகிறான். அப்போது ஸ்பெக்ட்ரா கிராமம் பாழடைந்து கிடக்கிறது. அனைவரும் கடனில் மூழ்கித் தவிப்பதை கண்டு, தன்னுடைய பணத்தைக் கொண்டு அந்த கிராமத்துக்கு மீண்டும் ஒளியூட்டுகிறான். அவனுக்காக காத்திருப்பதாக சொல்கிறாள் ஜென்னி. ஆனால் அவளை ஏற்க மறுத்துவிட்டு  தன் ஊருக்குத் திரும்புகிறான் எட்வர்ட்.

எட்வர்ட் ராணுவத்தில் பணி செய்தது, செத்துப்போனதாக தகவல் வந்தது, ஸ்பெக்ட்ரா கிராமம் போன்ற எல்லாமே பொய் என நினைக்கிறான் வில். அந்த கிராமத்தில் தந்தைக்கு இன்னொரு மனைவி இருக்கிறாள், அவளுக்காகத்தான் ஏராளமான பணத்தை செலவழித்திருக்கிறார் என்று நினைக்கிறான். தந்தை பற்றிய உண்மையை கண்டறிவதற்காக ஸ்பெக்ட்ரா கிராமத்துக்குப் போகிறான். அங்கே ஜென்னியை சந்தித்த பிறகு…. அவனுக்கு எல்லாமே உண்மை என்று தெரியவருகிறது.

டாக்டரை சந்தித்து தன்னுடைய பிறப்பு குறித்து கேட்கிறான் வில். குறிக்கப்பட்ட நாளுக்கு முன்பே நீ பிறந்துவிட்டாய். உன் தந்தை ஊருக்கு வரும் முன்னரே நீ பிறந்துவிட்டதையே அவருடைய பாணியில் அனைவரிடமும் சொன்னார். அன்று அவர் பிடித்த அதிர்ஷ்ட மீன் நீ தான் என்கிறார். அதன்பிறகுதான் அவர் கதைகள் எல்லாம் உண்மையின் மீது எழுப்பப்பட்ட கற்பனைகள் என்பதை உணர்கிறான். சாதாரணமான நிகழ்வுகளை எல்லாம் தன்னுடைய கற்பனையை சேர்த்து ருசியாக்கியிருக்கிறார் என்பதை உணர்கிறான். இத்தனை நாளும் அப்பாவின் மேன்மை தெரியாமல் அவரை நோகடித்து விலகிவிட்டதற்கு வருந்துகிறான்.

அப்பாவிடம் பேசுகிறான். அவருடைய மரணம் எப்படியிருக்கும் என்பதை சூனியக்காரக் கிழவியின் கண்ணில் பார்த்தீர்களா என்று கேட்கிறான்.

அதை நீதான் எனக்கு கதையாக சொல்லவேண்டும் என்றதும், அப்பாவாக மாறுகிறான் வில். அவருடைய மரணம் எப்படியிருக்க வேண்டும் என்பதை கண்ணீருடன் விவரிக்கிறான். பிரமாண்ட மீனாக எட்வர்ட் மாறி மரணத்தைத் தழுவுவது குறித்துப் பேசுகிறான். அவர் ஆனந்தமாக உயிர் விடுகிறார்.

எட்வர்ட் மரணத்தின்போது ஆச்சர்யம் நிகழ்கிறது. ஆம், எட்வர்ட் கதையில் வந்த சூனியக்கார கிழவி, ராட்சச மனிதன், இரட்டைப்பிறவி பெண்கள், சர்க்கஸ் முதலாளி, ராணுவ அதிகாரிகள் என்று அத்தனை பேரும் ரத்தமும் சதையுமாக வந்து கலந்துகொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள்  எப்படி இருக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை கவித்துவமாக படமாக்கி இருக்கிறார் டிம்.

அப்பா – மகன் உறவை சொல்லும் உன்னதமான படம் இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொரு தந்தையும், தன்னுடைய பிள்ளைக்கு நல்ல கதை சொல்லியாக மாறுவார் என்பது உறுதி. ஏனென்றால் எல்லா உண்மையிலும் பொய் சேரும்போதே, அது அழகாகிறது. அதுதான் வாழ்க்கை. அதுவே மகிழ்ச்சி.

Leave a Comment