Money மந்திரம்
’’பக்தனே…உன் பக்தியை மெச்சினேன். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்..?’’ என்று கடவுள் நேரில் ஆஜராகி வரம் கொடுப்பதாக இருந்தால், எவ்வளவு கேட்பது என்று தெரியாமல் மனிதர்கள் குழம்பிவிடுவார்கள்.
ஏனென்றால், எவ்வளவு பணம் வாழ்க்கைக்குத் தேவைப்படும் என்று யாருக்கும் தெரியாது. இருக்கும் பணத்தைக் கொண்டு நிம்மதியாக இருப்பவர்கள் ஒருசிலரே, இல்லாத பணத்தைத் தேடி அலைபவர்களே அதிகம்.
இதற்கு ஒரு கதை சொல்வார்கள். வங்கியில் இருந்து வெளியே வந்தவரிடம் இருந்து ஒரு கட்டு நோட்டை லாவகமாக திருடிக்கொண்டான் ஒருவன். பூங்காவிற்கு சென்ற திருடன், அந்த கட்டில் இருந்து இரண்டு நோட்டை எடுத்த நேரத்தில், ஒரு போலீஸ்காரன் வருவதைப் பார்த்ததும், அந்த கட்டு நோட்டுக்குத்தான் போலீஸ் வருகிறது என்று நினைத்து, அந்த கட்டை அங்கேயே போட்டுவிட்டு திருடன் தப்பிவிட்டான்.
உண்மையில் அங்கு வந்தது வாட்ச்மேன். அவனையே போலீஸ்காரன் என்று நினைத்து ஓடிவிட்டான் திருடன். வாட்ச்மேன் ஒரு கட்டு நோட்டை பார்த்ததும் ஆச்சர்யமானான். அந்த நோட்டு கட்டை எண்ணிப் பார்த்தான். 98 மட்டுமே இருந்தது. மீதமுள்ள இரண்டு நோட்டு எங்கே என்று தேடத் தொடங்கினான். அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கினான். அந்த இரண்டு நோட்டுகள் கிடைக்கவில்லை என்றதும், நிம்மதியை இழந்துவிட்டான் வாட்ச்மேன்.
ஆனால் திருடனோ, ‘இன்று நமக்குக் கிடைத்தது இரண்டு நோட்டுகள் மட்டும்தான்’ என்று அவற்றை செலவழித்து சந்தோஷமாக இருந்தான்.
இப்படி, கையில் இருக்கும் பணத்தை அனுபவிக்கத் தெரிந்தவர்களே நிம்மதியாக இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்டால், எதிர்காலமே நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் பங்கு மார்க்கெட்டில் பணம் எண்ணிக்கொண்டிருந்த, ஷேர் மார்க்கெட் நிபுணர் ராகேஷ் ஜூன், அவரது மரணத்துக்கு முன்னர் பணம் பற்றி ஒரு கூட்டத்தில் பேசியது இதுதான்.
‘’பணம் இல்லாதவருக்கு இந்த உலகம் இல்லை என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். அதற்கேற்ப பணம் இருப்பவருக்கு அனுகூலமாக இந்த உலகத்தில் ஏராளமான காரியங்கள் நடக்கிறது. எனவே, பணத்தை எல்லோரும் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர்.
ஆனால், பணம் வைத்திருக்கும் பலரும் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை. பலரும் பணத்தை பாதுகாப்பதாகச் சொல்லி வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர். மகத்தான உண்மை என்ன தெரியுமா..? முதல் மில்லியனை சம்பாதிப்பது மட்டுமே கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம்.
இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை என்னவென்றால், எவ்வளவு பணம் இருந்தால் வாழ்வு நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும்போது அதை எடுத்துப் போக முடியாது.
என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்… தினமும் 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, ‘பெக்’ விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். ஆனாலும், பணத்தை அனுபவிக்க ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளும் இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.
வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது, உங்களுக்கு பொறுப்புணர்வைக் கூடுதலாக கொடுக்கிறது. பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம்.
உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை, நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்றார்.
எனவே, பணம் சம்பாதியுங்கள். கிடைக்கும் பணத்தை அனுபவியுங்கள். அதற்கு மீறி இருப்பதை சேமித்து வையுங்கள். சேமிப்பதற்காக இன்றைய வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம்.
பணத்தை நீங்கள் காக்க வேண்டுமே தவிர, பணத்தால் உங்களை காப்பாற்ற முடியாது. பணம் மனிதனை காப்பாற்ற முடியுமென்றால், எந்த பணக்காரனும் மரணம் அடைந்திருக்க மாட்டார்கள்.