என்ன செய்தார் சைதை துரைசாமி – 172
அம்மா உணவகம் மூலம் மக்களின் பசிப்பிணி நீக்கிய மேயர் சைதை துரைசாமியின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சிப் பள்ளிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் முன்னேற்றத்திற்கும் அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும் பார்த்தோம். இனி, பெருநகர சென்னையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ஒரு மேயராக சைதை துரைசாமி மேற்கொண்ட முக்கியமான சில நடவடிக்கைகளை மட்டும் பார்க்கலாம்.
என்ன இல்லை சென்னையில் என்று சொல்லும் அளவுக்கு அளப்பரிய வளங்கள் உள்ளன. இரண்டு நதிகள், ஏராளமான ஏரிகள், உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை, முகத்துவாரங்கள், புதர்க்காடுகள், பல்லுயிர்க் காடுகள், பறவை சரணாலயம் என்று எண்ணற்ற வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் மக்கள் குடியேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவற்றை முறையாக திட்டமிடாத காரணத்தால், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு சாக்கடை, கொசு, பிளாஸ்டிக் குப்பை, தெரு நாய்கள் நிறைந்த நகரமாக சென்னை மாறிவிட்டது. ஆட்சியாளர்கள் நிறைய திட்டங்கள் கொண்டுவந்து சென்னையை அழகு படுத்த முயற்சி செய்தார்கள் என்றாலும், அது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.
சென்னையை சீர்படுத்தும் மாற்றங்களை ஒரே இரவில் கொண்டுவர முடியாது, நீண்டகாலம் உழைக்க வேண்டியிருக்கும் என்பது சைதைக்கு நன்றாகவே புரிந்தது. ஏனென்றால், இன்றும் தினமும் ஏராளமான மக்கள் சென்னையில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். வீடுகள் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருபுறம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் அதேநேரம், மற்றொரு புறத்தில் ஆக்கிரமிப்பு நடக்கிறது.
எனவே, குறுகிய காலத் திட்டங்கள் மூலம் மக்களுக்கும் நகருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தார். இதுவரை நிறைய திட்டங்கள் அதனாலே தோல்வி அடைந்ததையும் உணர்ந்தார். ஆகவே, தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையை பசுமையாக்குவதற்கு ஆசைப்பட்டார். முதல் அடியை சரியாக எடுத்துவைத்தால் பயணம் சிறப்பாக முடியும் என்பார்கள். அந்த வகையில் முதன் முதலாக சென்னை நகரில் இருக்கும் பூங்காக்களின் பக்கம் பார்வையைத் திருப்பினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.